Monday, June 30, 2014

வெற்றியின் நாள் இதுவே!

சாலமோனின் அரசர் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கென எருசலேமில் ஆலயம் கட்டத் தொடங்குகின்றனர். அந்தக் கட்டடம் கட்டுவதற்காக எண்ணற்ற கற்கள் சுற்று வட்டாரத்திலிருந்து கொண்டு வரப்படுகின்றன. அப்படிக் கொண்டு வரப்பட்ட கற்களில் ஒரு கல் 'ட' வடிவத்தில் இருந்ததாம். அதனால் என்ன பயன் என நினைத்தவர்கள் அதை அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட்டனராம். கட்டடத்தின் அடித்தளம் கட்டத் தொடங்கியபோது இரண்டு பக்கங்களையும் சரிகட்டவும், வரப்போகும் கட்டட மேல் எடையைத் தாங்கவும் பெரிய கல் தேவைப்பட்டதாம். எங்கு தேடியும் கிடைக்காமல் கடைசியில் தாங்கள் ஒதுக்கித் தள்ளிய கல்லை எதேச்சையாக எடுத்துப் பொருத்திப் பார்க்கின்றனர். அது மிகவும் இசைவாகப் பொருந்தியதாம். அன்று உருவானதே அவர்களின் சொல்லாடல்:

'கட்டுவோர் புறக்கணித்த கல்லே
கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று'
(திபா 118:22)

திபா 118 நாம் அடிக்கடிக் கேட்கும் பல விவிலிய வசனங்களின் ஊற்றாக இருக்கின்றது. அவைகளைப் பொறுமையாக வாசித்தாலே அவை கண்ணாடி போல நம் உள்ளத்தின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கின்றன:

'ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.' (118:1)

'ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்?' (118:6)

'மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!' (118:8)

இந்த வசனத்தின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? விவிலியத்தில் உள்ள மொத்த வசனங்கள் 31,103. இதை இரண்டாகப் பிரித்து இதன் மையமாக உள்ள வசனம் எது என்ன என்று பார்த்தால் அது 118:8.

'ஆண்டவரே என் ஆற்றல். என் பாடல். என் மீட்பும் அவரே.' (118:14)

'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' (118:23)

'ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே. இன்று அக்களிப்போம். அகமகிழ்வோம்.' (118:24)

'வெற்றியின் நாள் இதுவே!'


1 comment:

  1. "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக் கல்லாயிற்று"..நம் வாழ்விலும் கூட இம்மாதிரி அனுபவங்களைச் சந்தித்திருப்கோம்.நம்மை ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்களென யாரேனும் ஒதுக்கி வைத்தால் துவண்டு போக வேண்டிய அவசியமில்லை.மகிமையின் கிரீடம் ஒன்று நமக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது என் நினைத்து நாம் பெருமைப் படலாம்.நமக்கு முன்னே ஒருவர் இதை வாழ்ந்து காட்டியுள்ளார் என் ஆறுதல் அடையலாம்.இன்றையத் திருப்பாடலின் அத்துணை வரிகளும் முத்துக்களின் கோர்வை.இறைவன் தங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete