Friday, March 29, 2019

ஏற்புடையவராகி

இன்றைய (30 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 18:9-14)

பாஸ்கா திருவிழிப்பு நிகழ்வில் புதிய பாஸ்கா திரி ஏற்றப்படும் போது, அருள்பணியாளர் ஒரு செபம் சொல்வார்: 'காலங்கள் அவருடையன. யுகங்களும் அவருடையன.'

நம்முடைய இருப்பு என்பது இடம் மற்றும் காலத்தைக் கொண்டு அறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நான் திருச்சியில் இருந்துகொண்டு 29ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதில், 'இடம்' என்பது என்னுடையது. 'காலம்' என்பது அவருடையது. எப்படி? நான் திருச்சியில், திண்டுக்கல்லில், மதுரையில், உரோமையில் என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், 29ஆம் தேதி மதியம் 2 மணிக்கு இருப்பது என்பது என் கையில் இல்லை. ஆகையால் தான், காலத்தை நாம் அவருடையவது என்கிறோம்.

ஆக, வாழ்க்கையை இரண்டு நிலைகளில் நம்மால் வாழ முடியும். ஒன்று, இடத்தை மையப்படுத்தி வாழ்வது - அதாவது, எல்லாமே என் கையில்தான் உள்ளது என நினைத்து வாழ்வது. இரண்டு, காலத்தை மையப்படுத்தி வாழ்வது - அதாவது, எல்லாமே அவரின் கையில்தான் உள்ளது என நினைத்து வாழ்வது. முதல் வகை வாழ்தலில் நிறைய சோர்வும், விரக்தியும், ஒப்பீடும் இருக்கும். இரண்டாம் வகை வாழ்வில் நிறைய சுதந்திரமும், மகிழ்ச்சியும், ஏற்றுக்கொள்தலும் இருக்கும்.

இன்றைய நற்செய்தியில், 'தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து' இயேசு ஓர் உவமையைச் சொல்கிறார். ஒரு கோவில். ஒரு பரிசேயர். ஒரு வரிதண்டுபவர். இருவருமே கோவிலுக்கு இறைவேண்டல் செய்யச் செல்கின்றனர். பரிசேயரின் செபம் தன்மையம் கொண்டதாகவும், வரிதண்டுபவரின் செபம் இறைமையம் கொண்டதாகவும் இருக்கின்றது. பரிசேயர் தான் செய்துவரும் அனைத்து பக்தி முயற்சிகளையும் பட்டியலிடுகின்றார். வரிதண்டுபவரோ, வானத்தை அண்ணாந்து பார்க்கவும் துணியாமல், 'கடவுளே, பாவி என்மேல் இரக்கம் வையும்' என்று மிகச் சுருக்கமாகச் செபிக்கிறார்.

இது ஏறக்குறைய நல்ல கள்வனின் செபம் போல இருக்கிறது: 'நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்!'

அவ்வளவுதான். ஒரே முறை கேட்டார்கள். ஒரே முறை தேடினார்கள். ஒரே முறை தட்டினார்கள். பெற்றக்கொண்டர்கள்.

வரிதண்டுபவர் 'காலத்தை' மையமாக வைத்து வாழ்ந்தார். தன் இருப்பு, இயக்கம் அனைத்தும் கடவுளால்தான் என்று உணர்ந்தார். ஆனால், பரிசேயரோ, தன் 'இடத்தை' மையமாக வைத்து வாழ்கிறார். தன் இருப்பு, இயக்கம் அனைத்தும் தன்னால்தான் என்று நினைக்கிறார். தன் பக்தி முயற்சிகளால் கடவுளின் கொடைகளை 'வாங்கிவிட' முடியும் என நினைக்கிறார்.

இன்று நாம் நம் வாழ்வை எப்படி வாழ்கிறோம்?

பரிசேயர் போலவா? அல்லது வரிதண்டுபவர் போலவா?

பரிசேயர் தன் செயல்களைப் பட்டியலிட, வரிதண்டுபவரோ இறைவனின் இரக்கத்தைப் பட்டியல் இடுகின்றார்.

தன் செயல்களைப் பற்றிப் பட்டியலிடுபவர் தன்னை மட்டுமே நேர்மையாளராகவும், கடின உழைப்பாளியாகவும் நினைத்துக்கொள்வார். இறைவனின் இரக்கத்தை நினைப்பவர் வாழ்வைக் கொண்டாடுவார். அவருக்கு யாரையும் இம்ப்ரஸ் செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. அவர் தன்னையும், பிறரையும், கடவுளையும் இம்ப்ரஸ் செய்ய விரும்பமாட்டார்.

இப்படி யாரையும் இம்ப்ரஸ் செய்யாமல் இருப்பதே ஏற்புடைய நிலை.


2 comments:

  1. ,இறைவா!
    உமது இரக்கப்பெருக்கத்தாலேயே யான் உயிர் வாழ்கிறேன் என்ற தாழ்ச்சி நிறைந்த இதயத்தை எனக்குத் தாரும்!
    காலங்கள் அவருடையன என்ற மனநிலையில் வாழ எனைக் கரம் பிடித்து வழிநடத்தும்...

    ReplyDelete
  2. "பரிசேயர் தன் செயல்களைப்பட்டியலிட, வரி தண்டுபவரோ இறைவனின் இரக்கத்தைப் பட்டியலிடுகிறார்".இந்த வரிதண்டுபவரைத் தந்தை நல்ல கள்ளனோடு ஒப்பிடுவது சரியே! இருவருமே தங்களுக்கேற்ற வழியில் இலாவகமாக இயேசுவின் இதயத்தைத் திருடிக் கொண்டவர்கள்."ஒரே முறை கேட்டார்கள்; ஒரே முறை தேடினார்கள்; ஒரே முறை தட்டினார்கள்; பெற்றுக்கொண்டார்கள்." உள்ளதை உள்ளது போலவே வெளிப்படுத்துகின்றன தந்தையின் வார்த்தைகள்.நான் கூட வாழ விரும்புவது ஒரு வரி தண்டுபவன் மற்றும் அந்த நல்ல கள்வன் போலத்தான்.......
    என்னால் எது முடியுமோ அதைத் தெளிவாக,நேர்மையாகச் செய்து கொண்டு. எதைச்செய்து யாரை நான் இம்ப்ரஸ் செய்ய வேண்டும்? இறுதி மூச்சு விடும் நேரத்தில் இயேசுவின் இதயத்தையே திருடிக்கொண்ட ஒரு நல்ல கள்வன் எனக்குப் பாடமாய் நிற்கையில்?
    தந்தையின் ஆங்கில வரிகள்...பதிவைக் கூடுதலாக அலங்கரிக்கின்றன. எதிர் மறையான விஷயங்களெனினும், அவற்றைத் தனக்கே உரித்தான அலங்கார வார்த்தைகளால் அழகுறத்,தெளிவுற, சொல்ல வந்த விஷயத்தின் நேர்மை மாறாமல் தரும் தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete