Sunday, February 24, 2019

செத்தவன் போலானான்

இன்றைய (25 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 9:14-29)

செத்தவன் போலானான்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் ஒருவனை நலமாக்குகின்றார்.

இந்த நிகழ்வை மாற்கு மிக அழகாக சித்தரிக்கிறார். இந்த நிகழ்வில் வரும் சிறுவனின் அப்பா, 'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்கிறார். ஆனால், இந்நிகழ்வில் வரும் சீடர்களோ, இயேசு அவர்களுடைய அருகிலிருந்தும் அவரை நம்ப மறுக்கின்றனர். இந்த முரண்தான் மாற்கு நற்செய்தியாளர் தரும் பாடம்.

இந்த வாசகத்தில் வரும் 'அப்பா' என்ற கதைமாந்தரை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

அப்பாக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அம்மாக்கள் ஒரு குழந்தையின் 'உள் விவகாரம்' பற்றி அக்கறைப்படுகிறார்கள் என்றால், அப்பாக்கள் அக்குழந்தையின் 'வெளி விவகாரம்' பற்றி அக்கறைப்படுவார்கள். எடுத்துக்காட்டாக, குழந்தையின் உடல் நலம், மனநலம், உடல் உபாதைகள், அதைச் சரி செய்யும் விதம், குழந்தையின் உடல் வளர்ச்சி எல்லாம் அம்மா டிபார்ட்மெண்ட். ஆனால், வீட்டின் வாசலைத் தாண்டி குழந்தை செய்யும் அனைத்து விடயங்களும் - படிப்பு, வேலை தேடுதல், வேலை என எல்லாம் அப்பா டிபார்ட்மெண்ட். அப்பா தான் சமூகத்திற்கும் வீட்டிற்குமான இணைப்புப் புள்ளி. இப்படிப்பட்ட ஒரு அப்பாவைத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கின்றோம்.

ஒரு அப்பா, பேய் பிடித்து வலிப்பு நோய் வந்து, வாயில் நுரை தள்ளித் தெருவில் கிடக்கும் மகன், தீய ஆவி விரட்ட முயன்று தோற்றுப் போகும் சீடர்கள், வேடிக்கை பார்க்கும் கூட்டம்.

இங்கே அப்பாவும் அவருடைய மகனும் சீடர்களின் பயன்பாட்டுப் பொருளாகவும், ஊராரின் கேலிப்பொருளாகவும் மாறிவிடுகின்றனர். தன் மகனின் சீக்ரெட் வெளியில் தெரியும்போது வருத்தப்படுபவர் அம்மாiவிட அப்பாதான். ஏனெனில், அதனால் வரும் விளைவுகளை உடனடியாக அவர் மனம் எண்ண ஆரம்பிக்கும். வலிப்பு வந்த சிறுவன் - எப்படிப் படிப்பான்? எப்படி வேலை பார்ப்பான்? எப்படி திருமணம் முடிப்பான்? எப்படி வாழ்வில் செட்டில் ஆவான்? என்று நிறையக் கேள்விகள் இருந்திருக்கும்.

கானானியப் பெண் நிகழ்வில் ஒரு தாய் தன் மகளுக்காக அவமானம் தாங்கவதைப் பார்க்கிறோம். இங்கே ஒரு தந்தை தன் மகனுக்காக அவமானம் தாங்குகிறார்.

இயேசு நிகழ்வுக்குள் வந்தவுடன் நிகழ்வு தலைகீழ் மாற்றம் பெறுகிறது.

இயேசுவைக் கண்டவுடன் சிறுவனின் உள்ளிருக்கும் பேய் இன்னும் வேகமாகச் செயலாற்ற ஆரம்பிக்கிறது.

'இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?' என்கிறார் இயேசு.

அதாவது, மறைமுகமாக, 'எவ்வளவு நாள் நீர் இத்துன்பத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறீர்?' என்று அப்பாவின் துயரை அறிந்தவராகக் கேட்கிறார் இயேசு.

அந்த அப்பா ரொம்ப வெகுளியானவர். பொய் எதுவும் சொல்லவில்லை. 'குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது' என்கிறார். தொடர்ந்து பேய் சிறுவனுக்குச் செய்வதனைத்தையும் சொல்கின்றார். இறுதியில், 'உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள் மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்கிறார்.

