Thursday, February 14, 2019

திறக்கப்பட்டன

இன்றைய (15 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 7:31-37)

திறக்கப்பட்டன

இன்றைய முதல் (தொநூ 3:1-8) மற்றும் நற்செய்தி (மாற் 7:31-37) வாசகங்களில், 'திறக்கப்பட்டன' என்ற வார்த்தை பொதுவானதாக இருக்கிறது.

'அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடன் இருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன.'

'பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, 'எப்பத்தா' அதாவது 'திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன.'

இன்றைய முதல் வாசகத்தில் பாம்பு நம் முதற்பெற்றோரைச் சோதிக்கும் நிகழ்வையும், நற்செய்தி வாசகத்தில் இயேசு காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைக் குணமாக்கும் நிகழ்வையும் வாசிக்கக் கேட்கின்றோம்.

இரு நிகழ்வுகளிலும் திறக்கப்படுபவர் மற்றவரிடமிருந்து தனியே அழைத்துச் செல்லப்படுகின்றார்.

முதல் நிகழ்வில் திறக்கப்படுதல் வெட்கம் என்ற உணர்வை உண்டாக்குகிறது.

இரண்டாம் நிகழ்வில் திறக்கப்படுதல் ஆச்சயர்யம் என்ற உணர்வை உண்டாக்குகிறது.

முதல் நிகழ்வு அவர்களைக் கடவுளிடமிருந்து அந்நியப்படுத்துகிறது.

இரண்டாம் நிகழ்வு அவரைக் கடவுளோடு ஒன்றிணைக்கிறது.

'கடவுளைப் போல ஆக வேண்டும்!' என்ற ஆசையினால் அவர்கள் கனியை உண்டார்களா? அல்லது 'எல்லாவற்றையும் சொன்ன கடவுள் இதைச் சொல்லவில்லையே?' என்ற கோபத்தில் அவர்கள் கனியை உண்டர்களா? - என்று தெரியவில்லை.

நன்மை-தீமை அறியத் தொடங்கியவுடனேயே அவர்களை இறப்பு பற்றிக்கொள்கிறது. ஏனெனில், நன்மை-தீமை அறிதல் இறப்பின் காரணியாக மாறிவிடுகிறது. இருவரும் 'நான் செய்தது சரி - நீ செய்தது தவறு' என்று அதே நன்மை தீமையால் பிரிகின்றனர். வேறுபட்டு நிற்கின்றனர். வேறுபடுதலே வெட்கம் என்ற உணர்வை நம்மில் எழுப்புகிறது.

இன்றைய நற்செய்தியில் காது கேளாதவரிடமிருந்த வெட்க உணர்வை தன் அறிகுறியால் அகற்றுகின்றார் இயேசு. ஆகையால்தான், இதுவரை அவரை விலக்கிவைத்தவர்கள், அவரைத் தங்களோடு ஏற்றுக்கொள்கிறார்கள். முதற்பெற்றோரின் வெட்க உணர்வு ஆடையால் சரிசெய்யப்படுகிறது.

'திறக்கப்படுதல்' அவசியம்தான். அது நம்மை புதிய வாழ்விற்குள் இட்டுச்செல்லும்தான். ஆனால், சில நேரங்களில் அது நம்மை நமக்குள்ளே அடைத்துவிடும். இன்று என் வாழ்வில் நான் திறந்துகொள்ள வேண்டியவை எவை?

1 comment:

  1. முதல் மற்றும் நற்செய்தி வாசகம் இரண்டிலுமே 'திறக்கப்படுபவர் தனியே அழைத்துச்செல்லப்படுகிறார்' எனவும், முதல் நிகழ்வு ஆதி பெற்றோரைக் கடவுளிடமிருந்து அந்நியப்படுத்த, நற்செய்தி நிகழ்வு மனிதனைக் கடவுளோடு ஒன்றிணைப்பதாகவும் சொல்லப்படுகிறது. " திறக்கப்படுதல்" என்பது " அறிதலின்" முதற்படி என்றே கூறலாம்.ஒரு விஷயத்தைப்புரிந்து கொள்ளவோ,தெரிந்து கொள்ளவோ வேண்டுமெனில் நம் அகமும்,புறமும் திறக்கப்படுதல் அவசியம் என எண்ணுகிறேன். எல்லா நேரங்களிலும் நம்மை அது நல்ல விஷயத்திற்கு மட்டுமே அழைத்துச்செல்ல வேண்டுமெனும் அவசியமில்லை. 'களவும் கற்று மற' என்கிறது முதியோர் மொழி. கசப்பான அனுபவங்களே எனினும் அவையும் நம்மை நெறிப்படுத்தக் கூடியவையே! ஆகவே ' திறக்கப்படுதல்' அவசியமே! தந்தையின் கூற்றுப்படி சிலசமயங்களில் அது நம்மை நமக்குள்ளே அடைத்துவிடினும் ' அடுத்த முறை' என்ற ஒன்று எப்போதுமே நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறதை நாமறிவோம். என் வாழ்வில் நான் திறந்து கொள்ள வேண்டியவை எவை? யோசிக்கிறேன்.முதற்படியில் இறங்கிவிட்டால் முடியும் வரை இறங்க வேண்டியதுதானே! 'திறக்கப்படுதல்' எனும் அர்த்தமுள்ள ஒரு சொல்லை இன்றைய சிந்தனைப்பொருளாக்கித் தந்த தந்தைக்கு என் நன்றிகள்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete