Tuesday, February 19, 2019

மரங்களைப் போல

இன்றைய (20 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 8:22-26)

மரங்களைப் போல

நேற்றைய தினம் என் நண்பர் ஒருவருடன் சிறிய வாக்குவாதம். பொருள் இதுதான்: 'உதவி செய்வது.'

'யாரும் கேட்காமல் நான் யாருக்கும் உதவி செய்வதில்லை. ஏனெனில், அப்படி நானாக வலிந்து உதவி செய்தபோதெல்லாம் நான் ஒரு முட்டாளாக நடத்தப்பட்டதை நான் உணர்ந்திருக்கிறேன்' என்று என் மேசையில் அமர்ந்து அருள்பணியாளர் நண்பரிடம் சொன்னேன்.

அவர் மாற்றுக் கருத்து சொன்னார்.

'உதவி இவருக்குத் தேவைப்படும் என்று நாமாக தேடி உதவி செய்ய வேண்டும். தாய் தன் குழந்தைக்கு எப்படி உதவுகிறாளோ, அல்லது நல்ல சமாரியன் எப்படி உதவினானோ' என்று நிறைய மேற்கோள்களுடன் பேச ஆரம்பித்தார்.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பார்வையற்ற ஒருவருக்கு பார்வை தருகின்றார். பார்வையற்ற நபரை ஊருக்கு வெளியே அழைத்துச் செல்கின்றார். அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, 'ஏதாவது தெரிகிறதா?' என்று கேட்கின்றார்.

அதற்கு பார்வையற்ற நபர் மிக அழகான வார்த்தைகளைப் பதிலாகச் சொல்கின்றார்:

'மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால், நடக்கிறார்கள்.'

இவ்வார்த்தைகளை நாம் மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் சாதாரண வார்த்தைகளாகத் தெரிகின்றன. ஆனால், இந்த வார்த்தைகளைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இம்மனிதனுக்கு ஒட்டுமொத்த மனிதர்கள்மேல் இருந்த கோபம், வெறுப்பு, எதிர்ப்பு தெரிகிறது. இவர் ஒரு போராளியாகவே என் கண்களுக்குத் தெரிகிறார்.

அதாவது, இவருக்கு இவ்வளவு நாள்கள் பார்வையில்லை. பார்வையற்ற இவர் கண்டிப்பாக மற்ற மனிதர்களைச் சார்ந்தே தன் வாழ்க்கையை நகர்த்தியிருப்பார். இவருக்கு உதவி சில நேரங்களில் தாமாகக் கிடைத்திருக்கும். சில நேரங்களில் இவர் கேட்டு கிடைத்திருக்கும். சில நேரங்களில் உதவி மறுக்கப்பட்டிருக்கும். உலகில் கொஞ்ச மனிதர்கள் மட்டுமே இருப்பதாக இவர் நினைத்திருக்கலாம். ஆனால், பார்வை தெரிய ஆரம்பித்தவுடன், உலகம் தெரிய ஆரம்பிக்கிறது. மனிதர்கள் தெரிய ஆரம்பிக்கிறார்கள்.

'இவ்வளவு மனிதர்கள் இருந்தும் எனக்கு இதுவரை யாரும் உதவி செய்ய முன்வரவில்லையே' என்று ஆதங்கத்தால்தான் என்னவோ, 'மனிதர்களைப் பார்க்கிறேன். இவர்கள் மரங்கள்போலத் தோன்றுகின்றார்கள். ஆனால் நடக்கிறார்கள்' என்று நக்கலாகப் பேசுகின்றார்.

'இவ்வளவு பேர் இருந்தும் எனக்கு உதவாத இவர்கள் மரங்களே. நடக்கும் மரங்களே' என்று ஒட்டுமொத்தமாக தன் கோபத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்கின்றார் இந்தப் பார்வை அற்ற (பெற்ற) நபர்.

மனிதர்கள் பெரிதாக யாருக்கும் ஒன்றும் செய்யத் தேவையில்லை. பார்வையற்ற ஒருவரை ஒரு பத்து அடி பாதுகாப்பாக நகர்த்திவிட்டால் போதும். அடுத்த பத்து அடியை இன்னொருவர் பார்த்துக்கொள்வார். பசியால் வாடும் ஒருவர் பிச்சை கேட்கிறார். அவரைக் கூட்டி வந்து வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அவருக்குத் தேவையான உணவைக் கொடுத்து, என்னைப் போன்ற இன்னொருவரை அவர் சந்திக்கும் வரை அவருடைய தேவைகளைப் பார்த்துக்கொண்டால் போதும்.

இன்று, அடுத்தவரை அடித்துப் பறிக்கும் நிலைதான் மிக அதிகமாக இருக்கிறது. 'என்னுடையதும் உன்னுடையது. உன்னுடையதும் என்னுடையது' என்ற நிலைதான் எவ்வழியிலும் சம்பாதிக்க ஒருவரைத் தோன்றுகிறது.

மரம் நல்லதுதான். அது நிழல்தரும். கனிதரும். ஆனால், மனிதர்கள் மரங்களைப் போல இருந்தால் அது நல்லதன்று. நகராத மரங்களே நிழலும் கனியும் தருகின்றன என்றால், நகர்கின்ற மரங்களாகிய மனிதர்கள் இன்னும் எவ்வளவோ செய்யலாமே!

உதவி கேட்டு வருபவருக்கு உதவுதலும் சால்பு.
உதவி கேட்காமல் நிற்பவர்களைத் தேடி உதவுதலும் சால்பு.

2 comments:

  1. Great! Rev.fr.Yesu!
    " மனிதரைப் பார்க்கிறேன்; அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள், ஆனால் நடக்கிறார்கள்".
    ஆஹா! இதற்கு இத்துணை அருமையானதொரு விளக்கம் யான் கேட்டதில்லையப்பா!
    Really Wonderful!
    God has specially made you for HIS purpose!🙏
    Praise to our Lord!

    ReplyDelete
  2. தான் வலியச்சென்று ஒருவருக்கு உதவிய போதெல்லாம் தான் ஒரு முட்டாளாக நடத்தப்பட்டதாக பதிவின் ஆரம்பத்தில் முன் வைக்கிறார் தந்தை.இதை ஒத்துக்கொள்ள மறுக்கும் நான் தந்தையின் நண்பனின் கட்சி. ஒருவர் நம்மிடம் கேட்காமலே அவர் தேவையறிந்து,நிலை உணர்ந்து ஒரு தாயாக,ஒரு நல்ல சமாரியனாக முன்வந்து செய்வதே உதவி.ஒருவர் கேட்கும் வரை காத்திருந்து உதவுவது நம் இறுமாப்பையே பிரதிபலிக்கும்.புதிதாகப் பார்வை பெற்ற மனிதர் பிற மனிதர்களை எப்படி வேண்டுமானாலும் பார்த்துவிட்டுப் போகட்டும்.ஆனால் தன் பதிவின் இறுதிக்குள் தந்தை பெற்ற ஞானோதயம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.ஆம்!
    "உதவிகேட்டு வருபவருக்கு உதவுதலும் சால்பு
    உதவி கேட்காமல் நிற்பவர்களைத் தேடி உதவுதலும் சால்பு."
    நவீன வள்ளுவர் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete