Sunday, June 22, 2014

மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?

திபா 73 திருப்பாடல்கள் தொகுப்பின் மூன்றாம் பகுதியைத் தொடங்கி வைக்கின்றது.

இதன் தலைப்பு ஆசாபின் திருப்பாடல்.

இந்த ஆசாப் யார்? இவர் விவிலியத்தில் நான்கு இடங்களில் வருகின்றார்:

அ. பெரேக்கியா என்பவரின் தந்தை இவர் (1 குறிப்பேடு 6:39)
ஆ. இவர் ஒரு பாடகர் குழு தலைவர் (1 குறிப்பேடு 15:17)
இ. இவர் ஒரு 'குட்டி' இறைவாக்கினர் (2 குறிப்பேடு 29:30) - அதாவது 'காட்சி காண்பவர்'. நம்ம ஊரு 'குறி சொல்கிறவர்' மாதிரி.
ஈ. தாவீதின் சமகாலத்தவர் (நெகேமியா 12:46)

ஆசாபிற்கு ஒரு பிரச்சினை. என்ன பிரச்சினை? கெட்டவர்களிடம் நிறைய சொத்தும், நகையும் இருந்தது. நல்லவர்களிடம் ஒன்றும் இல்லை. கெட்டவராய் இருந்தால் தான் எல்லாம் கிடைக்குமா என்று நினைக்கத் தொடங்குகிறார். தான் மாசற்றவராய் இருப்பதால் யாருக்கு லாபம் எனப் புலம்புகிறார். இந்தப் புலம்பலுடன் ஆண்டவரின் இல்லம் நோக்கிச் செல்கின்றார்.

அங்கே அவருக்கு விடை கிடைக்கின்றது. அதாவது, கெட்டவர்கள் அனைத்தையும் பெற்றது போல இருந்தாலும் அவர்களுக்கு இறைவனின் துணை இருக்காது. ஆனால் நல்லவர்கள் ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு இறைவனின் துணை நிறைவாக இருக்கும்.

இது ஏதோ ரஜினி பட டயலாக் போல இருக்கிறது.

இதை எப்படிப் புரிந்து கொள்வது?

காரல் மார்க்ஸ் இதை வேறுமாதிரி புரிந்து கொள்ள அழைக்கின்றார். அதாவது, செல்வம் படைத்தவர்கள் செல்வம் படைத்திருக்கக் காரணம் சமூகத்தில் உள்ள அநீதியும், ஏற்றத்தாழ்வும் தான். இதை சரி செய்தால் அவர்களின் செல்வம் குறைந்து விடும். ஆகையால் இதை செய்வதற்குப் பதிலாக அவர்கள் ஒரு எளிய வழியைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்த வழிதான் 'கடவுள்'. அதாவது, செல்வம் இல்லாதவர்கள் எல்லாம் 'கடவுளால் அன்பு செய்யப்படுகிறார்கள்' என்று சொல்லிவிட்டால், ஏழைகள் பணத்திற்காக ஏங்க மாட்டார்கள். அதான் கடவுள் நம் பக்கம் இருக்கிறாரே, வேறு என்ன வேண்டும்? என்று நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள். செல்வர்களை எதிர்த்து கேள்வி கேட்கவும் மாட்டர்கள். நல்ல யுத்தி தானே?

எனக்கு அடிக்கடி ஒரு டவுட் வரும்.

நாம எல்லாருமே லைப் இன்சுரன்ஸ் வச்சிருப்போம். வச்சிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். ஒருவரை வாழ்க்கை முழுவதும் ஏழையாக வைத்திருந்து பணக்காரனாக இறக்க வைப்பதே லைப் இன்சூரன்ஸ். அதாவது, நம்ம சாப்பாட்டை, அன்றாட செலவுகளை மிச்சப்படுத்தி எல்.ஐ.சிலயோ அல்லது டாடாவிலேயோ, அல்லது பஜாஜ் அலயான்ஸ்லயோ இன்சூரன்ஸ் கட்றோம். ஆனா இறந்த பின் அதனால் நமக்கு என்ன பயன்? பின் எதற்கு மாங்கு மாங்கு என அதற்கு பணம் கட்ட வேண்டும்?

நம் வாழ்க்கையையும் அப்படித்தான் வாழ்கிறோமோ என எனக்கு அடிக்கடி நினைக்கத் தோன்றும். 'எளிமை, தவம், கட்டுப்பாடு, ஒறுத்தல், கோவில், திருப்பயணம், அதைச் செய்யக் கூடாது, இதைச் செய்யக் கூடாது' என தினமும் வருத்திக் கொள்கிறோம். எதற்காக? இப்படி எல்லாம் செய்தால் நாளைக்கு நமக்கு மோட்சம் கிடைக்கும்.

சரி...நாம் இறந்தபின் மோட்சம் இல்லை என வைத்துக் கொள்வோம்...அப்போது என்ன நினைப்போம்...ஐயயோ...நம்மள இவ்ளோ நாள் ஏமாத்திட்டாங்களே! ஒன்னுமே அனுபவிக்காம வந்துட்டுமே! நாம ரொம்பவும் ஏமாந்துட்டுமே என நினைப்போமா? இப்படிப் புலம்பி என்ன பயன்?

அந்த நேரத்தில் தான் ஆசாப்பின் வார்த்தைகள் நம் உள்ளத்திலும் ஓடும்:

'அப்படியானால் மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?

குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக் கொண்டதும் வீண்தானா?' (73:14).


1 comment:

  1. நற்செயல்கள் புரியும் அனைவருமே நாளைய பலனை எதிர்பார்த்து செய்வதில்லை.பின் எதற்காக இந்த 'மாசற்ற மனம்?' படத்தில் உள்ள குழந்தையைப் பாருங்கள்.இன்றைய நாளின் மகிழ்ச்சியும்,நிம்மதியான உறக்கமும் முக்கியமில்லையா? அதற்குத்தான்.இன்றையப் பொழுதை நாம் பார்த்துக்கொண்டால் நாளையப் பொழுது தன்னைப்பார்த்துக்கொள்ளும் என்பது நிதர்சனமான உண்மை.யோசிக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்...

    ReplyDelete