Friday, June 27, 2014

வேற்று மொழி பேசிய மக்களை விட்டு...

திபா 93லிருந்து புகழ்ச்சிப் பாடல்கள் தொடங்குகின்றன. இந்தப் புகழ்ச்சிப் பாடல்களின் முதல் பகுதியை நிறைவு செய்வது திபா 114. தாங்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளி வந்த நிகழ்வை நினைவு கூறும் பாஸ்காப் பாடலே இது.

எகிப்தைப் பற்றிச் சொல்லும் போது இங்கே ஒரு சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. அதைப்பற்றி இன்று நாம் சிந்திப்போம்.

'வேற்றுமொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபோது...'

இந்த வரியை திரும்ப ஒரு முறை படியுங்களேன். அதில் ஒரு சோகம் தெரியும்.

'என் மொழி பேசாத ஒரு நாட்டை விட்டு' என்றும் இதை மொழிபெயர்க்கலாம்.

மொழி - கடவுளின் படைப்பா அல்லது மனிதர்களின் படைப்பா என்பது இன்னும் விடை தெரியாத கேள்வி.

செய்கைகள் செய்தும், படங்கள் வரைந்தும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்திகளைப் பரிமாறத் தொடங்கியவுடன் மொழி பிறந்தது. இந்தச் செய்கைகளாலும், படங்களால் வெளி உலகத்தைத்தான் அடையாளப்படுத்த முடியுமே தவிர, மனிதர்களின் உள்ளத்தின் எண்ணங்களை அவைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. பின் ஒலி, பின் ஓசை, பின் முறைப்படுத்தப்பட்ட ஓசை என்று கொஞ்சம் கொஞ்சமாக மொழி வளர்கின்றது.

ஒலியும், மௌனமும் கலந்ததே பேசும் மொழி!

இருமையும், இல்லாமையும் கலந்ததே எழுத்து மொழி!

மொழி ஒரு அடையாளம். மொழி ஒரு வாய்க்கால்.

பேசுவது மட்டும் மொழியல்ல. மௌனமும் மொழிதான்.

நம் இந்திய நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1110 மொழிகள் இருந்தன. இன்று அவைகளில் 880 மட்டுமே மிஞ்சி நிற்கின்றன. அதிலும் இவற்றின் 360 மொழிகளைப் பேசுவோர் வெறும் 100 பேர் மட்டுமே.

அந்நிய மொழி மோகம், அவற்றின் அளப்பரிய தாக்கம், சொந்த மொழியை தாழ்வாக நினைத்தல், புலம் பெயர்தல் - இவைகள் தாம் மொழிகள் அழியக் காரணம் என மொழியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்று மின்னஞ்சல், குறுஞ்செய்தியில் தமிழை லத்தீன் எழுத்துருவில் எழுதத் தொடங்கிவிட்டோம்.

ஆங்கிலம் கலந்து பேசுவதை நாகரீகம் எனவும் கருதத் தொடங்கி விட்டோம்.

இப்படியே சென்றால்...

நாம் சொந்த நாட்டிலேயே வேறு மொழி பேசுவோராக மாறி விடுவோமோ என்று பயமாக இருக்கிறது!

நம் அன்புக்குரியவர்களின் பேச்சும், அவர்களின் மௌனமும் சில நேரங்களில் நமக்கு வேற்று மொழியாகிவிடுகிறது. அதில் மனத்தாங்கலும் எழுகிறது.

இன்று நாம் என்ன பேசுகிறோம் என்று பார்ப்பதைப் போல...எப்படிப் பேசுகிறோம்...என்றும் பார்க்கலாமே!

'வேற்று மொழி பேசிய மக்களை விட்டு...'

1 comment:

  1. இன்றையப் பகுதி தமிழ் மொழியின் மேல் தங்களுக்குள்ள பற்றையும்,அதை மதிக்காதோர் மீது தங்களுக்குள்ள ஆதங்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது.ஆங்கிலம் கலந்து பேசுவதை நாகரீகமாக்க் கருதுபவர் சிலரே எனினும் பலர் வசதிக்காகத்தான் பேசுகின்றனர் என்பது என் கருத்து.ஆங்கிலத்தில் பேசினால் தான் புரியும் என்று நினைக்கும் மக்களிடம் நாம் பேசும் தமிழ் வேற்றுமொழியாகிவிடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதைதான்.ஆனாலும் இன்றைய இளைஞர்கள் குறுந்தகவல் எனும் பெயரில் பயன்படுத்தும் மொழி எதிலும் சேராத ஒரு புது மொழியாய்த் தெரிவதோடு இவர்கள் தங்களை இரண்டும் கெட்டான்களாக அடையாளம் காட்டப்போகிறார்களோ என்ற நியாயமான பயமும் எழுகிறது.ஆனால் ஒன்று..தங்களது சோகம் என்னையும் பற்றிக்கொண்டது உண்மை.கண்டிப்பாக முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சிப்பேன்.தாக்கத்தை ஏற்படுத்திய தங்களுக்கு என் நன்றிகள்...

    ReplyDelete