Monday, June 2, 2014

முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்

திருப்பாடல்களிலிருந்து ஒரு பிரேக் எடுப்போம் இன்று.

இன்று நம் ஊரில் பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டு தொடக்கம். 'முதல் அனுபவம்' என்பது ஒரு முறைதான். அந்த முதல் அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லையென்றால் அது முடியாமலே போய் விடுகிறது.

நான் பள்ளிப்பபருவத்தில் இருந்த போது கல்வி ஆண்டு தொடக்கம் எப்படி இருந்தது என நினைத்துப் பார்த்தேன்.

முதல் நாள் எல்லாமே புதிதாக இருக்கும். புதிய ஆசிரியவர்கள். புதிய வகுப்பறை. புதிய பெஞ்சு. ஜன்னல் வழியே பார்த்தால் புதிய காட்சி.

பழைய மாணவர்கள் அனைவருமே அன்று புதியதாகத் தெரிவார்கள்.

புதிய பாடப்புத்தகம். புத்தகத்தின் முதல் பக்கம். எல்லாமே புதிதாக இருக்கும்.

மற்றொரு பக்கம் ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டே வருகின்ற கல்விக் கட்டணம் எனக்கு கண்ணீரை வரவழைக்கும். ஒன்பதாம் வகுப்பு படிக்க கோழியை விற்றார்கள். பத்தாம் வகுப்பு படிக்க எதை விற்பார்கள் என நினைத்துக் கொண்டே விடுதிக்கு வந்தபோது எங்க அப்பா ஃபீஸ் கட்ட வந்திருந்தார்கள். அவர் அன்று அணிந்திருந்த நீலக்கலர் சட்டை இன்றும் என் நினைவிற்கு வருகிறது.

ஒவ்வொரு முதல் நாளும் ஒரு புதிய அனுபவம்.

பள்ளிக்கூடத்தின் முதல் நாள் நிறைய குழந்தைகள் வகுப்பறையின் ஜன்னல் அருகில் நிற்பார்கள். ஆறாம் வகுப்பு படிக்கும் போது தூரத்தில் தெரிந்தது ஏழாம் வகுப்பு படிக்கும் போது பக்கத்தில் தெரியும். காட்சிகள் மாறும். சீக்கிரம் பள்ளிப்பருவம் முடியப் போகிறது என்றும் வேகமாக வளர்கிறோம் எனவும் தோன்றும். ஆனால் வளர்ந்தபின் ஏன்டா வளர்ந்தோம்! பள்ளியிலேயே இருந்திருக்கக் கூடாதா! என்று தோன்றுகிறது.

புதிய பள்ளியோடு சேர்ந்து புதிய டியூசன் கூட்டணியும் சந்தோசமாக இருக்கும். இதுவரை நம்மோடு பேசாத, நாம் பேச ஏங்கும் ரேணுகா டியூசனுக்கு வரும். புதிய பிரவுன் அட்டை. புதிய அடிஸ்கேல். புதிய ஜியாமெட்ரி பாக்ஸ்.

இந்தப் புதியவைகளின் மணம் ஒரு வித்தியாசமான அனுபவம்.

இன்று என்னதான் லாமி, பார்க்கர் எனப் பிடித்து எழுதினாலும், அன்று பத்திரமாய்ப் பாதுகாத்த கேம்ளின் பேனாவும், டெஸ்க்கில் இரண்டு சொட்டு மையை ஊற்றி அதை நண்பனுக்கு இரவல் கொடுத்தது அடிமனதில் அம்மைத் தளும்பு அழியாமல் உள்ளது.

இன்று புதிய ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியக் கண்மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

இன்று போல் என்றும் புதுமையாக இருக்கட்டும்...



1 comment:

  1. ஒரு அழகான கவிதை படித்த உணர்வைத் தந்தது இன்றையப் பகுதி.இளமைப் பருவத்தின் நினைவுகளையும் நிகழ்வுகளையும் தோண்டியெடுத்து ஒரு அழகான மலர் மாலையாகத் தந்துள்ளீர்கள்...பாராட்டுக்கள்."டெஸ்கில் இரண்டு சொட்டு மையை ஊற்றி அதை நண்பனுக்கு இரவல் கொடுத்தது அடி மனதில் அம்மைத் தழும்பாய் அழியாமல் உள்ளது" .....simply classic.ஆமாம்...ஏன் மல்லிகா டீச்சரை இப்படி அம்போன்னு விட்டுட்டீங்க? புதுக் கல்வியாண்டின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete