Monday, March 18, 2019

வளன்

இன்றைய (19 மார்ச் 2019) திருநாள்

வளன்

இன்று நம் தாய்த்திருஅவை 'புனித வளனார் - புனித கன்னி மரியாவின் துணைவர்' திருநாளைக் கொண்டாடுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 1:16,18-21,24) புனித மத்தேயு பதிவு செய்யும் நிகழ்வில் உள்ள யோசேப்பு பற்றிய சில குறிப்புக்களைச் சிந்திப்போம்.

1. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு

'யோசேப்பு' பற்றிய முதல் செய்தியைத் தரும் மத்தேயு, அவரை, 'யாக்கோபின் மகன்,' 'மரியாவின் கணவர்' என்ற இரு நிலைகளில் அறிமுகம் செய்கிறார். இங்கே, 'மகன்' என்பது யோசேப்பின் 'வேர் பதித்தலையும்,' 'கணவர்' என்பது அவரின் 'விழுது பரப்புதலையும்' குறிக்கிறது. மனித வாழ்வு ஒரு குடும்பத்தில் தொடங்கி மற்றொரு குடும்பத்தில் தொடர்கிறது. இதை ஆதாம் நிகழ்வில்கூட பார்க்கிறோம். ஆதாம் மண் என்ற வேரில் தொடங்கி தன் விலா எலும்பு என்னும் ஏவாளில் தன் வாழ்வைத் தொடர்கிறார். இவ்வாறாக, திருமண உறவு என்பதில் அடங்கியுள்ள மாண்பை அழகுற உரைக்கிறார் மத்தேயு. மணத்துறவு கொண்டவர்கள் இதை எப்படிப் புரிந்துகொள்வது. இவர்களுக்கு இவர்களுடைய உறவு தங்களுடைய குடும்பத்தில் தொடங்கி ஒட்டுமொத்த இறையாட்சிக் குடும்பத்தை நோக்கி நீள்கிறது. அவ்வளவுதான். ஆக, மணத்துறவு மேற்கொண்டவர் உறவை மறுப்பவராக அல்லாமல் உறவை அதிகரித்துக்கொள்ளவே மணத்துறவு மேற்கொள்கிறார்.

2. மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம்

யூதர்களின் முறைமைப்படி முதலில் ஒப்பந்தம் நடந்து, சில மாதங்கள் கழித்தே திருமணம் நடக்கும். இது குஞ்சுபொறிக் காலம் போல. அதாவது, ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும், தொடர்ந்து முன்னெடுக்கப்போகும் வாழ்க்கையைத் திட்டமிடவும் எடுக்கும் காலம் இது.

3. மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது

யோசேப்பு இதை எப்படி அறிந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. மரியாளே சொல்லியிருக்கலாம். அல்லது மரியாளின் பெற்றோர் வழியாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், இங்கே தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பவராக இருக்கிறார் யோசேப்பு. இது ஒரு முக்கியமான குணம். இந்தக் குணம் எல்லாருக்கும் வராது. தன்னிலே அமைதியாய் இருப்பவர், தன்னை முழுமையாக அறிந்தவர் மட்டுமே தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பார். மேலும், இப்படிப்பட்ட நபர் தன்னை மற்ற எல்லாரோடும் இணைந்த ஒருவராகவும் பார்ப்பார்.

4. யோசேப்பு நேர்மையாளர்

'நேர்மை' என்பதற்கு இங்கே கிரேக்கத்தில் 'டிகாயுசுனே' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள், தன்னை நேர் கோட்டில் வைத்துக்கொள்வது. இங்கே 'நேர்மையாளர்' என்று அறிமுகம் செய்வதன் வழியாக, இவர் ஒரு ஸ்ட்ரிக்ட் பேர்வழி. அடுத்த என்ன செய்வாரோ? என்ற எதிர்பார்ப்பை வாசகரின் மனத்தில் விதைக்கிறார் மத்தேயு. கொஞ்ச நேரத்தில், இவரின் நேர்மையாளர் நிலை என்பது சட்டம் சார்ந்தது அல்ல. மாறாக, இரக்கம் சார்ந்தது என்று நாம் அறிகின்றோம். இயேசுவுக்கு இதே இரக்க குணம் வருவதற்கு யோசேப்பின் இக்குணம் காரணமாக இருக்கலாம்.

5. மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டிருந்தார்

தன்னைவிட பிறரை மையமாக வைத்து - மரியாளை மையமாக வைத்து - முடிவெடுக்கிறார் யோசேப்பு. உறவு நிலைகளை முறித்துக்கொள்ளும்போது பல நேரங்களில் நாம் நம்மை மட்டுமே முன்வைத்து முடிவெடுக்கிறோம். ஆனால், உறவில் அடுத்தவரும் இருக்கிறார் என்பதை மனத்தில் வைப்பது மிக அவசியம்.

6. சிந்தித்துக்கொண்டிருக்கும்போது

மிகுதியான சிந்தனை, மிகுதியான களைப்பைத் தரும். பிரச்சினைகள் பற்றி மனம் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது பலருக்குத் தூக்கம் வருவதில்லை. ஆனால், யோசேப்பு தூங்கிவிடுகிறார். இதுவும் அவரின் ஆழ்மன அமைதியைக் காட்டுகிறது. என்ன நேர்ந்தாலும் சஞ்சலப்படாத ஒரு பக்குவம் இது.

7. தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து மனைவியை ஏற்றுக்கொண்டார்

கனவு என்பது இறைவெளிப்பாட்டு ஊடகம் என்பதை யோசேப்பு அறிந்தவராக இருக்கிறார். தன் மூதாதையர்கள் ஆபிரகாம், யாக்கோபு, யோசேப்பு போன்றவர்களைக் கனவுகளின் வழியாகவே கடவுள் வழிநடத்தினார் என்பதை உணர்ந்திருந்தார் யோசேப்பு. ஆகையால்தான், கனவில் இறைத்திருவுளம் காண்கிறார்.

ஒருமுறை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த யோசேப்பு தன் முடிவிலிருந்து பின்வாங்கவே இல்லை. நல்லவற்றிக்காகவும், மற்றவர்களுக்காகவும் தன் வாக்குறுதிகளை மாற்றிக்கொள்ளவும், தன் திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் தயங்கவில்லை யோசேப்பு.

'எல்லாம் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும்' என்பது யோசேப்பின் கொள்கை அல்ல.

அந்த நொடி மரியாவை ஏற்றுக்கொண்ட யோசேப்பு, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார். பெத்லகேம், எகிப்து, நாசரேத், எருசலேம் என இவர் ஓடுகின்றார். ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நிகழ்விலும் இறைத்திருவுளம் அறிகிறார்.

எனினும், எல்லாவற்றிலும் மௌனம் காக்கிறார்.

மௌனத்தைப் புரிந்துகொள்பவர்களே வார்த்தைகளையும் புரிந்துகொள்ள முடியும்.


2 comments:

  1. Great!
    🙏
    அப்படியே ஆகட்டும்!

    ReplyDelete
  2. புனித வளனார்- புனித கன்னி மரியாளின் துணைவர் என ஆரம்பித்து, அவருக்கு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே வடித்திருக்கிறார் தந்தை. யோசேப்புவைப்பற்றித் தந்தை வெளிப்படுத்தும் அத்தனை விஷயங்களுமே இந்த 'வாயில்லாப்பூச்சிக்கு' வண்ணமலர்கள் தூவுவது போலிருப்பினும், இவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் பிறரை மட்டுமே மையப்படுத்தி இருந்தது என்பதும்,பிரச்சனைகள் மத்தியிலும் ஆழ்மன அமைதியுடன் உறங்க முடிந்தது என்பதும், இயேசுவின் இரக்க குணத்திற்கு ஊற்றே அவர்தான் என்பதும், நல்ல விஷயங்களுக்காகவும்,மற்றவருக்காகவும் தன் வாக்குறுதிகளையும்,திட்டங்களையும் மாற்றிக்கொள்ளவும் அவர் தயங்கவில்லை என்பதும், ஓட்டமும்,நடையுமாகிப்போன அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைத்திருவுளம் அறிந்ததும், மரியாளின் கருவுக்குக் காரணம் தெரியா நிலையிலும் அவருக்குக் காவலனாகத் தொடர்ந்தார் என்பதும் என்னைக்கவர்ந்த விஷயங்கள். என் வாழ்க்கையின் இருண்ட நேரங்களில்,முடிவெடுக்க முடியாமல் தவித்த நேரங்களில் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளார் இந்த மாமனிதன். பதிவில் தெரியும் " சிரிக்கும் சூசை"..தந்தையும்,தனயனும் எத்துணை அழகு!. அரியதொரு பொக்கிஷம். இப்பொழுது " உறங்கும் யோசேப்பு" எனும் புது அவதாரமெடுத்து உளுத்துப்போன பலரின் வாழ்க்கையை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறார்.இத்தனை உயர்வுகளுக்குச் சொந்தக்காரரான இந்த மௌன முனிவன், தன் மௌனத்தைப் புரிந்து கொள்பவர்களின் பாதுகாவலராகவும் விளங்குகிறார்.
    இத்தனை புகழ்மாலைகளை வளனாருக்குச் சூட்டியிருக்கும் தந்தையின் இறுதிவரி..."மௌனத்தைப் புரிந்துகொள்பவர்களே வார்த்தைகளையும் புரிந்து கொள்ள முடியும். அழகான முடிவு." தன் மகனின் நாமத்தைத் தாங்கியிருக்கும் தந்தையின் கரம் பற்றி நடத்துவாராக யோசேப்பு எனும் இந்தப் புனிதர்!"

    ReplyDelete