Sunday, June 10, 2018

பர்னபா

நாளை திருத்தூதர் பர்னபாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

'பர்னபா' என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கலாம். அரமேயத்தில் 'பர் நப்யா' என்று பிரித்தால் 'இறைவாக்கினரின் மகன்' அல்லது 'இறைவாக்கின் மகன்' என்றும், கிரேக்கத்தில் 'ஹ்யோஸ் பராக்ளேசேயுஸ்' எனப் பிரித்தால் 'ஆறுதலின் அல்லது தேற்றரவின் மகன்' என்றும் மொழிபெயர்க்கலாம் (காண். திப 4:36). 'இறைவாக்கும்' 'ஆறுதல் தருவதும்' சேர்ந்தே செல்லும் என்பது பவுலின் கூற்று (காண். 1 கொரி 14:3).

சைப்பிரசு நாட்டைச் சார்ந்த யோசே என்ற இவரைத்தான் 'பர்னபா' என்று மாற்றுகின்றனர் திருத்தூதர்கள். திப 14:14ல் இவரும் திருத்தூதர் என அழைக்கப்படுகின்றார். பவுலின் தூதுரைப் பயணங்களில் உடனிருந்த உற்ற தோழர் பர்னபா.

சைப்பிரசு நாட்டின் பாதுகாவலராக இன்று வரை அவர் கொண்டாடப்படுகிறார்.

திப 9:26-27ல் இவரின் முக்கியமான பண்பு வெளிப்படுகிறது:

'பவுல் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியது பற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.'

பர்னபாவின் ஆளுமை நமக்கு மூன்று விதங்களில் சவால் விடுகிறது:

1. இணைப்புக்கோடு

பர்னபா ஒரு இணைப்புக் கோடு - பவுலுக்கும், மற்ற தூதர்களுக்கும். இணைப்புக் கோடாக இருக்க வேண்டியவர் இரு தரப்பினரையும் அறிந்தவராக இருக்க வேண்டும். அல்லது ஒருவரை சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நம் உறவுநிலைகளில் நாம் இணைப்புக்கோடாக இருத்தல் அவசியம் என்பதை நாம் அறிவோம். இதை அருள்பணி வாழ்விற்குப் பொருத்திப் பார்த்தால், ஓர் அருள்பணியாளர் என்பவர் இறைவனுக்கும், மக்களுக்கும் உள்ள ஓர் இணைப்புக்கோடு. இவர் இந்த இருவரையும் முழுமையாக அறிந்தால்தான் தன் பணியைச் சரியாகச் செய்ய முடியும்.

2. நம்பிக்கை

'ஆண்டவர் பவுலுக்குத் தோன்றினார்' என்பதை நம்புகிறார். ஆச்சர்யமாக இருக்கிறது? கேள்வி கேட்கும் மனம் அல்ல, சரணடையும் மனமே நம்பிக்கையை நம்மில் வளர்க்கும். 'அப்படியா? ஆண்டவரைப் பார்த்தீங்களா? எங்கே? எப்போ? என்ன சொன்னார்?' என்ற எந்த கேள்வியும் இல்லாமல் நம்பும் துணிச்சல் இவருக்கு எங்கிருந்து வந்தது?

3. 'அவர் வளர வேண்டும். நான் குறைய வேண்டும்.'

பர்னபாவால் அறிமுகம் செய்யப்பட்ட பவுலே காலப்போக்கில் பர்னபாவைவிட மிக முக்கியத்துவம் பெறுகின்றார். 'உன் வளர்ச்சிக்கு நான்தான் காரணம்' என்று சொல்லிக் காட்டவோ, அல்லது 'அவன் வளர்ந்து விட்டான், நான் அப்படியே இருக்கிறேன்' என்று பவுல் மேல் பொறாமைப்படவோ இல்லை பர்னபா. அடுத்தவரை வளரவிட்டுப் பார்க்கின்றார். இது அவரின் பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டு. மற்ற திருத்தூதர்களோடு சேர்ந்து கொண்டு இவரும் பவுலை நிராகரித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. என்னே இவரின் தாராள உள்ளம்!

பர்னபா - நம் ஆறுதல்!

1 comment:

  1. "இறை வாக்கினரின் மகன்", " தேற்றரவின் மகன்" போன்ற பட்டங்களுக்குச் சொந்தக்கார்ரான '' தூய பர்னபா' குறித்த அழகான பல விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் தந்தை.ஒரு உறவு நிலை சரியான பாதையில் அதன் பயணத்தைத்தொடர மக்களுக்கும்,இறைவனுக்குமிடையே இணைப்புக்கோடாக இருக்க வேண்டுமென்பதும்,,கேள்வி கேட்கும் மனத்தை விடுத்து நம்மை நம்பிக்கைக்கு இட்டுச்செல்லும் ஒரு சரண்டையும் மனத்தைப் பெற வேண்டுமென்பதும்,அடுத்தவரை வளரவிட்டு அழகு பார்க்கும் மனத்தின தாராளமும் ஒரு அருட்பணியாளரையும் தாண்டி இம்மண்ணில் மக்களாய்ப் பிறந்த அனைவருமே வளர்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்.இந்த அத்தனை விஷயங்களையும் ஒரு சேர தன்னில் அடக்கிய தந்தையை இன்று விசேஷமாக வாழ்த்துகிறேன்.பர்னபா- நம் ஆறுதல்; நாம்- பலருக்கு ஆறுதல்!!!

    ReplyDelete