அப்பாக்கள் வழக்கமாக யாரையும் உதவி கேட்டு வற்புறுத்துவதில்லை. ஏனெனில், ஒவ்வொரு ஆணும் தன்னால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்றே எண்ணுவார். மேலும், தன் மகனின் முன்னிலையில் உதவி கேட்பது தன்மதிப்பு குறைவு என நினைப்பார். ஏனெனில், ஒவ்வொரு குழந்தையும் தன் அப்பாவை தன் முதல் ஹூரோ என எடுத்து வாழும். அந்த நேரத்தில் போய், தான் இயேசுவிடம் உதவி கேட்டு நின்றால் அது குழந்தையின் தன்மானத்தையும் பாதிக்கும் என்பதில் மிகவும் அக்கறையாயிருக்கிறார் இந்த அப்பா. மேலும், ஏழைகள் தங்களுக்கு உதவி வேண்டி யாரையும் வற்புறத்தமாட்டார்கள். உதவி கிடைக்கவில்லை என்றாலும் தங்கள் நிலை இதுதான் என்று எண்ணி தொடர்ந்து வாழ ஆரம்பிப்பார்கள். அப்படிபட்ட ஒரு உணர்வுப் பிரதிபலிப்பையே இங்கே பார்க்கிறோம்.

'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்கிறார் இயேசு.

அதாவது, 'என்னால் மட்டும் அல்ல. நீர் நம்பினால் உம்மாலும் நிகழும்' என்கிறார் இயேசு. தன் நிலைக்கு அந்த அப்பாவை உயர்த்துகிறார் இயேசு. அந்த அப்பாவும், 'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்று செபிக்கிறார்.

அந்த நேரத்தில்தான் இன்னொரு அதிர்ச்சி நடக்கிறது.

இயேசு பேயை ஓட்ட சிறுவன் செத்தவன் போலாகிறான்.

'அவன் இறந்துவிட்டான்' என்று மிக எளிதாகச் சொல்கிறது மக்கள் கூட்டம். அந்த நொடியில் அந்த அப்பாவும் இறந்துபிழைத்திருப்பார்.

இயேசு சிறுவனைத் தூக்கிவிடுகின்றார்.

ஆக, விரக்தி, அவமானம், அதிர்ச்சி என நம்பிக்கையில் நகரும் அப்பா இறுதியில் நலம்பெற்ற தன் மகனைத் தழுவிக்கொள்கின்றார்.

இன்றிலிருந்து நாம் முதல் வாசகமாக சீராக்கின் ஞானநூலை வாசிக்கின்றோம். இந்த நூல் முழுவதும் - ஏறக்குறைய - ஒரு அப்பா தன் மகனுக்கு அறிவுரை கூறுவதுபோலவே அமைந்திருக்கும்.

இன்று நம் அப்பாக்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம்.

அப்பாக்கள் நம்பிக்கையால் கடவுளைப் போல ஆகக்கூடியவர்கள்.


2 comments:

  1. அருமை!
    அருட்பணி.யேசு அவர்களே!
    ‌ . 🙏

    ReplyDelete
  2. நிந்தைக்கும்,அவமானத்திற்கும்,பாசத்திற்கும்,இயலாமைக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டத்தை அழகாக சித்தரிக்கிறார் தந்தை. தான் பெற்ற மகனின் நலனுக்காக எதையும் செய்யத்துடிக்கும் ஒரு அப்பாவின் நம்பிக்கையை முன்னிட்டு அவருக்காக எதையும் செய்யத்தயாராக இருக்கிறார்இயேசு. இப்படிப்பட்ட 'அப்பாக்களுக்காக' இறைவனுக்கு நன்றிசொல்வோம்.அவர்களின் அறிவுரையை வாழ்வாக்குவோம்."இறைவனுக்கு நிகரான அப்பாக்கள்"...... இவர்கள் பற்றிய கவிதை பாடிய தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!
    மேலே உள்ள படத்தில் காணும் இரு கரங்களையும் சேர்த்தே ஸ்பரிசிக்கத் தோன்றுகிறது.அருமை!!!

    ReplyDelete