Tuesday, June 17, 2014

தொழுவங்களின் நடுவில் படுத்துக் கொண்டீர்களோ?

திபா 68 ஒரு பவனிப் பாடல். இந்தப் பவனியின் பின்புலம் என்ன? பிலிஸ்தியர்கள் இஸ்ரயேல் மக்கள் மேல் படையெடுத்து அவர்களின் உடன்படிக்கைப் பேழையைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். உடன்படிக்கைப் பேழையில் இஸ்ரயேல் மக்கள் ஆரோனின் கோலையும், ஒரு செம்பு மன்னாவையும், சீனாய் மலையில் மோசே வழியாக இறைவன் கொடுத்த பத்துக் கட்டளைகளின் கற்பலகைகளையும் சுமந்து கொண்டு சென்றார்கள். இந்த மூன்றும் இறைவனின் உடனிருப்பை அவர்களுக்கு உணர்த்தியது. இந்த மூன்றின் வழியாகத்தான் இறைவனின் விடுதலைச் செயல் அவர்களின் வாழ்வில் நடந்தேறுகிறது. இப்படிப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிசம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டவுடன் அவர்கள் நிலைகுலைந்து போகின்றனர்.

ஆண்டவர் தங்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மறந்து விட்டாரோ, தாங்கள் பாவம் செய்து உடன்படிக்கையை மீறி விட்டோமோ என்று புலம்பித் தவிக்கின்றனர். இந்த நேரத்தில் உடன்படிக்கைப் பேழையை அத்து மீறி எடுத்துச் சென்ற பிலிஸ்தியர் கொள்ளை நோயினால் தாக்கப்படுகின்றனர். கொள்ளை நோயிலிருந்து விடுதலை பெறுவதற்காக பேழையைத் திரும்ப இஸ்ரயேல் மக்களிடமே அனுப்புகின்றனர். இந்நிலையில் காத்து மற்றும் எருசலேம் என்ற நகரங்களுக்கு இடையே பேழை வைக்கப்டுகின்றது. காத்து என்பது பிலிஸ்தியரின் நகரம். எருசலேம் என்பது எபூசியர்களின் நகரம். தாவீது இந்நேரம் எருசலேமின் மீது படையெடுத்து எருசலேமைத் தன் வசப்படுத்துகின்றார். எருசலேமில் கோவில் இன்னும் கட்டப்படவில்லை. சிறிய பலிபீடம் ஒன்றைக் கட்டி அந்த இடத்திற்கு உடன்படிக்கைப் பேழையை தாவீதும் அவரின் மக்களும் பவனியாக எடுத்துச் செல்கின்றனர். இந்த வெற்றிப் பவனியில் தாவீதோ அல்லது அவரின் அரசவைப் பாடகரோ பாடும் பாடலே திருப்பாடல் 68.

இந்தத் திருப்பாடலை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. கடவுளும் மக்களுக்கான அவரின் செயல்களும் (1-6)
ஆ. கடவுள் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு மக்களை அழைத்துச் சென்றது (7-18)
இ. கடவுளும் அவரது வல்லமை மிகுந்தசெயல்களும் (19-31)
ஈ. கடவுள் செய்த அனைத்திற்கும் நன்றி கூறுங்கள் (32-35)

இந்தப் பிரிவுகளைச் சாத்தியமாக்கும் வார்த்தை 'சேலா!' (அதாவது, நிறுத்தம்). ஒரு பிரிவிலிருந்து அடுத்த பிரிவிற்கு பாடகரை நிறுத்தி அழைத்துச் செல்லும் விதமாக இப்பாடல் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பாடலைப் புரியவேண்டுமென்றால் நீதித்தலைவர்கள் நூல் பிரிவு 5ஐ வாசிப்பது சால்பு.

இந்தப் பாடலின் மையமாக இருப்பது வசனம் 19: 'நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்'. ஆனால் எபிரேய மொழியின் பாடம் 'நாளும் நாம் சுமப்பதில் அவர் உதவி செய்கின்றார்' என்று இருக்கின்றது.

நாம் சுமக்கும் சுமைகள் நமக்கு வெளியே இல்லை. நமக்கு உள்ளே தான் இருக்கின்றன. சில நேரங்களில் நம் உள்மனதில் இருக்கும் சோகம் அல்லது 'என்ன செய்வது என்று தெரியாத திக்கற்ற நிலை'. இவைகளும் சுமைகள் தாம். இந்த நேரங்களில் 'நாம் சுமப்பதில் அவர் நமக்கு உடன் இருந்து உதவி செய்கின்றார்' என்ற வார்த்தைகள் ஆறுதலாகவே இருக்கின்றன. இந்த ஒத்த செய்தியையும் ஆறுதலையும் எசாயா 46:1-4 மற்றும் 63:9 வசனங்களும் நமக்குத் தருகின்றன.

'தொழுவங்களின் நடுவில் படுத்துக் கொண்டீர்களோ?'


1 comment:

  1. பொதுவாக எந்த மதமுமே இறைவனுக்கு படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற மூன்று பொறுப்புக்களைக் கொடுக்கிறது.மற்ற இரண்டையும் விட நாம் எப்போதும் நம் உடனிருக்க ஏங்குவது அந்தக் 'காக்கும் கடவுளை'த்தான்.கால் நடைகளுக்கும்,கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும் இரை கொடுக்கும் இறைவன் கண்டிப்பாக நம்மையும் தம் கண்ணின் கருவிழியெனப் பாதுகாக்கிறார்.நம் சுமைகளின் பாரத்தை எளிதாக்குகிறார். நாம் அவரைப் பார்த்து " என்னை சும்ப்பதனால் இறைவா உம் சிறகுகள் முறிவதில்லை" என்று உச்சஸ்தாயியில் பாடலாமே!...

    ReplyDelete