Wednesday, February 13, 2019

மை வாலண்டைன்

இன்றைய (14 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 7:24-30)

மை வாலண்டைன்

இன்றைய நாள் உலகம் முழுவதும் 'காதலர் தினமாக' ('வாலண்டைன்ஸ் டே') என்று கொண்டாடப்படுகிறது. நம் தமிழகத்தில் இது 'சகோதரிகள் தினம்' என்று அரசு அறிவித்திருக்கிறது. 'இன்றைய காதலியர் நாளைய சகோதரிகள்' என்ற தொலைநோக்குப் பார்வையோடு இப்படி அறிவித்ததா, அல்லது 'இன்றைய சகோதரிகள் நாளைய காதலியர்' என்ற எதிர்நோக்கோடு இப்படி அறிவித்ததா என்று தெரியவில்லை.

இன்றைய முதல் (காண். தொநூ 2:18-25) மற்றும் நற்செய்தி (மாற் 7:24-30) வாசகங்கள் இன்றைய நாளுக்குப் பொருந்துபவைகளாக இருக்கின்றன.

எப்படி?

இன்றைய முதல் வாசகத்தில், 'மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று' என்று கடவுள் சொல்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'பிள்ளைகளுக்கு உரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதன்று' என்று இயேசு சொல்கிறார்.

'நல்லதன்று' என்று சொன்ன கடவுள் முதல் வாசகத்தில் ஆணுக்குத் தகுந்த துணையை உருவாக்குகிறார். 'நல்லதனற்று' என்று சொன்ன இயேசுவுக்கு ஒரு மாற்று வழியைக் கற்பிக்கின்றார் பெயரில்லா அந்தப் பெண்.

பெண் படைக்கப்பட்ட நாளும் ஆண் நன்றாகத் தூங்கிய நாளும் ஒன்றாக இருப்பது விவிலியத்தில் நாம் காணும் ஒரு விந்தை. தூங்குகின்ற ஆணின் விலா எலும்பை எடுத்து பெண்ணாகச் செய்கின்றார் கடவுள். பெண் எடுக்கப்பட்ட இடம் சதையால் அடைக்கப்படுகிறது. ஆக, ஆணின் வன்மை குறைத்து அங்கே மென்மையை நிரப்புகிறாள் பெண். ஆண் தூங்கி எழுந்தவுடன், பெண்ணை கடவுள் அவனிடம் அழைத்து வருகின்றார். பார்த்தவுடன் காதல் பற்றிக்கொள்கிறது. மற்ற விலங்குகளைக் கண்டவுடன் வெறும் பெயர்களிட்டு அமைதி காத்தவன், 'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும்...இவள் பெண்' எனக் குதிக்கிறான். ஆணின் வன்மையாக, மென்மையாக இருக்கிறாள் பெண். இருவரும் ஒரே உடலாய் இருக்கிறார்கள்.

இருவரும் வெட்கப்படவில்லை. 'வெட்கம்' என்பது வித்தியாசம் என்னும் உணர்வு. எல்லாரும் ஷூ அணிந்திருக்கிற இடத்தில் ஸ்லிப்பர்ஸ் அணிவது குறித்து நான் வெட்கம் அடைகின்றேன் எனில், அங்கே நான் என்னை அடுத்தவரிடமிருந்து வித்தியாசமாக உணர்கிறேன் என்பது பொருள்.

ஆக, வித்தியாசங்கள் இருந்தாலும் வெட்கம் அவர்களிடம் இல்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் புறவினத்துப் பெண் ஒருத்தி தன் மகளுக்கு நலம் நாடி இயேசுவிடம் வருகின்றார். இயேசுவோ, 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதன்று' என்கிறார். பெண் பின்வாங்கவில்லை. அவள் வெட்கப்படவும் இல்லை. மாறாக, அவளின் வார்த்தைகள் இயேசுவுக்கே வெட்கத்தை உண்டாக்குகின்றன: 'ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே!' அதாவது, நாய்க்குட்டிகள் கீழே இருந்தாலும் அவைகள் வாயில் இருப்பதும், பிள்ளைகள் வாயில் இருப்பதும் ஒன்றுதானே, என்று இயேசுவின் கண்களைத் திறக்கிறார். இயேசு பிள்ளை வேறு, நாய்க்குட்டி வேறு என்று வேற்றுமை பாராட்டினார். பெண், நாய்க்குட்டியின் வாயில் இருப்பதும் பிள்ளையின் வாயில் இருப்பதும் ஒன்றே என்று ஒற்றுமை பாராட்டுகிறார்.

