Sunday, December 29, 2013

உம் அடியான் கேட்கிறேன்

பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, 'சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, 'ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்' என்று பதில் சொல்' என்றார். சாமுவேலும் தன் இடத்திற்குச் சென்று படுத்துக்கொண்டான். அப்போது ஆண்டவர் வந்து நின்று, 'சாமுவேல், சாமுவேல்' என்று முன்புபோல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், 'பேசும், உம் அடியான் கேட்கிறேன்' என்று மறுமொழி கூறினான். (1 சாமுவேல் 3:9-10)

சாமுவேலை இறைவன் அழைக்கின்றார். சாமுவேலின் துறவறம் இங்கே தொடங்குகின்றது. 'துறவறம்' என்பது இல்லறத்தோடு கலந்ததாகவே இருக்கின்றது தொடக்க காலத்தில்.

இல்லறத்திலிருந்து விலகி நிற்பது மட்டும்தான் துறவறமா? துறவறம் என்றால் என்ன?

விவேகானந்தர் தம் 14 வயதில் துறவறம் மேற்கொள்ள விரும்பி தன் தாயிடம் அனுமதி கோரச் செல்கின்றார். 'அம்மா, நான் துறவறம் மேற்கொள்ளப் போகிறேன். அனுமதி தருவீர்களா?' என்ற கேட்ட அவரிடம் அவருடைய தாய், 'போய், சமையலறையிலிருந்து கத்தியை எடுத்துக்கொண்டு வா' என்கிறார். இவரும் எடுத்து வருகிறார். தாய் சொல்கிறர், 'இப்போது நீ போக முடியாது'. ஒரு மாதம் கழித்து மறுபடியும் அனுமதி கேட்கின்றார். மறுபடியும் தாய் கத்தியை எடுத்துவரச் சொல்கின்றார். மறுபடியும் 'இப்போது நீ போக முடியாது' என்று அனுமதி மறுக்கின்றார். மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் அவர் தன் தாயிடம் அனுமதி கேட்க வருகின்றார். இம்முறையும் கத்தியை எடுத்துவரச் சொல்கின்றார். எடுத்து வந்தவுடன் தாய், 'மகனே, நீ இப்போது துறவறத்திற்குச் செல்லலாம!'; என்று அனுமதி கொடுக்கின்றார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. 'அம்மா, ஒவ்வொரு முறையும் கத்தியை எடுத்துவரச் சொன்னபோது கத்தியைத்தானே எடுத்து வந்தேன். இப்போது மட்டும் எப்படி அனுமதி கொடுக்கிறீர்கள்' என்று கேட்கின்றார். 'மகனே, முதல் இரண்டு முறை கத்தியை எடுத்து வந்தபோது பாதுகாப்பான கைப்பிடியை நீ வைத்துக்கொண்டு வெட்டுகின்ற பகுதியை என்னிடம் நீட்டினாய். இன்றுதான் வெட்டுகின்ற பகுதியை நீ பிடித்துக்கொண்டு பாதுகாப்பான பகுதியை என்னிடம் நீட்டினாய். துறவறம் என்பதும் அதுதான். வெட்டுகின்ற பகுதியை நீ பிடித்துக்கொண்டு பாதுகாப்பான பகுதியை மற்றவர்களுக்கு நீட்டுவது.' 

நாம் ஒருவர் மற்றவருக்கு நம்மையே கையளிப்பதே துறவறம்!

பேசும், உம் அடியான் கேட்கிறேன்!

1 comment:

  1. Dear Yesu,நாம் ஒருவர் மற்றவருக்கு நம்மையே கையளிப்பதே துறவறம்! very inspirational Thanks.

    ReplyDelete