Friday, June 26, 2020

சிறியதில் பெரியது

இன்றைய (27 ஜூன் 2020) நற்செய்தி (மத் 8:5-17)

சிறியதில் பெரியது

இரண்டு நாள்களுக்கு முன் அருள்சகோதரர் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்: 'சில அறிகுறிகளில் அல்லது அற்புதங்களில் இயேசு நபர்களைத் தொடுகிறார். சிலவற்றில் தொடாமலேயே குணமளிக்கிறார். ஏன்?'

இயேசுவின் சமகாலத்தில் யூத ரபிக்களும் புறவினத்து ஷாமான்களும் அறிகுறிகள் மற்றும் அற்புதங்கள் நிகழ்த்தினர். அவர்களுடைய அற்புதங்கள் பெரும்பாலும் நபர்களைத் தொட்டு நிகழ்த்துவதாக இருந்தன. இயேசுவை ஒரு யூத ரபி போன்றவர் என்று சொல்லும் இடங்களில் அவர் தொட்டுக் குணமாக்குவதுபோலவும், அவரின் இறைத்தன்மை முதன்மைப்படுத்துகின்ற இடங்களில் அவர் தொடாமல் குணமாக்குவதுபோலவும் இருக்கிறது என்று நான் பதிலிறுத்தேன்.

இக்கேள்விக்கான விடையை நான் இன்னும் தேடிக் கூர்மைப்படுத்த வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தொடாமல் ஒரு அற்புதம் நிகழ்த்துகின்றார்.

நூற்றுவர் தலைவர் ஒருவனுடைய மகன் நலமற்று இருக்கிறார். இங்கே 'மகன்' என்ற சொல்லை, கிரேக்கத்தில், 'பணியாளன்', 'அடிமை', 'துணை ஆள்', 'துணைவன்,' 'சின்னப் பையன்' என்றும் மொழிபெயர்க்கலாம். 'மகன்' என்று மொழிபெயர்க்காமல் 'பையன்' அல்லது 'இளவல்' என்று மொழிபெயர்க்கும் விளக்கவுரையாளர்கள், இந்த இளவல் நூற்றுவர் தலைவனின் ஓரினச்சேர்க்கை இணையராக இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். தன் மகனுக்கோ அல்லது இணையருக்கோ அவர் இயேசுவிடம் உதவி கேட்டுப் புறப்பட்டு வருகின்றார்.

'ஐயா! என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக்கிடக்கிறான்' - என்று பிரச்சினையை மட்டும் சொல்கின்றாரே தவிர, உதவி கேட்கவில்லை. ஒரு நூற்றுவர் தலைவர் சாதாரண ரபியிடம் உதவி கேட்பதா என்று நினைத்திருக்கலாமா?

இல்லை.

இயேசுவை அவருடைய பணிவாழ்வில் கடவுளாக, இல்லை, கடவுள் என்று முதலில் பார்த்தவர் இவர்தான்.

'நான் வருகிறேன்' என்று சொன்னவுடன், 'நான் தகுதியற்றவன்' என்று சரணடைகின்ற அவர், 'ஒரு வார்த்தை சொல்லும்! அதுவே போதும்!' என்கிறார்.

விவிலியத்தில் வார்த்தையால் அனைத்தையும் செய்தவர் யாவே இறைவன்தாம்.

அந்த யாவே இறைவனே நீர்தான்! - எனச் சொல்கிறார் இந்த இளவல்.

ஆகையால்தான் இயேசு, இஸ்ரயேலர் யாரிடமும் இந்த நம்பிக்கை இல்லை என்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் கடவுளைப் பற்றி அறிந்தாலும் இயேசுவை அந்தக் கடவுள் என்ற நிலையில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

ஆனால், இந்த நூற்றுவர் தலைவர் அப்படி அல்ல. அவர் காண்பதில் காணாதவற்றைப் பார்த்தார்.

வில்லியம் ப்ளேக் சொல்வதுபோல, 'சிறிய மண்துகளில் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும், சிறிய விதையில் பெரிய மரத்தையும், சிறிய நீர்த்துளியில் பெரிய கடலையும்' பார்த்தார் இவர்.

இன்று நாம் சில நேரங்களில், பெரிதாக்கிப் பார்க்கிறோம் பிரச்சினைகளையும் தவறுகளையும். ஆனால், நாம் பார்க்க வேண்டியது வாய்ப்புக்களையும் நம்பிக்கையையும்.

நம் நம்பிக்கைதான் பெரிதாக வேண்டுமே தவிர, நம் பிரச்சினைகளையும், மற்றவர்களின் தவறுகளையும் நாம் பெரிதாக்கக் கூடாது.

இந்த மனிதர் நமக்கு இதைக் கற்றுத் தருகிறார். இவர் எந்த அளவுக்கு நம்மேல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றால், ஒவ்வொரு முறையும் நாம் திருப்பலியில் நற்கருணை வாங்குமுண் இவரின் வார்;த்தைகளைத்தான் செபிக்கின்றோம்: 'ஆண்டவரே! நீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதியற்றவள். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்! என் ஆன்மா நலமடையும்!'

இயேசுவைக் கடவுள் எனக் கண்டு அறிக்கையிட்டதால் இறவாமையைத் தழுவினார் இவர்! நம் உதடுகளில் இவர் இன்றும் வாழ்கிறார்.

சாதாரண அப்பத்துண்டில் நம்மால் கடவுளைப் பார்க்க முடிகிறது. எப்படி? இவர் சாதாரண தெருப் போதகர் ஒருவரில் கடவுளைப் பார்த்ததால்.

ஆக, சிறியதில் பெரியதைப் பார்த்தல் சால்பு. அப்படிப் பார்ப்பவர் நம்புவது அனைத்தும் நிகழும்.

2 comments:

  1. இன்றைய நூற்றுவர் தலைவன் செய்திபற்றி காலைத்திருப்பலியில் அருட்பணியாளர், இயேசு நபர்களிடம் பரிவு கொண்டபோது அவர்கள் உள்ளத்தையும், சுகம் தந்தபோது அவர்களின் உடலையும் தொட்டார் என்று கூறினார். இன்றைய நூற்றுவர் தலைவன் குறித்து நாம் வியக்கும் வகையில் பல விஷயங்களைத் தருகிறார் தந்தை.இயேசுவை முதலில் ‘கடவுளாகப்’ பார்த்தது அவரே என்றும்,இக்காரணத்தினாலேயே இவர் இறவாமையைத் தழுவினார் எனவும்.அதனாலேயே இன்று நம் உதடுகளில் வாழ்கிறார் எனவும் கூறி அவருக்கு ஒரு புது வடிவமும்,பார்வையும் தருகிறார்.அதையும் மீறி காண்பதில் காணாதவற்றைப் பார்த்த இவர், சிறியதில் பெரியதைப்பார்க்கும் வித்தையை நமக்குக் கற்றுத்தருகிறார்.

    ‘நேர்மறை இயல்பு உள்ளவர்களுக்கே நினைப்பது அனைத்தும் நிகழும்’ என்பது தந்தை நமக்கு எடுத்து வைக்கும் பாடம்.அன்றாடம் நாம் வாய்வழி உதிர்க்கும் வார்த்தைகளை மனத்திலிருத்தி சிந்திக்க அழைப்பு விடுக்கும் தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete
  2. ஆனால் நாம் பார்க்க வேண்டியது,வாய்ப்புகளையும்,நம்பிக்கையையும்.....

    அப்படிப் பார்ப்பவர் நம்புவது அனைத்தும் நிகழும்.

    நன்றி🙏

    ReplyDelete