Wednesday, March 20, 2019

பெரும் பிளவு

இன்றைய (21 மார்ச் 2019) நற்செய்தி (லூக் 16:19-31)

பெரும் பிளவு

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'செல்வந்தரும் லாசரும்' எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம். இது ஒரு எடுத்துக்காட்டாகவும் அதே நேரத்தில் எதார்த்த நிகழ்வாகவும் இருக்கிறது. இந்நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது.

இந்நிகழ்வில் நிறையப் புரட்டிப்போடுதல்கள் இருக்கின்றன:

1. எல்லாருக்கும் அறிமுகமான செல்வருக்குப் பெயர் இல்லை. நாய்கள் வந்து நக்கும் ஏழைக்கு 'லாசர்' என்ற பெயர் இருக்கிறது.

2. இலாசர் இவ்வுலகில் வாழ்ந்தபோது அவரைக் குனிந்து பார்க்காத செல்வர், இறந்தபின் அவரை அண்ணாந்து பார்க்கிறார்.

3. வீட்டு வாயிலில் கிடந்த ஏழை ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறார். விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து மேசையில் அமர்ந்து விருந்துண்டவர் பாதாளத்தில் ஒரு சொட்டுவிரல் தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கிறார்.

இந்நிகழ்வு 'நரகம்' இருப்பதற்கு என்பதற்காக எழுதப்பட்ட நிகழ்வு அல்ல. மாறாக, நம் நிலை தலைகீழாகப் புரட்டப்படலாம் என்ற எச்சரிக்கை தருவதற்காக எழுதப்படுகிறது.

இயேசு இந்நிகழ்வைப் பரிசேயரை நோக்கிச் சொல்கிறார். ஏனெனில், பரிசேயர்கள் தங்கள் சமகாலத்து ஏழைகளையும், நோயுற்றவர்களையும் சபிக்கப்பட்டவர்களாகப் பார்த்தனர். நாய்கள் வந்து புண்களை நக்குவது உச்சகட்ட சாபத்தைக் குறிக்கிறது. ஆனால், இப்படி அவர்கள் எண்ணிய ஏழை இலாசரை ஆபிரகாம் மடியில் இளைப்பாறுபவராகச் சொல்கிறார் பரிசேயர். இதைக் கேட்ட பரிசேயர்கள் கண்டிப்பாக வெட்கம் அடைந்திருப்பார்கள் அல்லது இயேசுவின்மேல் கோபப்பட்டிருப்பார்கள்.

செல்வராய் இருப்பது தவறா?

செல்வர் ஒரு தவறும் செய்யவில்லையே! அவருடைய சொத்து, அவருடைய ஆடை, அவருடைய விருந்து, அவருடைய நண்பர்கள், அவருடைய வீடு, அவருடைய சகோதரர்கள். இப்படி அவருடையதை வைத்து வாழ்ந்தார். இல்லையா? இவர் யாரையும் கொள்ளையடிக்கவில்லை. யாரிடமும் கையூட்டு வாங்கவில்லை. இலாசரைக் கூட தன் வீட்டு வாசலை விட்டு வெளியே விரட்டவில்லை.

இவர் செய்த தவறு என்ன?
ஒன்றே ஒன்றுதான்: இவர் குனிந்து பார்க்கவில்லை. அதாவது, இலாசரைக் கண்டுகொள்ளவில்லை.

ஆக, கெட்டது செய்வது மட்டும் குற்றமில்லை. நன்மை செய்யத் தவறுவதும் குற்றமே.

இதைத்தான், ஆபிரகாம், 'எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு உள்ளது' என்கிறார். இந்தப் பிளவு இடம் சார்ந்த பிளவு அல்ல. மாறாக, உணர்வு சார்ந்த பிளவு. அதாவது, செல்வம் ஒருவரைத் தன்னை நோக்கியே பார்க்க வைக்கும். ஆனால், ஏழ்மை இயல்பாகவே ஒரு சார்புநிலையை உருவாக்கி மனத்தை அடுத்தவரின் மேலும் இறைவனின் மேலும் திருப்பும். இந்தப் பிளவை ஒருவர் இவ்வுலகத்தில் சரிசெய்ய வேண்டுமே தவிர, மறு உலகில் அல்ல. ஏனெனில், மறு உலகில் வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன.

பிளவைச் சரி செய்யும்போது கிடைக்கும் பரிசு மிகவும் பெரியதாக இருக்கிறது: 'ஆபிரகாமின் மடி'

மடியில் அமர்வது என்பது ஒருவர்மேல் உரிமை கொண்டாடுவது. மதிப்பிற்குரியது என நாம் கருதும் ஒன்றையே நாம் மடியில் வைத்துக்கொள்கிறோம். ஆக, மதிப்பற்றது என்று இவ்வுலகம் கருதுவது மதிப்புக்குரியதாக அவ்வுலகில் மாறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வைக்குப் பாடங்கள் எவை?

1. குனிந்து பார்ப்பது - அதாவது, எனக்கு அடுத்திருப்பவர்மேல் பொறுப்புணர்வு கொள்வது.

2. வேகமாக மறையும் விருந்தில் அல்லது வேகமாக நைந்து போகும் ஆடையில் நம்பிக்கை வைக்காமல் ஆண்டவரின் மேல் நம்பிக்கை வைப்பது (காண். முதல் வாசகம்)

3. இறப்புக்குப் பின் உள்ள வாழ்வு பற்றிக் கவலைப்படுவதைவிட இறப்புக்கு முன் உள்ள வாழ்வை முழுமையாக வாழ்வது. இறைவனுக்கும் நமக்கும் உள்ள பிளவை இங்கேயே சரிசெய்துகொள்வது. ஏனெனில், உலகில் அன்றி வேறெங்கும் மீட்பு இல்லை.

2 comments:

  1. இலாசர்- செல்வந்தர்... இவர்களைக் குறித்த நிகழ்வில் நிறையப் புரட்டிப்போடுதல்கள் இருப்பதாகவும்,இந்நிகழ்வு நம் வாழ்வினைக்கூடப் புரட்டிப்போடுவதாக இருக்கலாம் என்றும் சொல்கிறார் தந்தை. இலாசருக்கு ஏற்பட்ட பிளவு போல நம் வாழ்க்கையிலும் ஏற்படலாம்...இதை சரிசெய்யும் வாய்ப்பு மறு உலகில் மறுக்கப்படுவதால் இங்கேயே சரி செய்ய வேண்டுமென்கிறார் தந்தை.இந்தப் பதிவில் வரும் பிளவு நம் வாழ்விலும் ஏற்படாமலிருக்க நமக்கு அடுத்திருப்பவர் மேல் பொறுப்புணர்வு கொள்வதும், வேகமாக மறையும் விஷயங்களில் நம்பிக்கை வைக்காமல் ஆண்டவரில் மட்டுமே நம்பிக்கை வைப்பதும்,இறப்புக்கு முன்னுள்ள வாழ்வை முழுமையாக வாழ்ந்து,இறைவனுக்கும்நமக்கும் உள்ள பிளவை இங்கே சரி செய்வதும் விவேகம் என்கிறார் தந்தை.ஏனெனில்,உலகில் அன்றி வேறெங்கும் மீட்பு இல்லையாம்.
    இந்த இலாசர்- செல்வந்தர் நிகழ்வை இத்தனை கோணங்களில்,இத்தனை பொருள் செறிந்ததாகத் தந்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. நன்மை செய்யத் தவறுவதும் குற்றமே!
    Yes...

    ReplyDelete