Tuesday, June 9, 2020

இருமனத்தோராய்

இன்றைய (10 மே 2020) முதல் வாசகம் (1 அர 18:20-39)

இருமனத்தோராய்

'இரு மான்களை விரட்டுபவர் ஒரு மானையும் பிடியார்' என்பது ஆப்பிரிக்க பழமொழி.

ஆனால், இன்றைய உலகம் இரு மான்களை அல்ல, இருபது மான்களையும் ஒரே நேரத்தில் விரட்டலாம் என்று நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. திறன்பேசியின் வருகை இதை இன்னும் சாத்தியமாக்கியிருக்கிறது. எப்படி? என் அறையில் ஃவைஃபை இருந்தால், அதை என் செயல்திறன் பேசியில் இணைத்துவிட்டு, என் தொலைபேசி அழைப்பையும் மேற்கொண்டு, அந்த நபரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஸ்பீக்கரில் அதைப் போட்டு, அவர் சொல்லும் வங்கி எண்ணுக்கு என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து பரிவர்த்தனை செய்யவும், அல்லது அவர் கேட்கும் ரயில் டிக்கெட் கிடைக்கும் நிலையை அறியவும், என் குறுஞ்செய்திகளைப் படிக்கவும், என் திறன்பேசியில் ஃபோட்டோக்களைப் பார்க்கவோ, என்னுடைய காலண்டரில் என்னுடைய அடுத்து நிகழ்ச்சியைப் பதிவு செய்யவோ, 'நோட்ஸ்' பகுதியில் நேற்றைய வரவு செலவுகளைப் பதிவு செய்யவோ என ஒரு தொலைபேசி அழைப்பின் நேரத்தில் நான் அழைப்பில் பேசிக்கொண்டே இவ்வளவு அனைத்தையும், இவற்றைவிட மேலானதையும் செய்ய முடியும்.

ஆக, ஒரே நேரத்தில் ஒரு 'மானுடன்' பேசிக்கொண்டே, நிறைய 'மான்களை' விரட்ட முடியும். ஆனால், பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

ஆனால், இப்படிச் செய்வது நம்முடைய ஈடுபாட்டையும், குவிதிறனையும் இழக்கச் செய்கிறது. மேலும், நம் ஆற்றலையும், மொபைல் பேட்டரியின் ஆற்றலையும் வேகமாகக் குறைக்கிறது.

ஒரு பக்கம், இரு மான்களைத் தேடுவது அவசியம் என்றாலும், மறு பக்கம் அப்படித் தேடுதல் ஆபத்து என்றும் நாம் அறிகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் இறைவனுக்கும் பாகால் இறைவனுக்குமான போர் நடக்கிறது. இஸ்ரயேல் இறைவனின் சார்பில் எலியாவும், பாகால் இறைவன் சார்பில் நானூறு இறைவாக்கினர்களும், போட்டியில் இறங்குகின்றார்கள். யார் இறைவன் உண்மையானவர்? - இதுதான் போட்டி.

இந்தப் போட்டியின் தொடக்கத்தில் எலியா கூறும் வார்த்தைகள் கவனத்திற்குரியவை: 'எத்தனை நாள் இருமனத்தோராய் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?'

இதையே நம் இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'வெளியில் போவதா? வேண்டாமா?'

'மாத்திரையை எடுப்பதா? தொடர்வதா?'

'அவரைச் சந்திப்பதா? வேண்டாமா?'

'நிலம் வாங்குவதா? வேண்டாமா?'

'வேலையை விடுவதா? தொடர்வதா?'

'இன்னொரு இட்லி எடுக்கவா? வேண்டாமா?'

இப்படிச் சின்னச் சின்ன விடயங்களில் தொடங்கி, வாழ்வின் முக்கியமான பெரிய அழைத்தல் முடிவுகள் வரை நாம் இருமனத்தோராய் இருக்கிறோம். இந்த மனநிலையில் நம்மிடம் மேலோங்கி இருக்கின்ற ஓர் உணர்வுதான்: 'தத்தளிப்பு.' இந்த வார்த்தையை ஆங்கிலத்தில் 'வேவர்' அல்லது 'ஃபால்டர்' என மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஏன் தத்தளிப்பு வருகிறது?

அ. இரண்டும் நல்லவை என்று தோன்றும்போது.

ஆ. இலக்கு தெளிவாக இல்லாதபோது.

இ. பாதை தெளிவாக இல்லாதபோது.

ஈ. இரண்டையும் பார்த்துக்கொள்ளலாம் என்ற சமரச மனம் வரும்போது.

உ. முடிவெடுக்க நேரம் இல்லாதபோது.

ஊ. தவறு செய்துவிடுவோமோ என்ற பயம் வரும்போது

தத்தளிப்பு வருவதன் விளைவுகள் எவை?

அ. நேர விரயம்

ஆ. ஆற்றல் விரயம்

இ. சோர்வு

ஈ. பயம்

உ. கோபம்

ஊ. முதன்மைகளில் குழப்பம்

இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளுக்கும் பாகாலுக்கும் இடையே தத்தளிக்கின்றனர். ஆண்டவராகிய கடவுளே அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டவர் என்றாலும், பாகாலின் கவர்ச்சியையும், பாகால் தெய்வக் குழமத்தில் இருந்த இளவல்களையும் விட அவர்களுக்கு மனமில்லை. மேலும், யாவே வழிபாட்டைவிட பாகால் வழிபாடு ரொம்ப கவர்ச்சியாகவும், இனிமையாகவும் இருந்தது.

ஆனால், தேவையானது ஒன்றே!

இதை அவர்கள் எலியா வழியாகக் கண்டுகொள்கின்றனர்.

நற்செயல்: நம் வாழ்வில் நாம் இருமனத்தோராய்த் தத்தளிக்கும் பொழுதுகளை எண்ணிப் பார்த்தல்.

2 comments:

  1. ஆப்பிரிக்கப் பழமொழியில் ஆரம்பித்து,திறன் பேசி,கைபேசி என அத்தனையையும் பேசவைத்து,பல மான்களை விரட்டி,முதல் வாசகத்தின் எலியாவையும்,பாகால் இறைவனையும் கொஞ்சம் தொட்டு,தனக்குத்தானே பல கேள்விகளை ஒத்தையா இரட்டையா என்ற ஸ்டைலில் கேட்டு,’இருமனத்தோராய்’ இருப்பதன் காரணம் என்னவென ஆராய்ந்து இறுதியில் அந்த ‘தத்தளிப்பு’ எனும் வார்த்தைக்குள் நுழைவதற்குள் அப்பாடா.....மூச்சு முட்டுது.தத்தளிப்பு வருவதற்கான காரணங்களும் அதனால் வரும் விளைவுகளும்!! அப்பப்பா..... தினம் தினம் எனக்குள் நடக்கும் அனைத்தையும் பிட்டுப்பிட்டு வைக்கிறாரே! இவரென்ன மந்திரவாதியா? எனும் எண்ணம் எட்டிப்பார்க்கிறது.நம்மை அடிமைத்தனத்திலிருந்து மீட்ட கடவுளா இல்லை வெளிக்கவர்ச்சியும் இனிமை போன்று தெரியும் பாகால் தெய்வமா? யார் வேண்டும்? என்னதான் அம்மா வீட்டில் ருசி சொட்டும் பட்சணங்களை செய்தாலும் அந்த காஞ்சுபோன மைதா மாவின்( பிட்சா) பின்னே போகிறவர்கள் தானே நாம்? ஆயினும் வேதம் சொல்கிறது....” தேவையானது ஒன்றே!” என் வாழ்வின் தேவைகளைத் தேடவும்,அவற்றைக் கண்டுபிடிக்கவும் அறைகூவல் விடும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்! மிக சுவாரஸ்யமானதொரு தேடலுக்கு இட்டுச்செல்லும் பதிவு! வாழ்த்துக்கள்!

    கண்டிப்பாக அவையெல்லாம் மறக்க முடியா பொழுதுகள்! விடிந்து எழுந்தாலே தத்தளிப்புதான்! தந்தையின் வழிகாட்டலைக் கொஞ்சம் துணைக்கழைப்போம்! நன்றி!

    ReplyDelete