Friday, March 1, 2019

சிறுபிள்ளைகள்

இன்றைய (2 மார்ச் 2019) நற்செய்தி (மாற் 10:13-16)

சிறுபிள்ளைகள்

'எல்லாரும் கடலின் கரையில் நின்று, 'எவ்வளவு தண்ணீர்த் துளிகள்!' என்று வியக்கும்போது, ஞானி, 'எத்தனை பெரிய தண்ணீர்த் துளி!' என்று வியக்கின்றான்' எனப் பதிவு செய்கிறார் கலீல் கிப்ரான்.

கடலை, 'நிறைய தண்ணீர்த் துளிகளின் தொகுப்பு' என்றும் பார்க்கலாம், 'ஒருங்கிணைந்த ஒற்றைத் தண்ணீர்த் துளி' என்றும் பார்க்கலாம். முதல் வகைப் பார்வை பிரித்துப் பார்க்கிறது. இரண்டாவது வகைப் பார்வை இணைத்துப் பார்க்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், சிறுபிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று சிலர் அவரிடம் கொண்டு வருகின்றனர். சீடர்கள் அவர்களை அதட்டுகின்றனர். ஆனால், இயேசு சீடர்கள்மேல் கோபம் கொண்டு அவர்களைக் கடிந்துகொள்கின்றார். மேலும், 'இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார்' எனவும் எச்சரிக்கின்றார்.

சீடர்கள் சிறு பிள்ளைகளை வாழ்க்கைப் பருவத்தின் சிறு துளிகள் என்று எண்ணினார்கள். ஆனால், இயேசுவோ அவர்கள் ஒவ்வொருவரிலும் மானிடத்தின் மொத்த உருவைக் கண்டார். மேலும், 'அவர்கள் எப்படி இருக்கிறார்கள்' என்பதை மையமாக வைத்து சீடர்கள் செயல்பட்டார்கள். ஆனால், 'அவர்கள் எப்படி மாறுவார்கள்' என்பதை மையமாக வைத்து இயேசு செயல்படுகின்றார். சீடர்களின் பார்வை அவர்களின் 'இருத்தலில்' இருந்தது. இயேசுவின் பார்வை குழந்தைகளின் 'மாற்றத்தில்' இருந்தது.

மரத்தின் கனியில் விதையைப் பார்த்தவர்கள் நடுவில், விதையில் மரத்தின் கனியைப் பார்க்கிறார் இயேசு.

இப்படிப் பார்க்கின்ற ஒருவரால்தான் எல்லாரையும் ஏற்றுக்கொள்ள முடியும். அதே போல, இப்படிப் பார்க்கின்ற பார்வைதான் புதுமைக்கு வழிவகுக்கும். எல்லாரும் மார்பிளைக் கற்கள் என்று பார்க்கும்போது, மைக்கேல் ஆஞ்சலோ, அவற்றில் ஒளிந்திருக்கும் 'தாவீது,' 'மோசே,' 'பியத்தா' போன்ற உருவங்களைப் பார்த்தார். மீன்பிடித்துக் கொண்டிருந்த பேதுருவில் தன் திருச்சபையின் தலைவரைப் பார்த்தார். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணில் அவருடைய எதிர்காலத்தைப் பார்த்தார். துன்புறுத்தச் சென்ற சவுலில் புறவினத்தாரின் திருத்தூதரைப் பார்த்தார்.

இப்படிப் பார்ப்பவர்கள் தங்களைப் போலவே பிறரை எண்ணுவார்கள். தங்களின் நலம் போல பிறர்நலம் பேணுவார்கள்.

இன்றைய முதல் வாசகமும் (காண். சீஞா 17:1-15), சிறியவர், பெரியவர், ஆண், பெண் என அனைவரிடமும் ஒரே இறைச்சாயல் துலங்குகிறது என்றும், ஒருவரின் விருப்புரிமையே அவரின் பார்வையை கூர்மைப்படுத்தவும், விரிவாக்கவும் செய்கிறது என்றும் சொல்கிறது.

சிறிதிலும் பெரிது பார்க்கும் பார்வை இருந்தால் எத்துணை நலம்!


2 comments:

  1. சிறுபிள்ளைகளைப் பார்க்கும் பார்வையில் தான் எத்தனை வேறுபாடு இயேசுவுக்கும், அவரது சீடர்களுக்கும்! " மரத்தின் கனியில் விதையைப் பார்க்கிறவர்கள் நடுவில்,விதையில் மரத்தின் கனியைப் பார்க்கிறார் இயேசு" என்கிறார் தந்தை.ஏனெனில் இப்படிப்பார்க்கிற ஒருவரால் தான் எல்லோரையும் ஏற்றுக்கொள்ள முடியுமாம்.இப்படிப் பார்ப்பவர்கள் தங்களைப்போலவே பிறரை எண்ணுவார்கள்; தங்களின் நலம் போல் பிறர் நலம் பேணுவார்கள் என்றெல்லாம்.சொல்கிறார்."தூரத்துப்பார்வை" ...கேள்விப்பட்டிருப்போம்....ஆனால் இது துல்லியமான..மிகத்துல்லியமான பார்வை....இயேசுவுக்கு மட்டுமா அது சொந்தம்? நம் தந்தை யேசுவுக்கும் தான்.
    " நிறையத் தண்ணீர்துளிகளின் தொகுப்பு, ஒருங்கிணைந்த ஒற்றைத்தண்ணீர்த்துளி, விருப்புரிமை" போன்ற வார்த்தைகள் சும்மா கவிதையின் தொகுப்பாகத் தெரிகின்றன. இவரது அன்றாடப்படைப்பு விவிலியத்தின் விளக்கமா? இல்லை கவிதையா...அப்பப்போ சந்தேகம் வந்து விடுகிறது.வாஆஆஆஆஆஆழ்த்துக்கள் தந்தைக்கு....அருமையான வார்த்தைகளின் தொகுப்பிற்காக!!!
    ,

    ReplyDelete