Sunday, December 29, 2013

முகநூல் குடும்பமும் திருக்குடும்பமும்

உலகில் ஏறக்குறைய எல்லோர் உதட்டிலும் தவழும் ஒரு வார்த்தை: ஃபேஸ்புக் - முகநூல். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், எப்பவோ பழகியிருந்தாலோ, புதிதாகப் பழக நினைத்தாலோ இந்தக் குடும்பத்திற்குள் போய்விட்டால் போதும். மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்ளலாம். பேசலாம். சிரிக்கலாம். கேலி செய்யலாம். கோபப்படலாம். பிடித்திருந்தால் 'லைக்' போடலாம், 'ஷேர்' செய்யலாம். ஆனால் இது ஒரு தொட்டும் தொடாத குடும்பம். யாருக்கும் யாரைப்பற்றியும் கவலை இல்லை. யார் அக்கறையும் யாருக்கும் தேவையில்லை. இந்த முகநூல் குடும்பத்தைப்போலத்தான் இன்று பல குடும்பங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. வேலை, படிப்பு என பெற்றோர், பிள்ளைகளை விட்டும், குழந்தைகள் தன் உடன்பிறந்தவர்களை விட்டும் பிரிந்து நி;ற்கின்றனர். வேலைப்பளு, மன அழுத்தம், சோர்வு, பரபரப்பு, அவசரம் என்று சதா ஓடிக்கொண்டேயிருக்கும் மனிதர்களுக்கு குடும்பம் வெறும் துணிமாற்றும் அறைகளாக மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது.

படைப்பு, இஸ்ராயேல் மக்களின் விடுதலை வரலாறு, மீட்பரின் வருகை என இம்மூன்று முக்கிய நிகழ்வுகளிலம் குடும்ப உறவு இழையோடி நிற்கின்றது. மேலும், ஆபிரகாம் - சாரா, ஈசாக்கு – ரபேக்கா, யாக்கோபு – லேயா, ரேச்சல் என முதுபெரும் தந்தையர்களின் குடும்பங்களும், தோபியா – சாரா என இணைத்திருமறையின் குடும்பமும், யோசேப்பு – மரியாள் என புதிய ஏற்பாட்டுக் குடும்பமும் குடும்ப உறவின் அன்பை, தியாகத்தை, பகிர்தலை, எதிர்நோக்கியிருத்தலை நமக்குக் கற்பிக்கின்றன. 

இயேசுவை நாம் சந்திக்க வேண்டுமானால், அங்கே அவரது குடும்பத்தையும் நாம் சந்திக்க வேண்டும். '(இடையர்கள்) விரைந்து சென்று மரியாவையும், யோசேப்பையும், தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்' (லூக் 2:16).

1. அமைதி. இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளை லூக்கா நற்செய்தியாளர் தொகுக்கும்போது, திருக்குடும்பத்தைப் பற்றிய இடத்திலெல்லாம் ஒருவிதமான அமைதியை அடிநாதமாக எழுதுகின்றார். 'மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்' (லூக் 2:19). இயேசுவின் பிறப்பு அவர்களை ஆழ்மன அமைதிக்கு அழைத்துச் செல்கின்றது. நம் குடும்பங்களில் இருக்க வேண்டியது இத்தகைய அமைதிதான். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் மிக நீண்ட பயணம் தன் ஆழ்மனத்தை நோக்கிய பயணம்தான். அமைதியில் திளைக்கும் குடும்பம்தான் வெற்றிபெற முடியும். எந்நேரமும் சண்டை சச்சரவுகளையும், எரிச்சலையும், சலசலப்பையம் கொண்டிருக்கும் குடும்பம் தோல்வியில்தான் முடியும். கற்களும், செங்கற்களும் ஒரு அழகிய கட்டடத்தைக் கட்டலாம். அதை இல்லமாக மாற்றுவது அமைதியான மனித மனங்கள்தாம்.

