Friday, February 8, 2019

சற்றே ஓய்வெடுங்கள்

இன்றைய (9 பிப்ரவரி 2019) நற்செய்தி (6:30-34)

சற்றே ஓய்வெடுங்கள்

'ஓய்வு என்பது இருப்பவர் பேசுவது. இல்லாதவருக்கு எல்லா நாளும் ஓட்டமே' என்று சிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். இது தவறு என நினைக்கிறேன். ஓய்வு ஒன்றுதான் இருப்பவர் மற்றும் இல்லாதவர் வேற்றுமையை அகற்றுகின்றது. ஓய்வின் தன்மையும், ஓய்வின் நேரமும் மாற வாய்ப்பிருக்கிறதே தவிர, ஓய்வு என்பதே தேவையில்லை என்று நம்மால் சொல்லிவிட முடியாது.

இருவர் இருவராக இயேசு பணிக்கு அனுப்பிய சீடர்கள் திரும்பி வருகிறார்கள். வந்தவர்கள் தாங்கள் செய்தவை, கற்பித்தவை அனைத்தையும் அவருக்குத் தெரிவித்தார்கள். இது ஒரு நல்ல தலைமைத்துவப் பாடம். அனுப்பப்படுகிறவர்கள் திரும்பி வர வேண்டும். அவர்கள் நோவா பெட்டகத்துக் காகம் போல போகின்ற இடத்தில் அடைக்கலம் தேடித் தங்கிவிடக் கூடாது.

பலர் அவர்களிடம் தொடர்ந்து வந்து போய்க்கொண்டிருக்க, அவர்களுக்கு உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. எனவே, பாலை நிலத்திலிலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கேயும் மக்கள் கூட்டம் வர, ஓய்விற்காகச் சென்றவர்கள் பரிவு காட்ட ஆரம்பிக்கிறார்கள்.

இரண்டு பாடங்கள் இங்கே நமக்குத் தரப்படுகின்றன:

ஒன்று, நாம் அனைவருமே என்றாவது ஒரு நாள் யாருக்காகவாவது நாமே இட்ட ஒழுங்குகளை உடைத்திருப்போம். இயேசுவும் அப்படித்தான் உடைக்கின்றார். 'ஓய்வா,' 'மக்கள் பணியா' என்ற இரு கோடுகளை உடனுக்குடன் வரைந்து, ஓய்விற்காகச் சென்றவர், பணியாற்ற ஆரம்பிக்கிறார். 'ஒருவருக்கு மனவுறுதியாய்த் தெரிவது மற்றவருக்குப் பிடிவாதமாய்த் தெரியும்' என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஒரு செயலில் அல்லது மனநிலையில் உறுதியாக நான் இருக்கும்போது அதை நான் 'மனவுறுதி' என அழைத்துப் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். ஆனால், அடுத்தவர் அவருடைய செயலில் அல்லது மனநிலையில் உறுதியாக இருக்கும்போது அதை நான் 'பிடிவாதம்' என்று கடிந்துகொள்கின்றேன். இயேசு மக்களுக்காகத் தன் மனவுறுதியைத் தளர்த்திக் கொள்கின்றார். 'பெரியவவைகள் சிறியவைகளால் துன்புறக் கூடாது' என்பதில் தெளிவாக இருக்கிறார் இயேசு.

இரண்டு, பரிவிற்கு ஓய்வு இல்லை. 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்' நாள், நேரம் பார்த்து வாடவில்லைதானே! தனிமை நாடிச் சென்றவர், வாழ்வில் தனிமை அனுபவித்தவர்களின் துணையாளராகத் தன்னையே மாற்றிக்கொள்வதுதான் அழகு.

இன்று, தனிமை புகுத்தப்பட்டு, தனிமை தேடிக்கொண்டு இருப்போர் பலர். தனிமை தவமாகவும் இருக்கலாம் - கருவறைத் தனிமை போல. தனிமை ரணமாகவும் இருக்கலாம் - வறுமை, நோய் போல.

தனிமைக்கும் பரிவிற்குமான சின்ன இடைவெளிதான் மனிதம்.

2 comments:

  1. Great insight!
    " தனிமைக்கும், பரிவிற்குமான சின்ன இடைவெளி தான் ' மனிதம்' "
    Greatly touched by your definition for " மனிதம்"

    ReplyDelete
  2. அழகானதொரு பதிவு. பதிவின் ஒவ்வொரு வரியும் 'பரிவு' எனும் பண்பைப் பறைசாற்றிடினும், நம் வாழ்வியலுக்கு வளமேற்றும் இன்னும் பல கருத்துக்களையும் சேர்த்தே களமிறக்கியிருக்கிறார் தந்தை.அவற்றில் " பெரியவைகளால் சிறியவைகள் துன்புறக்கூடாதென்பதும், தனிமை நாடிச்செல்பவர்கள் தனிமை அனுபவிப்பவிப்பவர்களின் துணியாளராகத் தன்னையே மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதும்" நாம் கருத்தில் கொள்ள வேண்டிய வரிகள்." தனிமை" எனும் மூன்றெழுத்தின் 'தவம்', 'ரணம்' எனும் இரு முகங்களைக் தந்தை தரம் பிரித்துக் காட்டியிருப்பது கொஞ்சம் மனத்தின் கனத்தைக் கூட்டுகிறது.இன்றைய பதிவின் அத்தனையையும் உணர்ந்து செயல்பட நிச்சயம் ஒருவருக்குக் கொஞ்சம் " ஓய்வு" தேவை என்பதைச் சொல்லாமல் சொல்லும் தந்தைக்கு ஒரு சல்யூட்!!!

    ReplyDelete