தான் தன் மகளுக்காக 'நாய்' என்று அழைக்கப்படவும் வெட்கப்படவில்லை இந்தப் பெயரில்லா வாலண்டைன்.

பார்த்தவுடன் துள்ளிக் குதிக்கும், பரவசமாகும் 'ஆதாம்' வகைக் காதல், விரைவில் மாறிவிடும். ஏனெனில், இன்னும் சில வசனங்கள் கழித்து இதே ஆதாம், 'நீர் என்னோடு இருக்குமாறு தந்த அந்தப் பெண்' என்று பெண்ணை அந்நியப்படுத்துவான்.

ஆனால், பொதுவிடத்தில் வெட்கம் ஏற்கும், நிந்தை ஏற்கும், அவமானப்படும், தன் குழந்தை நலம் பெற்றால் போதும் என்று விடாப்பிடியாய் இருக்கும் 'சிரிய பெனிசிய பெண்' வகைக் காதல் மாறாது. அது தான் அன்பு செய்பவருக்காக எவ்வகைத் தியாகத்தையும் தாங்கும்.
இன்று,

நிறைய சாக்லேட்டுகள், கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், குறுஞ்செய்திகள், டிக்டாக் வீடியோக்கள் பரிமாறப்படும். நிறையப் பரவசமும் துள்ளலும் இருக்கும்.

ஆனால், பரவசமும் துள்ளுதலும் காதல் ஆகிவிடாது.

காதல் செய்ய பரவசமும் துள்ளுதலும் தேவையில்லை. வலியும், வேதனையும், கேலிப் பேச்சும் போதும். இவைகளில் நிலைக்கும் காதல் என்றும் நிலைக்கும்.

இதையே வேறு வார்த்தைகளில் இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 128) முன்வைக்கிறது:

'ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர். நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!'

ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் வழி பல நேரங்களில் வலி நிறைந்தது. அங்கே பரவசமும் துள்ளுதலும் இருக்காது. ஆனால், நிறைய உழைப்பும், நற்பேறும், நலமும் இருக்கும்.


2 comments:

  1. மேலை நாடுகளில் வியாபார கலாச்சாரம் முன்னிட்டுக் கொண்டாடப்படும் பல விஷயங்களை ஏன்,எதற்கு என்று கூடத்தெரியாமல் காப்பியடிப்பது நம்மவருக்குப் பழக்கமாகிவிட்டது.அதில்ஒன்று தான் இந்த 'வாலண்டைன்ஸ் டே.' 'காதலர் தினம்' என்று கொச்சைப்படுத்தப்படும் ஒரு விஷயத்தை ஏதோ பெரிய மனசுடன் ' சகோதரிகள் தினம்(?)' என்று நமது அரசு அறிவித்தால் அதையும் கேலிப்பொருளாக்கியுள்ளார் தந்தை.கேலிபண்ணப்பட வேண்டிய விஷயமே! தப்பில்லை.ஆனால் இந்த 'மண்ணுக்குரிய' ஒரு விஷயத்தை 'விண்ணுக்குரிய' விஷயமாகத் தந்தை புரட்டிப் போடுவது பாராட்டுக்குரியது. 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்களுக்குப் போடுவது சரியல்ல' என்ற இயேசுவே நாணிப்போகுமளவிற்கு " நாய்க்குட்டியின் வாயிலிருப்பதும்,பிள்ளையின் வாயிலிருப்பதும் ஒன்றே' என்கிறார் அந்தப்பெண்.சாக்லேட்டுகள்,வாழ்த்து அட்டைகள்,கடிதங்கள், குறுஞ்செய்திகளைத் தாண்டி மனத்தில், வலியோடும்,வேதனையோடும் நம்முடைய ஒரு புன்முறுவலுக்காக ஏங்கி நிற்கும் எத்தனையோ வாலண்டைன்கள் நம்மைச்சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை ஏறெடுத்துப்பார்ப்போம்.ஏனெனில் ' அதுவே ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் வழி.அதுவே நிறைய உழைப்பையும்,நற்பேரையும்,நலத்தையும் கொண்டிருக்கும் வழி' என்கிறது இன்றைய பதிலுரைப்பாடல் என்கிறார் தந்தை.

    நாம் வியந்து பார்க்கும் விஷயங்களை மட்டுமல்ல; கொஞ்சம் தயக்கம் கலந்து ஏற்கும் விஷயங்களையும் கூட தனக்கே உரித்தான சிந்தனையால்,வார்த்தைகளால் விண்ணகத்தை நோக்கித்திருப்பி விடும் தந்தை நிச்சயம் பாராட்டுக்குரியவரே!!!

    ReplyDelete