2. ஒழுங்கு. இதில் ஒழுங்கு என்பது ஒருவர் மற்றவரைக் கட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கும் வேகத்தையல்ல, மற்றவரின் நலன் காப்பதையே நான் குறிப்பிடுகிறேன். சாலையில் நாம் செல்கின்றோம். வழியில் எச்சரிக்கைகள், வேகத்தடைகள், பச்சை - மஞ்சள் - சிகப்பு என விளக்குகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் நம்மைக் கட்டுப்படுத்தவா? நம் பயண வேகத்தைக் குறைத்து நம் சுமையைக் கூட்டுவதற்காகவா? இல்லை. நம் நலனுக்காக. நாம் பத்திரமாய் வீடுதிரும்புவதற்காக. அதுபோலத்தான், குடும்பத்தில் ஒருவர் மற்றவரிடம் விரும்புகின்ற ஒழுக்கமும், ஒழுங்கும் அடக்கியாளும் கட்டுப்பாட்டையல்ல, நலனையே கொண்டிருக்க வேண்டும். மேலும், மற்றவர் நலன் என்று வரும்போது, சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் தூக்கியெறியத் துணிய வேண்டும். யோசேப்பு மரியா கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்தும் ஏற்றுக்கொண்டபோது, யூத மரபை மீறத் துணிகி;ன்றார். மரியாவின் மற்றும் குழந்தையின் நலன் காக்கின்றார்.

3. உழைப்பு. உழைப்பிற்குப் பாதுகாவலராக நாம் யோசேப்பைக் கொண்டாடுகின்றோம். உழைப்பின் வேர்கள் கசப்பாக இருக்கும். ஆனால் அதன் கனிகளோ என்றும் இனிமையானவை. உழைப்பு என்பது பணத்திற்காக வேலைசெய்வது அன்று. மாறாக, நம்மை நாமே முழுமனிதர்களாக மாற்றுவதுதான் உழைப்பு. நாம் செய்கின்ற வேலை என்பது நம் இயல்பை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, அதுவே நம் அடையாளமாக மாறிவிடக்கூடாது. அடையாளமாக மாறும்போதுதான், அதை வைத்து நாம் மற்றவர்களை நாம் மட்டம்தட்ட ஆரம்பிக்கின்றோம். உழைப்பு குறையும்போது சுயநலமும், பதுக்குகின்ற சிந்தனையும் தலைதூக்குகின்றது.

4. இறைநம்பிக்கை. இறைநம்பிக்கை திருக்குடும்பத்தின் ஆணிவேராக இருந்ததுபோல நம் வாழ்விலும் இருக்க வேண்டும். திருக்குடும்பம் எருசலேமுக்குச் சென்ற நிகழ்வை வாசித்தால் இந்த நம்பிக்கை புலப்படும்.இறைவன் மையமாக இருக்கும் குடும்பமே இணைந்து நிற்கும். நம்மிடம் குறைவுபடுகின்ற வெறுமையை மற்றவரிடம் தேடும்போது வெறுமையும், வெறுமையும் இணைந்து வெறுமையே மிஞ்சும். ஆனால், அந்த இடத்தில் இறைமையைத் தேடினோமென்றால் நம் குறைகள் நிறைவாகும்.

2 comments:

  1. Anonymous12/30/2013

    பல உணர்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்ஆசிரியர்.அதிலும்இன்றைய குடும்பங்களின் நிலைபாட்டை முக நூல்கலாச்சாரத்தோடு ஒப்பிட்டுக்
    காட்டியிருப்பது 'need of the hour'.அதேநேரத்தில் நாம்.அமைதி,ஒழுக்கம்,உழைப்பு,
    இறை நம்பிக்கை என்ற நியதிகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நம் குடும்பங்களும் ''திருக்குடும்பங்களாக'' மாறலாம் என்ற நம்பிக்கையை விதைத்திருப்பது அழகு.

    ReplyDelete