Friday, December 20, 2013

இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்?

நாகோமி ரூத்திடம், 'இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்? அது யாருடைய வயல்?' என்று கேட்டுவிட்டு, 'உனக்குப் பரிவு காட்டியருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவாராக!' என்றார். ரூத்து தம் மாமியாரிடம் தாம் கதிர் பொறுக்கின வயல் இன்னாருடைய என்பதைத் தெரிவிப்பதற்காக, 'நான் இன்று கதிர் பொறுக்கின வயலின் உரிமையாளர் போவாசு' என்றார். நமோமி அவரிடம், 'அப்படியா? வாழ்வோர்க்கும் இறந்தோர்க்கும் என்றும் பேரன்பு காட்டும் ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்குவாராக' என்றார். 

விவிலியம் எழுதப்படுவதற்கு முன் அது பல ஆண்டுகள் வாய்மொழியாகவே பரிமாறப்பட்டது. பல நாட்டுப்புறக் கதைகளாக விளங்கிய கதைகளே பின் தொகுக்கப்பட்டு விவிலியமாக உருவானது. இது விவிலியத்திற்கு மட்டுமல்ல. எல்லாப் பழம்பெரும் இலக்கியங்களுக்கும் பொருந்தும். நம் இந்திய நாட்டின் ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் ஒரு காலத்தில் வாய்வழியாகப் பரிமாறப்பட்டவையே. மிகப்பெரும் புராணங்களாகத் திகழ்கின்ற இராமாயாணமும், மகாபாரதமும் கூட பல தெருப்பாடகர்களால் முதலில் பாடப்பட்டவையே. பின்பே அவை எழுத்துருவம் பெற்றன. 

வாய்மொழி வழக்கில் இருக்கின்ற காவியங்களை நினைவில் வைப்பதற்காக ஒரு குறிப்பிட்ட ஃபார்முலா வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக, போரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் இப்படி இருக்க வேண்டும். அரசவை குறித்த நிகழ்வுகள் இப்படி இருக்க வேண்டும். இதே போலத் தான் விவிலியத்திலும் நிறைய ஃபார்முலாக்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒரு ஃபார்முலா 'பெண்பார்க்கும் படலம்'. பெண்பார்க்கும் படலம் பின்பற்றும் ஒரு ஃபார்முலா இதுதான்: ஒருவர் பெண் கேட்டு வருவார். வருகின்ற இடத்தில் கிணறு இருக்கும். கிணற்றுக்கு நீர் எடுக்க மணப்பெண் வருவார். பெண் பார்க்க வருபவர் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வார். பெண் விரைந்து வீட்டிற்கு ஓடுவார். பின் விருந்து நடக்கும். தொடர்ந்து திருமண ஒப்பந்தம் நடைபெறும். ஈசாக்கின் பெண் பார்க்கும் படலம் (தொநூ 24), யாக்கோபின் பெண் பார்க்கும் படலம் (தொநூ 29) மற்றும் மோசேயின் பெண் பார்க்கும் படலம் (விப 3) என அனைத்தும் இதே ஃபார்முலாவை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. 

போவாசு மற்றும் ரூத்து சந்திப்பிலும் இதே ஃபார்முலா மறைமுகமாக உள்ளது. போவாசு வயலுக்கு வருகிறார். ரூத்து போவாசிடமிருந்து தண்ணீர் பெறுகிறார். தன் மாமியாரிடம் திரும்பி ஓடுகிறார். விருந்திற்கு பதில் 'பார்லி' அறுவடை அடையாளமாக உள்ளது. இப்படியாகவே சவுலின் பெண் பார்க்கும் படலமும் உள்ளது. புதிய ஏற்பாட்டில் இயேசு சமாரியப் பெண்ணைச் சந்திக்கும் நிகழ்விலும் இதே ஃபார்முலா உள்ளது.

விவிலியத்தையும் இலக்கியத்தையும் ஒட்டி வைத்துப் பார்க்கும்போது இலக்கிய நயத்தோடு அமைந்துள்ளது விவிலியம். விவிலியம் ஒரு கிறித்தவ மதப் புத்தகம் அல்ல. அது உலகிற்குத் தன்னைத் திறந்து காட்டும் ஒரு இலக்கியக் களஞ்சியம். 

மற்றொரு புறம் நம் மண்ணின் இலக்கியங்கள் விவிலியம் என்னும் இலக்கியத்தைவிட அதிகச் செறிவுள்ளதாகவே உள்ளன. இது நம் மண்ணின் இலக்கியங்களின் பெருமையை உணர்த்துகிறது. யாரோ நமக்குக் கற்பித்த இலக்கியத்தின் மீதுள்ள பற்றைவிட நம் இலக்கியங்களையும் குனிந்து பார்ப்பது இன்று அவசியமாகிறது. 

விவிலியம் சாதாரண மனிதர்களின் வாய்மொழியாய் வலம் வந்த ஒன்றுதான். ஆனால் இன்று ஏனோ அது புத்தக வடிவெடுத்து பல வீட்டு அலமாரிகளில் முடங்கி விட்டது. சிலருக்கு விவிலியம் பணம் வைக்கும் பர்சாகவும், மெடிக்கல் சீட்டு, கரண்ட் பில் சேகரிக்கும் இடமாகவும் மட்டும் மாறிவிட்டது வருத்தத்திற்குரிய ஒன்று.

சில வருடங்களுக்கு முன்னால் நம் வீடுகளில் தட்டில் சோறை வைத்து ஏதாவது கதை சொல்லி உணவு ஊட்டுவார்கள். எங்கள் வீட்டில் எல்லாக் கதைகளும் சொல்லப்படும் - இந்து, இசுலாம், பவுத்தம், கிறிஸ்தவம், நாத்திகம் அனைத்தும் பேசப்படும். இன்று என் தங்கையிடம், 'நீ எப்படி உன் மகனுக்கு உணவூட்டுகிறாய்?' எனக் கேட்;டால், 'அவன் ஆதித்யா டிவி பார்த்துக்கிட்டே சாப்பிடுகிறான்,' என்கிறாள். பெரிய தலைமுறை இடைவெளி!

'இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்?'

1 comment:

  1. Anonymous12/20/2013

    Hello Father,Hold on!ஆதித்யா டி.விக்கு அடிமையாகிப் போனது உங்கள்.தங்கை மட்டுமல்ல, அவளுக்கு அண்ணன்மார்களும் இருக்கிறார்கள்.அதைப் பார்த்துக் கொண்டே எந்த வேலையையும் செய்வார்களாம்.'multitasking' என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள்.இதைப் பார்த்தாவது திருந்தட்டும்.

    ReplyDelete