Thursday, June 25, 2020

உன்னை நான் நினையாவிடில்

இன்றைய (26 ஜூன் 2020) பதிலுரைப் பாடல் (திபா 137)

உன்னை நான் நினையாவிடில்

நேற்றைய மற்றும் இன்றைய முதல் வாசகமும் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட நிகழ்வை நம் கண்முன் கொண்டுவருகின்றன. ஆண்டவருடைய நகரம், ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டு, ஆண்டவருடைய மக்கள் தாங்கள் முன்பின் தெரியாத ஒரு நாட்டினரால் கொள்ளையடிக்கப்படுகின்றனர். ஆண்டவருடைய உடன்படிக்கையை மீறியதாலும், சிலைவழிபாடு செய்ததாலும் இந்த நிகழ்வு நடந்தது என்று இஸ்ரயேல் மக்கள் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொன்னாலும், 'ஒரு நகரில் பத்துப் பேர் நீதிமான்களாக இருந்தால், அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு நான் நகரை அழிக்க மாட்டேன்' (காண். தொநூ 18:32)இல் ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுத்த கடவுள் தன் வாக்கை மறந்துவிட்டாரோ? என்று புலம்பவும், தங்கள் நாட்டில் பத்து நீதிமான்கள் கூட இல்லாமல் போனார்களோ என்று ஆதங்கப்படவும் செய்கின்றனர்.

அவர்களை மீண்டும் கூட்டிவந்து ஆண்டவர் அவர்களைப் பெரிய இனமாக்குகின்றார். இருந்தாலும் அழிவு அழிவுதானே.

அவர்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டுச் சென்றபோது, அவர்கள் பாடிய பாடலாக திபா 137 விளங்குகிறது.

ஒரு தனி மனித மற்றும் குழுமத்தின் வருத்தம், துன்பம், வெறுமை, இழப்பு, புலம்பல், கோபம், பகை அனைத்தையும் ஒரே பாடலுக்குள் கொண்டுவருகிறார் ஆசிரியர்.

மனிதன் கதைகளால் கட்டப்பட்டவன். கதைகளால் கட்டப்பட்ட அவன் தன் கதையை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்தக் கதையைப் பாடலாக்கிவிடுகின்றான். அந்தப் பாடலை யார் பாடினாலும் அந்த நபருக்குள் ஆதி மனிதன், நாடுகடத்தப்பட்ட மனிதன், அடிமையாகிப் போன மனிதன் மீண்டும் வந்து சில நிமிடங்கள் வாழ்ந்துவிட்டுப் போகின்றான். வாசித்த மனிதன் மறைந்துபோன அந்த மனிதனின் சோகத்தை தன்மேல் அப்பிக் கொண்டு தானும் கொஞ்ச தூரம் வழிநடக்கின்றான்.

மண், கோவில், கடவுள் என அனைத்தையும் இழந்து தங்கள் நாட்டைவிட்டு பாபிலோனியாவிற்கு அடிமைகளாக அழைத்துச்செல்லப்படும்போது அவர்கள் கடக்கின்ற ஒரு ஆற்றங்கரையில் நடக்கும் நிகழ்வே இப்பாடல். இந்தப்பாடலில் எண்ணற்ற வினைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன: அமர்ந்து, அழுதோம், யாழ்களை மாட்டி வைத்தோம், பாடும்படி, கேட்டனர், கடத்திச் சென்றோர், இசைக்குமாறு, பாடுவோம், மறந்தால், சூம்பிப்போவதாக, நினையாவிடில், கருதாவிடில், ஒட்டிக்கொள்வதாக, வீழ்ந்த, இடியுங்கள், தள்ளுங்கள், சொன்னார்கள், பாழாக்கும், திருப்பிச் செய்வோர், பிடித்து, மோதி, அடிப்போர் என அடுக்கடுக்காக வினைச்சொற்களைப் பயன்படுத்துகின்றார் இதன் ஆசிரியர். இந்தப் பாடலை வாசித்தால் அதில் உள்ள வேகம் கண்கூடாய்த் தெரியும்.

 'ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்' - இவையே இந்தப் பாடலின் மையமாக உள்ள வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தங்கள் இறைவனின் மேல் அவர்கள் கொண்டிருந்த அளவில்லாத பற்றையும், தாங்கள் 'அந்நியப்படுத்தப்பட்ட' நிலையையும் மிக அழகாகப் பிரதிபலிக்கின்றது. இன்று நான் பகிர்ந்து கொள்ள விழைவது இதுதான்: alienation. இந்த வார்த்தையை தமிழாக்கம் செய்ய முயன்றேன். 'அந்நியப்படுத்தப்படுதல்', 'தனிமைப்படுத்தப்படுதல்' போன்ற வார்த்தைகள் இதற்கான ஒரு அர்த்தத்தைத்தான் தருகின்றன. 'திக்கற்ற நிலை' என்ற வார்த்தை ஏறக்குறைய இதற்கொட்டிய அர்த்தத்தைத் தருகின்றது.

இப்பாடலில் காட்டப்படும் இஸ்ராயேல் மக்களின் உணர்வு இதுதான்: திக்கற்ற நிலை. இன்று கொரோனாவின் பின்புலத்தில் நாமும் திக்கற்ற நிலையில் இருக்கின்றோம். நம் தவறா? மோடியின் தவறா? எடப்பாடியின் தவறா? யார் தவறு? என்று தெரியாமல், நம் நோயை இறைவன்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டது அரசு. 'பிரதம மந்திரி அக்கறை கொள்கிறார்' என்ற போலிப் பிரச்சாரம் கேட்டு அள்ளிக் கொடுத்தவர்கள் எல்லாம், தங்கள் அறையில் கணிணியின் மவுஸ் பிடித்துக்கொண்டு, 'அடுத்து என்ன செய்வது?' என யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

இஸ்ராயேல் மக்களின் திக்கற்ற நிலையும், அவர்களின் அழுகையும் நமக்குச் சொல்லும் பாடம் என்ன? நாம் எப்போது அழுகிறோம்? அதிக மகிழ்வையும், அதிக துன்பத்தையும் நம் கண்கள் மொழிபெயர்க்கும் முயற்சியே 'அழுகை'.

நம் தனிமைப்படுத்தப்பட்ட நிலை நமக்கு அழுகையைத் தருகின்றது. கருவறையின் சுகத்தை அனுபவித்த குழந்தை பிறந்தவுடன் அழுகிறது. ஏனெனில், இந்த உலகம் அதற்குத் தனிமையாகத் தெரிகிறது. வீட்டில் ஓடியாடி விளையாடும் குழந்தை முதல் நாள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றதும் அழுகிறது. தனிமை. பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு முடித்து வேலை என்று சென்றால் அங்கும் முதல்நாள் தனிமை. தன் பெற்றோர், உடன்பிறப்புக்களை விடுத்து புதிய திருமண வாழ்க்கைக்குள் நுழையும்போது அங்கேயும் தனிமை. பத்து ஆண்டுகள் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டு குருத்துவ அருட்பொழிவிற்குப்பின் பங்குத்தளத்திற்கும் செல்லும் அருள்பணியாளரின் கண்களிலும் கண்ணீர். ஒவ்வொரு வருடம் புதிய பங்குத்தளத்திற்குச் சென்றபோதும் நான் அழுதிருக்கிறேன்!

இதுதான் நமக்கு எல்லாம் என்று பற்றிக்கொண்டிருக்கும் ஒன்று நம்மை விட்டுப் பறிபோகும்போது நம்மையறியாமலேயே அழுது விடுகிறோம். நமக்கு மிக நெருக்கமானவரின் பிரிவு, இறப்பு, தேர்வில் தோல்வி, உறவுகளில் விரிசல், ஏமாற்றம் என பல நிலைகளில் நாம் தனித்துவிடப்படுகிறோம்.

வாழ்வில் என்ன நடந்தாலும், என்னதான் திக்கற்றநிலை வந்தாலும், என்னதான் தனிமைப்படுத்தப்பட்டாலும் அதற்குக் காரணமான நபர்களைத் தேடி பழிதீர்ப்பதை விடுத்து, 'எங்கே நடந்தது தவறு?' என்று ஆராய்ந்தால் அதுவே புதிய வாழ்க்கையின் முதற்படி.

என்னதான் தாங்கள் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டாலும், கொஞ்சம் நம்பிக்கை அவர்களின் நெஞ்சுக்குழிக்குள் இருந்ததால்தான், 'எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாகக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!' என்று அவர்களால் பாட முடிகிறது.

இந்த நம்பிக்கையே இன்று நம்மை அடுத்த நாள் எழச் செய்கிறது.

4 comments:

  1. அதிக மகிழ்வையும்,அதிக துன்பத்தையும்,நம் கண்கள்,மொழிபெயர்க்கும் முயற்சியே,
    "அழுகை".
    அழகான வரிகள்🤝

    ReplyDelete
  2. “ By the rivers of Babylon,there we sat and wept when we remembered zion!”... சோகம் ததும்பும் பாடலின் பின்னனியை விளக்குகிறார் தந்தை. இந்த இஸ்ரேல் மக்கள் பாபிலோனியரால் நாடுகடத்தப்பட்ட நிகழ்வு ஒவ்வொரு ஞாயிறு மறையுரையிலும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்படுத்தப்பட்டிருப்பது கண்டு இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன்.ஆம்! “அதிக மகிழ்வையும்,அதிக துன்பத்தையும் நம் கண்கள் மொழிபெயர்க்கும் முயற்சியே அழுகை!”... உண்மையே!என்னதான் திக்கற்ற நிலைக்குத்தள்ளப்படாலும் ஏதோ ஒரு வடிவில் ‘ நம்பிக்கை’ எனும் உணர்வு நம்மில் ஒட்டிக்கொண்டிருப்பதாலேயே நம்மாலும் “ எருசலேமே! நான் உன்னை மறந்தால்.........என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!” என்று
    சொல்ல முடிகிறது.
    ஒவ்வொரு பங்குதளத்திற்குச் சென்ற போதும் தந்தை தான் அழுததை நினைவு கூறுகிறார். நீங்கள் கண்டிப்பாக மகிழலாம்; ஏனெனில் நெஞ்சில் ஈரம் இருப்பவர்களால் தான் அழமுடியும்.அது ஒரு வரம்.

    சோகம் இழையோடியிருப்பினும் நம்பிக்கையூட்டும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  3. https://youtu.be/vYK9iCRb7S4

    ReplyDelete
  4. https://aniccam.blogspot.com/2013/06/blog-post_30.html

    Father, Someone copied your post 7 years back.. LOL..

    ReplyDelete