Thursday, December 12, 2013

எனக்கு வேறு என்ன இருக்கிறது?

மீக்காவும், மீக்காவின் அண்டை வீட்டாரும் தாண் மக்களை நோக்கிக் கத்தினர். தாண் மக்கள் திரும்பிப் பார்த்து மீக்காவிடம், 'நீ ஏன் ஆள்திரட்டி வருகின்றாய்? உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டனர். அவர், 'நான் செய்த தெய்வங்களை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள். குருவையும் கூட்டிக் கொண்டு செல்கிறீர்கள். எனக்கு வேறு என்ன இருக்கிறது? இப்படி இருக்க உனக்கு என்ன வேண்டும் என்று என்னையே கேட்கிறீர்களே?' என்றார். தாண் மக்கள் அவரிடம், 'எங்களோடு விவாதம் செய்யாதே! செய்தால் கொடிய மனம் கொண்ட இம்மனிதர் உங்களைத் தாக்குவர். நீயும் உன் வீட்டாரும் உயிரிழக்க நேரிடும்' என்றனர். மீக்கா அவர்கள் தம்மைவிட வலிமை வாய்ந்தவர்கள் என்று கண்டு தம் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார். (நீதித் தலைவர்கள் 18:23-26)

இந்த நிகழ்வை நான் அடிக்கடி கற்பனை செய்து பார்த்ததுண்டு. மீக்காவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் எப்படி சத்தம் போட்டிருப்பார்கள்? மீக்கா எப்படி ஓடியிருப்பார்? யாரையெல்லாம் துணைக்கு அழைத்திருப்பார்? எவ்வளவு வேகமாக ஓடிச் சென்றிருப்பார்? மீக்காவுக்கும் தாண் குலத்தாருக்கும் இடையே நடக்கும் உரையாடல் நகைச்சுவையான ஒன்று. 'எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டீர்கள். என் வாழ்வாதாரங்களையே அழித்து விட்டீர்கள். அதற்கு நான் குரல் கொடுத்தால், 'உனக்கு என்ன பிரச்சினை?' என்று என்னையே கேட்கிறீர்கள்'. அவர்களின் வலிமைக்கு முன் தன்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் பின்வாங்குகிறார்.

வலிமையின் முன் மென்மை பணிந்து போவது ஒரு பரிதாபமான சூழல். 

'மூடர்கூடம்' திரைப்படத்தில் வரும் ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது. அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் உட்பட நான்கு பேர் ஒரு வீட்டிற்குத் திருடச் சென்றிருப்பர். அந்த வீட்டில் உள்ளவர்களையெல்லாம் ஒரு அறையில் சிறைப்பிடித்து வைத்து வீட்டை நோட்டமிட்டுக் கொண்டிருப்பர். அப்போது அந்த பணக்கார தொழிலதிபர் திருட வந்த கதாநாயகனைப் பார்த்துக் கேட்பார்: 'ஏன்டா! இப்படித் திருடி பிழைக்கிறீங்களே! உங்களுக்கெல்லாம் வெட்கமாயில்லை?' 

அதற்குக் கதாநாயகன் அழகாகப் பதில் சொல்வார்: 'எங்களைத் திருடன்னு சொல்றீங்களா? அப்படின்னா நீங்க யாரு? தொடக்கத்திலே நாம எல்லோருமே அம்மணமாதான் இருந்தோம். நாகரீகம்னு நீங்க ஒன்னைத் தொடங்கி உங்களையே நீங்க உயர்வுன்னு நினைச்சுகிட்டீங்க. உங்ககிட்ட வேலி இருக்குதுங்கிற காரணத்திற்காக ஒட்டுமொத்த குளத்திற்கே வேலி போட்டு உங்களோடதுன்னு எடுத்துக்கிட்டீங்க. நாங்க அம்மணமாவே இருந்துட்டோம். ஒரு மாமரத்துல 100 மாம்பழம் இருக்குதுன்னு வச்சிக்குவோம். அந்த மரத்துக்கு கீழே 100 பேர் பசியோட நிற்கிறாங்க. அங்க நிற்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பழம் என்பது இயற்கை எழுதி வைத்த நீதி. ஆனால் அதுல உங்கள மாதிரி 5 பேர்கிட்ட ஏணி இருந்ததனால வேகமாக ஏறி நீங்களே எல்லாத்தையும் பறிச்சிகிட்டீங்க. 95 பேர் பசியோட வீட்டுக்குப் போனாங்க. அடுத்த நாள் நீங்க அவங்ககிட்ட சொன்னீங்க: 'தினமும் வந்து எனக்கு பழம் பறிச்சு தாங்க, உங்களுக்குச் சம்பளம் தாரேன்'னு சொல்லி அவங்க பறிச்சிக் கொடுத்த மாம்பழத்திலேயே ஒரு கீத்து (கீற்று) கொடுத்து, 'இதுதான் உன் சம்பளம்' என்று சொல்லி புத்திசாலித்தனமா அனுப்பி வச்சீங்க. இதற்கு ஒரு தியரியும் கொடுத்து, 'சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்' என்று சொல்லி உங்களையே தட்டிக் கொடுத்துக் கொண்டீர்கள். அந்தத் தியரி விலங்குகளுக்குத் தான் பொருந்தும். அப்போ நீங்க மனிதர்கள் இல்லையா? ஒருத்தனிடமிருந்து எடுப்பது மட்டும் திருட்டு அல்ல. ஒருத்தன எடுக்க முடியாம பண்றதும் திருட்டுத்தான்!'

திருட்டை நியாயப்படுத்த நான் இங்கே இதைக் குறிப்பிடவில்லை. இந்த 100 மாம்பழ எடுத்துக்காட்டில் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையே புதைந்து கிடக்கிறது என்பதுதான் உண்மை. இன்றும் 'வலிமை' தான் ஆட்சி செய்கின்றது. நேற்று டில்லியில் நடந்த ஒரு பொருளாதார மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் மேதகு ப. சிதம்பரம் சொன்னது என்ன தெரியுமா? 'நாட்டில் விலைவாசி உயர்ந்ததற்குக் காரணம் மாநில அரசுகளாம்!' அத்தோடு மட்டும் அவர் நிறுத்தவில்லை. தொடர்ந்து சொன்னார்: 'மத்திய அரசு வரி விகிதங்களைச் சரி செய்து, அந்நியப் பொருட்களை இறக்குமதி செய்வதை விடுத்து, உள்நாட்டுப் பொருட்கள் உற்பத்தியையும், பயன்பாட்டையும் அதிகப்படுத்த வேண்டுமாம்!'. இவற்றைச் செய்வதற்குத்தானே அமெரிக்காவின் 'ஹார்வர்டில்' படித்த ஒருவரை பிரதமராகவும், மற்றவரை நிதியமைச்சராகவும் வைத்திருக்கிறோம். அதை நீங்கதான சார் செய்யணும்? 'மத்திய அரசு' செய்யணும்னு சொல்றீங்களே. அப்ப நீங்க சென்ட்ரல் கேபினட்டில் இல்லையா?' இன்னும் கொஞ்ச நாள் போனால் இவரே, 'விலைவாசிக்குக் காரணம் நம் தெருக்களில் நின்று துணி தேய்க்கும் குப்புசாமியோ, நம் வீட்டிற்கு நியூஸ்பேப்பர், பால் பாக்கெட் போடும் குமாரசாமியோ தான்' என்பார். வாழ்க ஜனநாயகம்! வலிமை படைத்தோர் என்பதற்காக என்னவானாலும் செய்யலாம் நம் ஊரில். பாவம் நம் மக்கள். 

மற்றவர்களின் பண பலம், ஆள் பலம், செல்வாக்கிற்கு முன்னால் தங்கள் உரிமைகளும், வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு இன்றும் பல மீக்காக்கள் மௌனமாகத் தங்கள் வீடு திரும்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

'எனக்கு வேறு என்ன இருக்கிறது?'

1 comment:

  1. Anonymous12/13/2013

    ''எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் நிலைதான் மாறாதா?''
    என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாயப்பொறுப்போடு சிந்தித்து செயல்பட்டால் ஒழிய இந்த சமுதாய ஏற்றத்தாழ்வை சரி செய்வது பகல்கனவுதான்.ஆசிரியரின் கோபம் நியாயமான ஒன்றுதான். ஆனால் அது அரசியல்வாதிகள் மீதா இல்லை அவர்கள் படித்த படிப்பின் மீதா என்று தெரியவில்லை.இருப்பினும் கொடுத்த விழிப்புணர்வுக்குப் பாராட்டுக்கள்.
    வரி செய்வரு பகல் கணவுதான்.

    ReplyDelete