Tuesday, June 16, 2020

கடவுள் எங்கே?

இன்றைய (17 ஜூன் 2020) முதல் வாசகம் (1 அர 2:1,6-14)

கடவுள் எங்கே?

'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்ற கேள்வி நம்மில் பல நேரங்களில் எழுவதுண்டு. இந்தக் கேள்வி எழும்போதெல்லாம், நம் தேடல் பெரும்பாலும், 'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று அவரைத் தேடுவதில் அல்ல. மாறாக, 'கடவுள் என்னோடு இருக்கிறாரா?' என்ற தேடலில்தான் இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவின் பணி முடிந்து, எலிசாவின் பணி தொடங்குகிறது. நிகழ்வில் எலியா உயிருடன் தேரில் எடுத்துக்கொள்ளப்படுகின்றார். அந்த நேரத்தில், தனக்கு இரண்டு மடங்கு ஆவி வேண்டும் என எலியாவிடம் கேட்கின்றார். எலியாவைப் பார்த்துக்கொண்டே இருந்தால் அது நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலிருந்து கீழே விழுந்த எலியாவின் மேலாடையை எடுத்துத் தன்னுடன் வைத்துக்கொள்கின்றார் எலியா.

தன்னிடம் உள்ள ஆற்றலைச் சோதிப்பதற்காக, அல்லது தன் அருகில் இருக்கின்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரின் முன் தன் ஆற்றலை அறிவிப்பதற்காக, அவர் இவ்வாறு செய்கின்றார்.

எலியா தன்னுடைய மேலாடையை அடித்துபோது யோர்தான் ஆற்றின் தண்ணீர் இரண்டாகப் பிரிகிறது. இப்போது எலிசா அடிக்கும்போதும் அவ்வாறே நடக்கிறது.

ஆண்டவரின் ஆவி இவ்வாறாக காணக்கூடிய ஓர் அடையாளத்தை நிகழ்த்திக் காட்டுகின்றார்.

இதற்கு மாறாக,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்கள் தாங்கள் செய்யும் அனைத்தையும் - இறைவேண்டல், இரக்கச் செயல்கள், நோன்பிருத்தல் - மறைவாகச் செய்யுமாறு கற்பிக்கின்றார். இங்கே காண்பவர் இறைவனாக மட்டுமே இருக்க வேண்டும்.

'கடவுள் என்னோடு இருக்கிறாரா?' என்ற தேடலை விட, 'நீர் என்னோடு இருப்பதால்' என்ற நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையில் மறைவாய் உள்ள இறைவனிடம் நாம் உரையாடவும் உறவாடவும் முடியும். அந்த நம்பிக்கைப் பயணம் சில நேரங்களில் எளிதானது அல்ல.

1 comment:

  1. எலியாவைப் பார்த்துக்கொண்டே இருந்தால் இரண்டு மடங்கு ஆவி கிடைக்கும் என நம்பிய எலிசா ‘இன்று இறைவன் என்னோடு இருக்கிறாரா?’ எனும் கேள்வியைக் கேட்க நம்மைத்தூண்டுகிறார். ஆனால் அதற்கும் ஒரு படி மேலே போய் “ நீர் என்னோடு இருப்பதால்” என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அவசியம் என்கிறார் தந்தை. நான் தேடுகையில் என் கண்களுக்குத் தெரிபவரும்,...நான் அழைக்கும்போது என் குரல் கேட்டு பதிலளிப்பவரும் தானே இறைவன்! பேசும் அளவுக்கு...எழுத்தில் வடிக்கும் அளவிற்கு இது எளிதான விஷயமில்லை தான்! ஆனாலும் முயற்சி( நம்பிக்கை) திருவினையாக்கும் எனும் மேலோர் சொல் இந்த நம் தேடலுக்கு பதிலையும்,பயனையும் கொண்டுவரும்.

    என் அன்றாட வாழ்வில் நான் கடைபிடிக்கக்கூடிய எளிமைமிகு விஷயம்! அவரோடு உரையாடவும்,உறவாடவும் என் நம்பிக்கை எனக்கு உதவுவதாக!
    எளிமையான...ஆனால் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒரு பாடம் புகட்டிய தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete