Monday, June 4, 2018

தமக்குச் சேர வேண்டிய பழங்கள்

நாளைய (4 ஜூன் 2018) நற்செய்தி (மாற் 12:1-12)

தமக்குச் சேர வேண்டிய பழங்கள்

திராட்சைத் தோட்டம் ஒப்பந்த அடிப்படையில் சில பணியாளர்களிடம் தரப்படுகிறது. தோட்டத்தின் விளைச்சலைப் பெற்று வருமாறு தலைவர் முதலில் பணியாளர்களை அனுப்புகின்றார். அவர்களில் சிலரை தோட்டத் தொழிலாளர்கள் கல்லால் எறிகின்றனர், சிலரை கொல்கின்றனர், சிலரை விரட்டி அனுப்புகின்றனர். இரண்டாவதாக, முன்பைவிட அதிக பணியாளர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்கும் அதே கதிதான். இறுதியாக, தலைவரின் ஒரே மகன். தலைவரின் எதிர்பார்ப்பு ஒரு மாதிரி இருக்க, நடப்பது என்னவோ வேறு மாதிரி இருக்கிறது. 'இவனே சொத்துக்குரியவன். இவனைக் கொன்றால் தோட்டம் நம்முடையது!' என அவர்கள் சொல்லிக் கொண்டே அந்த மகன் மீது பாய்ந்து கொல்கிறார்கள்.
இந்த இடத்தில் வாசகருக்கு உச்ச கட்ட கோபம் வருகின்றது. மகன் சின்னஞ்சிறுவனாகத் தான் இருந்திருக்க வேண்டும். தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் திராட்சைத் தோட்டம் எடுத்தால் அது விளைந்தவுடன் முதல் வேலையாக தலைவனுக்குரிய பங்கைத் தர வேண்டும் என்பது இணைச்சட்ட நூலின் பரிந்துரை. அவர்களின் முதல் தவறு, 'தலைவனுக்குச் சேர வேண்டியதைத் தனக்கென வைத்துக்கொண்டது!' - இதை பேராசை, ஊழல், பதுக்குதல் என அழைக்கலாம். இரண்டாவதாக, வன்முறை. யார்மேல்? தலைவனின் பணியாளர்கள் மேல். மூன்றாவதாக, கொலை. யாரை? ஒரே மகனை. இப்படிப்பட்ட தொழிலாளர்கள் பற்றி தலைவனுக்குத் தெரியவில்லையா? தெரிந்திருந்தும் அவர்களிடம் தோட்டத்தை ஏன் ஒப்படைத்தார்? தொழிலாளர்களுக்கு தலைவன் மேல் அப்படி என்ன கோபம்? அப்படிக் கோபம் இருந்தால் அதை தலைவன் மேல் காட்டியிருக்கலாமே? ஏன் மற்றவர்கள் மேல் காட்ட வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு உவமையில் பதில் இல்லை.

இந்த உவமையை இயேசுவே சொன்னார் என்றால் அது தன் இறப்பை முன்குறிப்பதாக இருக்கிறது. இல்லை, இது நற்செய்தியாளரின் கற்பனை என்போமாகில் இயேசுவின் படுகொலையை அவர்கள் உருவகமாக எழுதி, 'புதிய ஒப்பந்தப் பணியாளர்கள்' என்ற புதிய கிறித்தவர்களுக்கு ஆறுதல், நம்பிக்கை, புத்துணர்ச்சி தரவதற்காக எழுதப்பட்டது. இந்த இரண்டு எண்ண ஓட்டங்களிலும், தந்தை என்பது வானகத் தந்தையையும், தந்தையின் பணியாளர்கள் என்பவர்கள் இறைவாக்கினர்களையும், மகன் என்பவர் இயேசுவையும், தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் பரிசேயர்கள், மறைநூல் வல்லுநர்கள், தலைமைக்குருக்கள் எனவும் உருவகம் செய்து கொள்ளலாம். புதிய ஒப்பந்தப் பணியாளர்கள்தாம் புறவினத்தார்கள். புறக்கணிக்கப்பட்ட கற்களாக இருந்த இவர்கள் மூலைக்கற்களாகின்றனர்.

திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் செய்த தவறு என்ன?

தலைவருக்குச் சேர வேண்டிய பங்கை அவர்கள் கொடுக்க மறுத்ததுதான்.

மறுத்ததோடல்லாம் அந்தப் பங்கு தங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நிலக்கிழாரின் பணியாளர்கள் மற்றும் மகனையும் அழிக்கின்றார்கள்.

'எதெல்லாம் கொடுக்கப்படுகிறதோ அதெல்லாம் இறுதியில் திரும்ப பெறப்படும்' என்பதுதான் வாழ்க்கை நியதி. திராட்சைத் தோட்டம் நம்மிடம் கொடுக்கப்படுகிறது என்றால் அதைக் கொடுத்தவர் வந்து, 'என்னுடையது' என்று கேட்கும்போது கொடுத்துவிட வேண்டியதே சால்பு. அதுவே நீதியும்கூட.

அவருக்குச் சேர வேண்டிய பழங்களை நான் இன்று கொடுக்கின்றேனா?

1 comment:

  1. " எதெல்லாம் கொடுக்கப்படுகிறதோ அதெல்லாம் இறுதியில் திரும்பப் பெறப்படும்" என்பதுதான் வாழ்க்கை நியதி.திராட்சைத் தோட்டம் நம்மிடம் கொடுக்கப்படுகிறது என்றால் அதைக்கொடுத்தவர் வந்து " என்னுடையது" என்று கேட்கும்போது கொடுத்துவிட வேண்டியதே சால்பு.அதுவே நீதியும் கூட".... வாரத்தின் முதல் நாளான இன்று தரப்பட்டுள்ள தந்தையின் வரிகள் " எனக்கென்று நான் சொந்தம் கொண்டாடும் அனைத்தும் அவருடையவை தானே!" என்று என்று என்னை யோசிக்க வைக்கின்றன.இன்று என்னிடம் இருக்கும் இப்பொருட்கள் நாளை வேறு யாருக்கோ சொந்தமாகி விடலாம். இதை மனதில் கொண்டால் 'நமது' என்று எதன் மேலும் அதீதப் பற்றும் வராது; என்னிடமுள்ள அனைத்துமே என் அயலானுக்கும் சொந்தம் என்ற தாராள உள்ளமும் எனக்குச்சொந்தமாகும். இப்படித்தான் பார்க்க முடிகிறது இன்றையப்பதிவை என்னால். இந்த வாரம் இனிதே அமைய தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete