Monday, June 23, 2014

உலகம் சிரிக்கிறது

திருப்பாடல்கள் ஏறக்குறைய 75 சதவிகிதம் முடித்தாயிற்று. இன்றைக்கு ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொள்வோம்.

நேற்று இரவு 'உலகம் சிரிக்கிறது' என்ற திரைப்படம் பார்த்தேன். எம். ஆர். ராதா, முத்துராமன், பிரேம் நாசிர், சௌகார் ஜானகி, வி.கே. ராமசாமி இவர்கள் நடித்து 1977 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். 'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்திற்குப் பின் வந்தது.

'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்தைப் பற்றிய குறிப்புகள் இந்தத் திரைப்படத்தில் உள்ளன. மேலும், ரத்தக் கண்ணீரின் முடிவு போலவே இந்தத் திரைப்படத்தின் முடிவும் இருக்கின்றது.

ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்க வேண்டும்?

திரைப்படத்தில் கேமரா யார் பின்னால் போகும்? அல்லது கதாநாயகன் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும்?

கேமரா யார் பின்னால் போகிறதோ அவர் தான் ஒரு திரைப்படத்தின் அல்லது நாவலின் கதாநாயகன்.

உதாரணத்திற்கு, ஊதாரி மகன் எடுத்துக்காட்டைப் பாருங்களேன். எழுதுகின்ற கதாசிரியரின் கண்கள் ஊதாரி மகன் பின்னாலே போகும். அவன் வீட்டில் இருக்கும் போது, தொலை நாட்டில் இருக்கும்போது, பன்றிகளின் நெற்றுக்களை உண்ணும் போது, வீடு திரும்பும் போது, வீடு திரும்பிய பின். ஆகையால் இந்த உவமையின் கதாநாயகன் இவர் தான் என்று நாம் கண்டு கொள்ள முடியும். எந்த நாவலைப் படிக்கும் போதும், எந்த விவிலியக் கதையைப் படிக்கும் போதும் நம் எண்ண ஓட்டம் இப்படித்தான் இருக்க வேண்டும்.

'உலகம் சிரிக்கிறது' - ஜெகதீஸ், சங்கர், குமார் - இந்த மூவரைச் சுற்றியே கேமரா வருகிறது. இந்த மூவரும் உலகின் மூன்று பேரை உருவகம் செய்கிறார்கள். நல்லதை உருவம் செய்யும் சங்கர். கெட்டவரை உருவகம் செய்யும் குமார். நல்லவரா, கெட்டவரா என்ற இடைப்பட்ட நிலையை உருவகம் செய்யும் ஜெகதீஸ்.

50 ஆண்டுகளுக்கு முன் நம் நாடு, நம் மண், நம் மொழி, நம் கலாச்சாரம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று பார்க்க வேண்டுமானால் இதைப் பாருங்கள். நம் நாட்டில் ஆங்கிலம் ஆட்சி செய்தது என்பதற்கான சுவடுகள் நம் மண்ணில் ஒட்டியிருந்ததை நன்றாகப் பார்க்க முடிகிறது - குதிரைப் பந்தயம், கோட்-சூட், போலிசின் யூனிஃபார்ம், கோர்ட் நடைமுறைகள், பெயர்ப்பலகைகள் அனைத்திலும் ஆங்கிலத்தின் எச்சம் இருக்கின்றது.

ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுபட்டு, நம் சொந்த மொழி, கலாச்சாரத்;திற்குத் திரும்ப நம் முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் உணர முடிகிறது.

பெண்களைக் காயப்படுத்தக் கூடாது, சூதாடக் கூடாது, மதத்தைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது, திருமணத்தின் மேன்மை, பதிவிரதை, வியாபார நுணுக்கம், சமூகத்தின் படிநிலை, ஆண்டான்-அடிமை ஏற்றத்தாழ்வு என எண்ணற்ற கருத்தோட்டங்களைக் கோர்த்து நிற்கிறது உலகம் சிரிக்கிறது.

என் மனதைத் தொட்டவைகளை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்:

அ. கதாநாயகியின் பெயர் செல்லா. எனக்கு ரொம்ப பிடித்த பெயர் இது. அதாவது இது ஒரு காரணப்பெயராகவே இருக்கிறது. 'செல்லா' என்னும் பெயர் 'என்னை என்றும் நீ செல்லமாக நினைக்க வேண்டும்' என்று தன் கணவனுக்குச் சொல்லாமல் சொல்கிறது. இவர் தான் முதல் சீனில் வருவார். அதாவது கதாநாயகியின் இருப்பை இல்லாமல் காட்டுகிறார் டைரக்டர். கதாநாயகியைப் பற்றிப் பேசுவது போல திரைப்படம் தொடங்கும். அந்த நேரத்தில் கதாநாயகி எங்கோ ஒரு சாலையில் கார் ஓட்டிக் கொண்டிருப்பார். அவரைக் காட்டாமலேயே அவரின் குணநலனைக் காட்டுகிறார் டைரக்டர். என்ன ஒரு யுக்தி. இல்லாமை வழியாக இருப்பைக் காட்டும் பின்நவீனத்துவ சிந்தனைக்கு அன்றே நம் முன்னோர்கள் வித்திட்டிருக்கிறார்கள்.

ஆ. கதாநாயகி கார் ஓட்டுபவர். பெண்களால் தன்னிச்சையாகச் செயல்பட முடியும் என்று அவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கிறது இந்த சீன். பெண்களை பெண்களாக, முழுமனிதர்களாக மதிக்க வேண்டும். அவர்கள் ஆண்களைச் சார்ந்தவர்கள் அல்லர் என்பது ஒரு நல்ல கருத்து. அதே நேரத்தில் பெண்களின் சுதந்;திரம் அவர்களின் உள்ளம் சார்ந்தது என்பதையும் அவர்கள் உணர வேண்டும். ஆண்களைப் போல உடையணிவதிலும், பீர் குடிப்பதிலும், சிகரெட் பிடிப்பதிலும் தான் சமத்துவம் இருக்கின்றது என நினைக்கின்றனர் பெண்கள். இதுவல்ல சுதந்திரம். வெளியில் சிகரெட் குடித்து விட்டு வீட்டிற்குள் வந்தவுடன் இந்த ஜீன்ஸ் பெண்கள் இன்னும் அடிமைகளாகத் தானே இருக்கின்றார்கள். அதற்குப் பதிலாக இந்தக் கதாநாயகி போன்று உள்ளச் சுதந்திரம் கொண்டிருப்பதே உண்மையான சமத்துவம்.

இ. புழு - தவளை - பாம்பு - மனிதன். ஒவ்வொன்றும் தன் இருப்பிற்கும், அழிவிற்கும் மற்றதையே சார்ந்திருக்கிறது என்ற இயற்கை விதியை புரிய வைக்க முயல்கிறார் ஜெகதீஸ். ஒன்றின் அழிவு மற்றதன் கையில். ஒன்றின் இருப்பும் மற்றதன் கையில். நாம் ஒருவர் மற்றவரோடும் சார்ந்திருக்கிறோம் என்ற சார்பு விதியை உணர்த்துகிறது இப்படம்.

ஈ. மனிதர்கள் சாமர்த்தியசாலிகள். இந்த சாமர்த்தியத்தை அடுத்தவர்களை அழிக்க பயன்படுத்துவதை விட ஆக்கப் பயன்படுத்த வேண்டும்.

உ. 'சாமியார்'. நம்ம ஊரில் அருட்பணியாளர்களையும், இந்துத் துறவியர்களையும் இதே பெயர் சொல்லி அழைக்கிறோம். அதாவது 'சாமி' யார் என்பதைக் காட்டுபவரே சாமியார். இந்தப் படத்தில் வரும் சிங்காரம் ஒரு நாடகக் கம்பெனி சாமியார். சாமி யார்? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் நிற்கிறார். இன்றும் நானே பதில் தெரியாமல் நின்று கொண்டு மற்றவர்களுக்கு இதுதான் சாமி! அதுதான் சாமி! என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றேனோ என்று என்னையே கன்னத்தில் அறைந்த மாதிரி இருந்தது இந்த சீன்.

ஊ. பணக்காரன் பின்னாலும், பைத்தியக்காரன் பின்னாலும் நம்ம நாட்டில் எப்பவும் கூட்டம் இருக்கும். இது உண்மைதானே!

எ. பணக்காரர்களைப் பற்றி நாம் அதிகமாக விமர்சனம் செய்வோம். அதாவது, அவர்கள் ஏமாற்றுகிறார்கள். குறுக்கு வழியில் சம்பாதிக்கிறார்கள் என. இந்தச் சிந்தனையைச் சாடுகின்றார் ஜெகதீஸ். பணக்காரர்களைப் பின்பற்றி நாமும் பணக்காரன் ஆக வேண்டும் என்பதை விடுத்து அவர்களும் தங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று பின் நோக்கி இழுக்கும் மனநிலை நண்டு மனநிலை. உலக நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டின் குடிமக்கள் அனைவரும் பணக்காரராக வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இன்னும் ஏழ்மை உயர்த்திப் பேசப்பட்டு, பணம் தாழ்வாக மதிப்பிடப்படுவது நம்ம ஊரின் பிற்போக்கு மனநிலையே.

ஏ. நீதி வெல்லும். தர்மம் வெல்லும். நாம் செய்யும் செயல்கள் நமக்கே வந்து சேரும். இந்த இயற்கை நிதியை மதிக்காதவர்களைப் பார்த்துத்தான் இன்றும் 'உலகம் சிரிக்கிறது!'

இப்படி ஒவ்வொன்றையும் சீன், சீன் என்று எழுதுவதால் 'இவர் ஒரு சீன் கோழி'ன்னு சொல்லிடாதீங்க! ஓகே!


1 comment:

  1. விவிலியத்தில் தான் தங்களை அடுச்சுக்க ஆள் இல்லை என்று நினைத்தேன்.ஆனால் அதைப் பொய்யாக்கி சினிமாவையும் இப்படி அக்கு வேறு அணி வேறாப் பிச்சு உதறுகிறீர்களே...பாராட்டுக்கள்இந்த காலத்தில் மட்டுமல்ல, எந்த காலத்திலுமே நாம் செய்யும் நல்லதும் கெட்டதும் நம்மை வந்தே அடையும்.அதற்குத்தான்'ஊழ்வினைப்பலன்' என்றுபெயர்.எது எப்படியோ இன்று தங்களின் திருப்பாடல்களின் விளக்கத்தை miss பண்ணினேன் என்பதே உண்மை..

    ReplyDelete