Tuesday, February 26, 2019

நம்மைச் சாராதவர்

இன்றைய (27 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 9:38-40)

நம்மைச் சாராதவர்

கிளாடியேட்டர் என்ற திரைப்படத்தில் தன்னிடம் உள்ள கிளாடியேட்டர்களுக்குப் பயிற்சி கொடுத்து, முதன் முதலாக அவர்களை அரங்கத்திற்குள் அனுப்பும்போது அவர்களின் மாஸ்டர் ஒரு இரகசியம் சொல்லி அனுப்புவார்: 'நீ தோற்காமல் அல்லது சாகாமல் இருக்க வேண்டுமென்றால் மக்களை வெற்றி கொள்!' - வின்னிங் தெ க்ரவ்ட்.

வருகிற மே மாதம் தேர்தல் வருகிறது. அத்தேர்தலில் நாம் நிற்க அழைக்கப்படுகிறோம். தேர்தலுக்கு இன்னும் 90 நாள்களே உள்ளன. நம் தொகுதியில் 90000 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இப்போதுள்ள நிலையில் எனக்கு வெறும் 100 பேரைத்தான் இவர்களில் தெரியும். மீதியுள்ள 89900 பேரை நான் தெரிந்துகொண்டால்தான் என்னால் தேர்தலில் வெற்றி பெற முடியும். இந்த அளவு இல்லை என்றாலும் பாதிக்கு மேல் உள்ள மக்களையாவது தெரிந்தாக வேண்டும். ஆக, 'நான் அவர்களையும், அவர்களுடைய நல்லெண்ணத்தையும் வென்றால்தான் நான் வெற்றி பெற முடியும்!'

தேர்தல் தவிர்த்து நாம் அன்றாடம் செய்யும் அலுவல்களிலும் இது பயன்படும்.

என் வீட்டில் உள்ள ஒரு குழந்தைக்கு நான் பிறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். அதற்காக நான் மாநகராட்சி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு நான் சென்று, எப்போது அந்த அலுவலரை 'வெற்றி' கொள்கிறேனோ அப்போதுதான் என் குழந்தைக்குச் சான்றிதழ் கிடைக்கும். இந்த வெற்றிக்காக நாம் பயன்படுத்தும் வழிகள் பலவாக இருக்கலாம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு அன்பு செய்த சீடர் யோவான், இயேசுவின் குழுமத்தைச் சாராத ஒருவர் இயேசுவின் பெயரால் பேய் ஓட்டுவதைத் தான் தடுக்கப்பார்த்ததைச் சொல்லுகின்றார். இது இவருடைய பொறாமை அல்லது இயலாமையின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது 'குழு உணர்வு' அல்லது 'குழுமத்தின்' மேல் இருந்த அக்கறையாக இருக்கலாம். ஆக, அவர் 'நம்மைச் சாராதவர்' என்று அந்த நபருக்கு முத்திரை இடுகின்றார்.

ஆனால், இயேசுவின் பார்வை சற்று வித்தியாசமாக இருக்கிறது. அதாவது, 'பேய் ஓட்டும் அந்த நபருக்கும் உனக்கும் உள்ள வேற்றுமையைப் பார்க்காதே. ஒற்றுமையைப் பார். நீங்களும் என் பெயரால் ஓட்டுகிறீர்கள். அவரும் என் பெயரால் ஓட்டுகிறார்' என்று யோவானுக்கு மறைமுகமாக அறிவுரை கூறும் இயேசு, மறைமுகமாக பேய் ஓட்டும் அந்த நபரையும், யோவானையும் ஒரே நேரத்தில் வெற்றிகொள்கின்றார்.

யாரால் மற்றவர்களை எளிதில் வெற்றிகொள்ள முடியும்?

1. யார் ஒருவர் தனக்கும் மற்றவருக்கும் உள்ள வேற்றுமையைப் பார்க்காமல் ஒற்றுமையைப் பார்க்கிறாரோ அவர் பெற்றி பெறுவார். அதாவது, 'நீங்க தமிழ் பாடம் எடுக்குறீங்க! நான் ஆங்கிலம் எடுக்கிறேன்!' என்றால் அது வேற்றுமை. ஆனால், 'நீங்களும் நானும் ஒரே பள்ளியில் வேலை செய்கிறோம்' என்றால் அது ஒற்றுமை.

2. பார்வையை அகலமாக்க வேண்டும். நாம் ஒரு பொருளை மிகவும் பக்கத்தில் வைத்துப் பார்க்கும்போது அது தன் இயல்பைக் காட்டுகிறேன் என்ற நினைப்பில் நம் கண் பார்வையை மறைத்துவிடும். ஆனால், அதைத் தனியே மற்ற பொருள்களோடு வைத்துப் பார்க்கும்போது அது தன் தனிப்பட்ட நிலையை இழந்தாலும், அங்கே நம் பார்வை அகலமாகும். அகலமான பார்வையும், விரிந்த உள்ளமும் கொண்டவர்கள் எல்லாரையும் இணைத்தே பார்ப்பார்கள்.

3. 'ஒன்றின் தொடக்கத்தை அல்ல. அதன் முடிவையே பார்க்க வேண்டும்' என்பார் சபை உரையாளர். எடுத்துக்காட்டாக, நம் தொடக்கம் நம்மை மற்றவரிடமிருந்து பிரிக்கிறது. ஆனால், நம் முடிவு ஒருவர் மற்றவரோடு நம்மை இணைக்கிறது. இந்நிகழ்வில் 'பேய் வெளியேறுகிறது' என்பது முடிவு. யார் சொல்லி விரட்டினால் என்ன? பேய் வெளியேறினால் நல்லது - என முடிவைப் பார்க்கின்றார் இயேசு.

'மக்களை வெற்றிகொள்ளும்' இவ்வழிகளை 'ஞானம்' என்ற ஒற்றைச் சொல்லால் வரையறுக்கிறது இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 4:11-19).

அறிவு பிரித்துப் பார்க்கும் - யோவானின் அறிவு போல.
ஞானம் இணைத்துப் பார்க்கும் - இயேசுவின் ஞானம் போல.

அறிவில் தோல்வி அதிகம். ஆனால், ஞானத்தில் என்றும் வெற்றியே.


1 comment:

  1. " நீ தோற்காமல் அல்லது சாகாமல் இருக்க வேண்டுமென்றால் மக்களை வெற்றிகொள்."....... கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளவும் வழி சொல்கிறார் தந்தை.அவ்வழிகளில் எனக்குப் பிடித்தது..." ஒன்றின் தொடக்கத்தையல்ல; முடிவையே பார்க்க வேண்டும்(( End justifies the means) பேய் வெளியேறுகிறது எனில் அதை யார் விரட்டினால் என்ன? அருமை! அந்த இறுதி வரிகள்..
    அறிவு பிரித்துப்பார்க்கும்- யோவானின் அறிவு போல
    ஞானம் இணைத்துப்பார்க்கும்- இயேசுவின் ஞானம் போல.
    அறிவில் தோல்வி அதிகம்.ஆனால் ஞானத்தில் என்றும் வெற்றியே.
    நான் அறிவாளியா? ஞானியா? ... பதிலைத் தேடுகிறேன். தேடுதலைத் தொடங்கி வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete