Tuesday, December 24, 2013

நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்!

எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாழ்ந்தார். ஆண்டவரும் அவரை நினைவுகூர்ந்தார். உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். 'நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்' என்று சொல்லி, அவர் அவனுக்குச் 'சாமுவேல்' என்று பெயரிட்டார். அவர் தம் கணவரிடம், 'பையன் பால் குடி மறந்ததும் அவனை ஆண்டவரின் முன்னிலையில் எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்' என்று சொன்னார். (1 சாமுவேல் 1:21-23)

ராபர்ட் ஆல்டர் என்ற இலக்கிய ஆய்வாளர் தான் ஆங்கில இலக்கியத்தில் கற்ற அனைத்துப் பரிமணாங்களையும் விவிலியத்தின் கதையாடல்களில் பயன்படுத்துகின்றார். இலக்கியத்தில் இருப்பது போலவே விவிலியத்திலும் நிறைய ஃபார்முலாக்கள் இருக்கின்றன. ஆல்டர் ஆறு ஃபார்முலாக்களைக் கண்டுபிடித்துள்ளார்: 1) மலடியாயிருக்கும் ஒரு பெண்ணுக்கு ஹீரோவின் பிறப்பு பற்றிய முன்னறிவிப்பு, 2) கிணற்றடியில் பெண் பார்க்கும் படலம், 3) வயல்வெளியில் ஆண்டவரின் தூதர் சந்திப்பு, 4) கடவுள் தனக்குப் பிடித்தமானவர்களைச் சோதிப்பது, 5) பாலைவனத்தின் ஆபத்தும், ஆபத்திலிருந்து விடுதலையும், 6) இறக்கும் கதாநாயகனின் இறுதி வார்த்தைகள். 

இந்த ஆறு ஃபார்முலாக்களில் 'கிணற்றடியில் பெண் பார்க்கும் படலத்தை' நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இன்று முதல் ஃபார்முலாவைப் பார்க்கலாம்:

இந்த முதல் ஃபார்முலாவை வைத்து விவிலியத்தில் ஏழு நிகழ்வுகள் உள்ளன:

1. ஆபிரகாம் மற்றும் சாரா – அவர்களுக்குப் பிறக்கும் ஈசாக்கு (தொநூ 16:1-21:7)
2. ஈசாக்கு மற்றும் ரெபாக்கா – அவர்களுக்குப் பிறக்கும் ஏசா, யாக்கோபு (தொநூ 25:19-26)
3. யாக்கோபு மற்றும் லேயா, ராக்கேல் - அவர்களுக்குப் பிறக்கும் பன்னிரு புதல்வர்கள் (தொநூ 29:31-30:24)
4. மனோவாகு மற்றும் அவரின் மனைவியும் - அவர்களுக்குப் பிறக்கும் சிம்சோன் (நீதி 13:2-25)
5. எல்கானா மற்றும் அன்னா – அவர்களுக்குப் பிறக்கும் சாமுவேல் (1 சாமுவேல் 1:1-21)
6. சக்கரியா மற்றும் எலிசபெத்து – அவர்களுக்குப் பிறக்கும் யோவான் (லூக்கா 1:5-80)
7. யோசேப்பு மற்றும் மரியா – அவர்களுக்குப் பிறக்கும் இயேசு (லூக்கா 1:26-2:7, மத் 1:18-25)

இந்த ஏழு நிகழ்வுகளிலும் பொதுவானவைகள் மூன்று:

1. மனைவியின் மலட்டுத்தன்மை பற்றிய குறிப்பு
2. மலட்டுத்தன்மை முடிந்து குழந்தை பெறுவாய் என்ற வாக்குறுதி
3. கருத்தரித்தல் மற்றும் குழந்தை பெறுதல்

இன்று நாம் சிந்திக்கும் எல்கானா – அன்னா வழியாக நிகழும் சாமுவேலின் பிறப்பு நிகழ்விலும் இந்த மூன்று பண்புகள் உள்ளன. அன்னா தன் குழந்தையை இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார். 'நேர்ச்சை' என்பது பழங்கால சமயங்கள் மற்றும் சமூக வழக்கங்களில் முக்கியமானதாக இருக்கின்றது. 

'ஒரு தாய் செய்த நேர்ச்சைக்கு குழந்தை பலிகடா ஆக வேண்டுமா?' என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் எதிர்வாதமாக இருக்கிறது. 

இன்றும் நேர்ச்சை பல முகங்களில் வலம் வருகின்றது. 'நீ நேர்ந்து கொண்டதை இறைவனுக்குச் செலுத்து' என்று மோசேயின் கட்டளையும் பழைய ஏற்பாட்டில் உள்ளது. 

சாமுவேலின் பெயர் நமக்குக் கற்றுக் கொடுப்பது இதுதான்: 'இறைவன் நம் குரலைக் கேட்பார்!'

3 comments:

  1. Anonymous12/24/2013

    இலக்கிய ஆய்வாளர்கள் கொடுத்த பார்முலாக்களுக்கும் மேலாக நம் மனத்தைத் தொடுவது ''இறைவன் நம் குரலைக்கெட்பார்.''ஆம்,நம் இறைவன் நம்.வேண்டுதல்களுக்கு மௌனம் காப்பவரல்ல.தக்க நேரத்தில் தக்க விதத்தில் நம் குரலுக்கு செவி சாய்ப்பார்.நம்பிக்கையுஎன் காத்திருப்போம்.ஆசிரியருக்கும்,அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Anonymous12/24/2013

    குழந்தை இயேசுவை ஞாபகமூட்டும் வகையில் குட்டிச்செல்லங்களையே படத்தில்இந்நாட்களில் போடுகிறார் ஆசிரியர்..இன்றைய படத்தில் உள்ள குட்டிப் பெண்ணும் அவள் வழியே சொல்லப்படும் வாசகமும் அருமை

    ReplyDelete
  3. Anonymous12/24/2013

    குழநதை இயேசுவை ஞாபகமூட்டும் வகையில் இந்நாட்களில் குட்டிச்செல்லங்களையே படத்தில் போடுகிறார் ஆசிரியர்..இன்றையப் படத்தில் உள்ள குட்டிப் பெண்ணும் அவள் வழியாய் சொல்லப்படும் வாசகமும் அருமை.

    ReplyDelete