Thursday, June 19, 2014

நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்?

ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு: 'தெ விப்பிங் பாய்' (The Whipping Boy). இதன் பொருள் என்ன? இங்கிலாந்தில் அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில், அரசர்களின் மகன்கள், அதாவது இளவரசர் பள்ளிக்குச் செல்லும் போது அந்த இளவரசன் கூடவே ஒரு சிறுவனையும் அனுப்புவார்கள். பள்ளியில் இளவரசன் ஏதாவது தவறு செய்தாலோ, அல்லது வீட்டுப்பாடம் செய்யவில்லையென்றாலும் ஆசிரியர்கள் இளவரசனோடு இருக்கும் சிறுவனை அடிப்பார்கள். இளவரசனை அடிக்க அவர்களுக்கு அனுமதியில்லை. இளவரசனின் வலியையெல்லாம் அந்த சிறுவன் தான் தாங்கிக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் அரசவையின் மேல் உள்ள கோபத்தை, அரசனின் மேல் உள்ள கோபத்தையும் ஆசிரியர்கள் அந்த அப்பாவிச் சிறுவன் மேல் காட்டுவார்களாம். தமிழில் இதை அப்படியே குறிக்க சொல் இல்லை. பலிகடா என்ற சொல் ஏறக்குறைய நெருக்கமான பொருளைத் தந்தாலும், சிறுவன் அனுபவிக்கும் உணர்வுகளை 'பலிகடா' (scape-goat) என்ற வார்த்தை முழுமையாகத் தருவதில்லை. ஆகையால் 'விப்பிங் பாய்' என்றே எடுத்துக்கொள்வோம்.

மற்றவர் செய்த தவறுக்காக, அல்லது தான் செய்யாத ஒரு தவறுக்காக துன்பத்தைத் தன்மேல் ஏற்பவரே 'விப்பிங் பாய்!'.

திபா 69ல் நாம் இப்படிப்பட்ட ஒரு விப்பிங் பாயைத் தான் பார்க்கின்றோம். இந்தப் பாடலை எரேமியாக இறைவாக்கினர் எழுதியிருப்பார் என்பது பலரின் கருத்து. 'தாவீதுக்கு உரியது' என்று தலைப்பு இருந்தாலும் இந்தப் பாடல் சொல்லும் பல நிகழ்வுகளுக்குச் சான்றுகள் எரேமியா இறைவாக்கினர் நூலில் உள்ளன.

மிகப்பெரிய விப்பிங் பாய் 'இயேசு கிறிஸ்து' தான். தான் செய்யாத பாவத்திற்காக தண்டனை ஏற்றார். ஆனால் இயேசு தண்டனை ஏற்றதில் எனக்கு இன்னும் சில கேள்விகள் உள்ளன. உதாரணமாக,

அ. பாவத்தின் சம்பளம் மரணம். இயேசுவின் மரணத்தால் பாவம் அழிந்து விட்டது. அப்புறம் ஏன் இன்னும் இவ்வுலகில் மரணம் இருக்கிறது?

ஆ. இயேசு ஒரே முறை நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து விட்டார் எனில், ஏன் இன்னும் நாம் பாவசங்கீர்த்தனம் வழியாகவும், திருப்பலிகள் வழியாகவும், நவநாட்கள் வழியாகவும், செபங்கள் வழியாகவும் நம் பாவங்களுக்குப் பரிகாரம் தேடுகிறோம்?

இ. இயேசுவின் இறப்பிற்கு முன் வாழ்ந்தவர்களுக்கெல்லாம் இயேசுவின் மீட்புச் செயல் பலன் கொடுக்குமா?

ஈ. இயேசுவைப் பற்றியே அறியாதவர்களின் நிலை என்ன?

உ. இயேசுவுக்கு முன் இருந்த யாவே கடவுள் பயன் அற்றவரா?

ஊ. தன் ஒரு மகனின் இரத்தத்தைக் கேட்கும் ஒரு தந்தை எப்படி அன்பானவனராக இருக்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு கொடூர மரணத்தால் தான் உலகை மீட்டிருக்க வேண்டுமா? அவர்தான் கடவுளாயிற்றே. இன்னும் வேறு நல்ல வழிகளை யோசித்திருக்கலாமே?

எ. ஆதாம் - ஏவாள், பாம்பு - பாவம், தோட்டம் எல்லாம் அக்காடிய, சுமேரிய புராணக் கதைகளை மையமாக வைத்து எழுதப்பட்டவை. அப்படி எந்த கேரக்டரும் உண்மையில் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க இயேசுவை புதிய ஆதாம் எனவும், மரியாவை புதிய ஏவா எனவும் சொல்வதற்கும் அடிப்படை இல்லை. ஜென்மப் பாவத்திற்கும் அடிப்படை இல்லை. இப்படியிருக்க எதை அடித்தளமாக வைத்து நம் இறையியில் நிற்கிறது.

பில்டிங் ஸ்டிராங்கு...ஆனால் பேஸ்மெண்ட் ரொம்ப வீக்கா இருக்கிறதே!

இயேசுவின் இறப்பு ஒரு சாதாரண மரண தண்டனை. பிற்கால இறையியலார்கள் தாம் அதை ஒரு மீட்புச் செயலாகச் சொல்ல ஆரம்பித்து விட்டனர். இதுதான் இன்றைய வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

நிற்க!

தான் செய்யாத ஒரு செயலுக்காக தாவீதோ அல்லது ஒரு பாடகரோ துன்பம் அனுபவிக்கின்றனர். அந்தத் துன்பத்திலிருந்து இறைவன் தன்னை மீட்க வேண்டும் என்று பாடும் பாடலே திபா 69.

இந்தத் திருப்பாடலில் படிப்பதற்கு நிறைய உருவகங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில இவை:

அ. கழுத்தளவு வெள்ளம்.
ஆ. நிலைகொள்ளாத நீர்.
இ. வறண்ட தொண்டை.
ஈ. பூத்துப் போன கண்கள்.
உ. தலைமுடியைவிட மிகுதியான வெறுப்பு.
ஊ. சகோதருக்கே வேற்று மனிதனான நிலை.
எ. தாயின் பிள்ளைகளுக்கு அயலான்.
ஏ. சாக்குத் துணி.
ஐ. சேற்றில் மூழ்கினேன்.
ஒ. ஆழ்கடலில் விழுந்தேன்.
ஓ. பிளந்த இதயம்.
ஒள. உணவில் நஞ்சு.
க. தாகத்திற்குக் காடி.
ங. கண்ணியாகும் விருந்து.
ச. சினம் என்னும் தீ.
ஞ. வாழ்வின் அட்டவணை.
ட. காளையைவிட சிறந்த பலி.
ண. தள்ளாடும் இடைகள்.


இந்த வரிகளுக்குப் பின்னால் ஒரு இனம் புரியாத சோகம், வெறுமை, கையாலாகத நிலை அப்பியிருப்பதைக் காண முடிகிறது.

இந்தப் பாடல் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது (காண். யோவான் 1:11. 2:27. திப 1:20. மத்தேயு 27:29, 34. உரோ 11:9-10. 15:3).

இன்றும் நம் சமுதாயத்தில் நம்மைச் சுற்றி விப்பிங் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் நிறையவே இருக்கிறார்கள்.

செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவிக்கும் சிறைக்கைதிகள்.
நீதி கிடைக்காமல் பணத்தாலும், ஆள்பலத்தாலும் நீதியை இழந்த தவிப்பவர்கள்.
'நீ செய்திருப்பாய்!' என்று முத்திரை குத்தப்படும் நபர்கள்.

சில நேரங்களில் நாமும் மற்றவர்களை விப்பிங் பாய்ஸ் ஆக்கியிருக்கலாம். இது நம் உறவுகளில் சில நேரம் இருக்கிறது. எங்கோ உள்ள கோபத்திற்கு பல நேரங்களில் நம் அன்பிற்குரியவர்கள் பலியாகி விடுகிறார்கள்.

சமீபத்தில் 'கத்தோலிக்க திருஅவை என்னும் விப்பிங் பாய்!' என்ற கட்டுரை வாசித்தேன். இன்று உலகில் காணும் தவறுகளுக்கும், உலகத்தாரின் கோபத்திற்கும் வெகு சுலபமாக மற்றவர்களைக் குறிப்பாக திருச்சபையை, கடவுளை, அருட்பணியாளர்களைக் காரணம் காட்டும் போக்கும் இருக்கிறது.

உலகில் இருக்கும் பீடோஃபிலியா பிரச்சனைக்கும், ஓரினச் சேர்க்கைக்கும், பாலியில் பிறழ்வுகளுக்கும் காரணம் அருட்பணியாளர்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு நம்மிடம் இந்த மனநிலை வளர்ந்து விட்டதும் வருத்தப்பட வேண்டிய ஒன்றுதான்.

அழகாகக் கேட்கிறார் பாடலாசிரியர்:
'நான் திருடியிருந்தால் திருப்பிக் கொடுத்து விடுவேன்...
நீ பிச்சை கேட்டால் நான் உழைத்துத் தந்து விடுவேன்...
ஆனால்...
நீ நான் திருடாததையல்லவா கேட்கிறாய்...!'

'நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்?' (69:4)


1 comment:

  1. தங்களின் அதீதப் படிப்பு அதிக சந்தேகங்களை எழுப்புவது போல் தெரிகிறது.எங்களுக்கும் கூட இப்படி சந்தேகங்கள் எழுந்துள்ளன.ஆனால் அவை எல்லாமே 'விசுவாசம்' எனும் பெயரில் முளையிலேயே நசுக்கப்பட்டுவிட்டன என்பதுதான் உண்மை.ஆனாலும்கூட"இயேசுவின் இறப்பு ஒரு சாதாரண மரண தண்டனை என்பதை ஏற்க மனது முரண்டு பிடிப்பதும் உண்மையே.மற்றபடி 'whipping boy' பற்றிய தகவலும்,திருப்பாடலில் வரும் உருவகங்களும் புதிது.தந்தைக்கு நன்றி.சில சமயங்களில் மனது இப்படியும் கூட எண்ணுகிறது....அறியாமையே நன்று என்று..ஆம் Ignorance is bliss...

    ReplyDelete