Saturday, January 22, 2022

அறியாமையிலிருந்து விடுதலை

ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

I. நெகேமியா 8:2-4,5-6,8-10 II. 1 கொரிந்தியர் 12:12-30 III. லூக்கா 1:1-4, 4:14-21

அறியாமையிலிருந்து விடுதலை

2020ஆம் ஆண்டு முதல், ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிற்றை 'இறைவார்த்தை ஞாயிறு' எனக் கொண்டாடுமாறு, நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'அப்பெர்யுய்த் இல்லிஸ்' என்னும் மடல் வழியாக அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டு, நாம் கூட்டொருங்கியக்கத் திருஅவைக்கான மாமன்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்ற வேளையில், 'இறைவார்த்தை ஒளியில் நம் பயணம்' அறியாமையிலிருந்து விடுதலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று சிந்திப்போம்.

ஜென் துறவி கிம்கானிடம் ஓர் இளைஞன் வருகிறான். 'சுவாமி! எனக்கு வாழ்க்கை ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்து இருப்பது போல இருக்கிறது. யாரும் என்னைக் கண்டுகொள்வதில்லை. யாரைப் பார்த்தாலும் எனக்குப் பயமாக இருக்கிறது' என்று புலம்புகிறான். அப்போது கிம்கான் ஓர் உவமை சொல்கிறார்: 'காட்டு வழியே பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை ஒரு புலி துரத்துகிறது. எப்படியாவது புலியிடமிருந்து தப்பி ஓடவிட வேண்டும் என நினைத்த அவன் வேகமாக ஓடுகிறான். ஓடும் வழியில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு. பின்னால் புலி. முன்னால் பள்ளத்தாக்கு. இருந்தாலும் பள்ளத்தாக்கில் குதிக்கிறான். குதித்து கீழே போய்க்கொண்டிருக்கும் வழியில் ஒரு மரத்தின் வேரைப் பற்றிக் கொள்கிறான். அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவாறு கீழே பார்க்கிறான். அங்கே புலி அவனுக்காகக் காத்திருக்கிறது. அண்ணாந்து மேலே பார்க்கிறான். இரண்டு எலிகள் அவன் பற்றியிருந்த வேரைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன. தன் அருகில் ஒரு செம்புற்றுக் கனி (ஸ்ட்ராபெரி) கொடி. அழகான பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பறித்து வாயில் போட்டு 'என்ன சுவையாய் இருக்கின்றது இந்தப்பழம்' என்றான் அவன்.' உடனே ஞானம் பெற்றான் இளைஞன்.

'ஞானம் பெறுதல்' என்பது வெறும் உணர்வு அன்று. மாறாக, ஒருவரை விடுதலைக்கு இட்டுச் செல்லும் செயல். ஏனெனில், அறியாமை என்பது ஞானம் அடைவதற்கான தடையாக இருக்கிறது. அல்லது அறியாமை அகலும்போது ஞானம் பிறக்கிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். நெகே 8:2-4,5-6,8-10) நெகேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய கி.மு. 450ல் நெகேமியா ஆளுநராக இருந்தபோதுதான் சிதைந்து கிடந்த எருசலேம் நகரையும் ஆலயத்தையும் கட்டி எழுப்புகின்றார். எருசலேம் நகரின் மதில்களைக் கட்டி முடித்த அவர், ஏழைகளின் கடன்களை செல்வந்தர்கள் மன்னிக்க வேண்டும் என்று சமூகப் புரட்சியும், ஆலயத்தின் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவும் செய்தார். இவரோடு தோள் கொடுத்து நின்றவர் மறைநூல் அறிஞரும் குருவுமான எஸ்ரா. இருவரும் இணைந்து யூதா நாட்டை குழப்பத்திலிருந்தும், சமயக் கண்டுகொள்ளாத்தன்மையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் காப்பாற்றுகின்றனர்.

எஸ்ரா தொடங்கிய மறுமலர்ச்சி ஒரு சமூக நிகழ்வாகத் தொடங்குகிறது. அனைத்து மக்களையும் தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் ஒன்றுகூட்டுகிறார் எஸ்ரா. அவர்கள் முன் திருச்சட்டத்தை வாசிக்கின்றார். 'ஒரே ஆளென மக்கள் கூடிவந்தார்கள்' எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். அதாவது, இவ்வளவு நாள்கள் தங்களுக்குள் மக்கள் வேறுபட்டுக் கிடந்தாலும், அவர்களின் வெறுமை மற்றும் அடிமைத்தன அனுபவம் எல்லாரையும் ஒன்றுகூட்டி, அவர்களுக்குள் இருந்த வேற்றுமைகளைக் களைகின்றது. 'ஆண்களும், பெண்களும், புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்க சிறுவர்களும்' என அனைவரும் இணைந்து வருகின்றனர். இந்தச் சொல்லாடல் இரண்டு முறை பயன்படுத்தப்படுகிறது. எருசலேம் ஆலயம் ஆண்களை மட்டுமே உள்ளே அனுமதித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நிறுத்தப்பட்டனர். ஆனால், தோரா என்னும் இறைவார்த்தையை கேட்க எல்லாரும் அழைக்கப்படுகின்றனர். மேலும், தோரா முன் எல்லாரும் சமம் என்னும் நிலை உருவாகிறது.

எஸ்ரா திருச்சட்ட நூலை வாசிக்க, மக்கள் அறியாமையிலிருந்து விடுதலை பெறும் நிகழ்வு மூன்று பகுதிகளாக நடக்கிறது: (அ) 'திருநூலைத் திறந்தபோது எல்லாரும் எழுந்து நின்றார்கள்,' (ஆ) 'எஸ்ராவோடு இணைந்து கடவுளை வணங்கினர்,' (இ) 'வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்துகொண்டனர்.' 'எழுந்து நிற்றல்' மக்களின் தயார்நிலையையும், 'முகங்குப்புற பணிந்து வணங்குதல்' அவர்களின் சரணாகதியையும், 'பொருளைப் புரிந்துகொள்ளுதல்' அவர்கள் பெற்ற தெளிவையும் குறிக்கிறது. திருச்சட்ட நூலின் பொருள் புரிந்த மக்கள் அழுது புலம்பியதாகவும் அவர்களை எஸ்ரா ஆறுதல் படுத்துவதாகவும் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

இவர்களின் கண்ணீர் இவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை பெறச் செய்கிறது. ஆகையால்தான், மக்களின் கண்ணீர்ப் பெருக்கைக் கண்ட எஸ்ரா உடனடியாக, 'இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள். எனவே அழுது புலம்ப வேண்டாம். நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள். எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பி வையுங்கள் ... ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என அறிவுறுத்துகிறார்.

எஸ்ராவின் இவ்வார்த்தைகளில், (அ) 'அழ வேண்டாம்' என்ற கட்டளையும், (ஆ) இல்லாதவரோடு பகிருங்கள் என்ற கரிசனையும், (இ) 'ஆண்டவரின் மகிழ்வே உங்களின் வலிமை' என்ற வாக்குறுதியும் இருக்கிறது. 'அழவேண்டாம்' என்ற செய்தியானது இங்கே நான்கு முறை சொல்லப்படுகின்றது. 'ஆண்டவரின் மகிழ்வே' என்னும் சொல்லாடலை, 'ஆண்டவர் தரும் மகிழ்வு' அல்லது 'ஆண்டவர் என்னும் மகிழ்வு' என்று பொருள் கொள்ளலாம். இனி இறைவார்த்தையின் வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே இஸ்ரயேல் மக்களின் வலிமையாக இருக்கப்போகிறது. ஆக, இறைவனைப் பற்றிய அறியாமையில் இருந்த மக்கள் அவரின் இருப்பை திருச்சட்ட நூல் வாசிப்பின் வழியாக உணர்ந்ததால், அவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:12-30), தங்களுக்குள் யார் பெரியவர்? யார் அதிகக் கொடைகள் பெற்றவர்? தங்களுள் யார் மேன்மையானவர்? என்ற பிளவுபட்டு நின்ற கொரிந்து நகரத் திருச்சபைக்கு, உடல் மற்றும் அதன் இருப்பு-இயக்கத்தை உருவமாக முன்வைத்து அனைத்து உறுப்புகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார். முதல் பிரிவில் (12:12-13), தூய ஆவியார் வழியாக ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர் ஆகிறார்கள் என்ற இறையியலை முன்வைக்கின்றார் பவுல். இரண்டாம் பிரிவு (12:14-26) மனித உடல், அதன் உறுப்புக்களின் இருப்பு, இயக்கம், இன்றியமையாமை பற்றி விளக்குகிறது. மூன்றாம் பிரிவில் (12:27-30), 'நீங்கள் கிறிஸ்துவின் உடல். ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்' என்று மறுபடியும் வலியுறுத்தி, திருச்சபையின் பல்வேறு பணிநிலைகளை எடுத்துரைக்கின்றார்.

திருச்சபையின் பணிநிலைகள் எல்லாம் படிநிலைகள் என்ற அறியாமையில் இருந்துகொண்டு ஒருவர் மற்றவரோடு சண்டையிட்டுக்கொண்டிருந்த மக்களை அவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை செய்து, அவர்களின் தனித்தன்மை மற்றும் ஒருங்கியக்கத்தை நினைவூட்டுகின்றார் பவுல். தங்களுக்குள் நிலவிய ஒருமையை அறியாதவாறு அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்க, அவர்கள் தங்களின் வேற்றுமைகளை மட்டும் முன்னிறுத்தி ஒருவர் மற்றவரைத் தாழ்த்தவும், காயப்படுத்தவும், அழிக்கவும் முயல்வது தவறு என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆக, 'நான்' என்ற அறியாமையிலிருந்து விடுதலை செய்து, 'நாம்' என்ற அறிவிற்குத் தன் திருச்சபையை அழைத்துச் செல்கிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:1-4, 4:14-21) இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: (அ) லூக்காவின் நற்செய்தி முன்னுரை (1:1-4), (ஆ) இயேசுவின் பணித் தொடக்கம் (4:14-21).

லூக்கா தன் நற்செய்தி தான் ஆராய்ச்சி செய்ததன் பயனாக எழுதப்பட்டது எனவும், இதன் நோக்கம், தியோபில் அவர்கள் தான் கேட்டதை உறுதி செய்துகொள்வதற்காகவும் என்று சொல்வதன் வழியாக, 'தெயோபில்' அவர்களின் கிறிஸ்துவைப் பற்றிய 'அறியாமையிலிருந்து அவரை விடுதலை செய்வதற்கும்' என்று மொழிகிறார். நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பிரிவை இன்னும் மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) இயேசுவின் கலிலேயப் பணி (14:14-15), (ஆ) இயேசு எசாயா இறைவாக்கினர் வாசகத்தை வாசித்தல் (14:16-20), (இ) இயேசுவின் போதனை (14:21).

மாற்கு 6ல் இயேசு நாசரேத்தில் பணி தொடங்குவதை ஒத்ததாக இருக்கிறது லூக்காவின் இந்தப் படைப்பு. மாற்கு நற்செய்தியாளருக்கும், லூக்கா நற்செய்தியாளருக்கும் இதில் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் எசாயாவின் இறைவாக்குப் பகுதியை இயேசு வாசிக்கும் நிகழ்வுதான். 'இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்தார்' என லூக்கா நிகழ்வைத் தொடங்குகிறார். நாசரேத்து இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில் முக்கியமான ஒரு ஊர் (காண். 1:26, 2:4, 39, 51).  இயேசுவின் காலத்தில் தோரா நூல் எழுத்துவடிவத்தில் முழுமை பெற்று, தொழுகைக் கூடங்களில் வாசிக்கப்பட்டது. இறைவாக்கு நூல்கள் வாசிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லையென்றாலும், எசாயா 61 முக்கியமான பகுதியாக இருந்ததால் அது செபக்கூட வாசகத்தில் இடம் பெற்றது. எசாயா 61ல் தான் 'மெசியா', அதாவது 'அருள்பொழிவு பெற்றவர்' என்ற வார்த்தை வருகிறது. ஒட்டுமொத்த யூத நம்பிக்கையின் அடிப்படையே மெசியாவின் வருகையே. இந்தப் பகுதியை இயேசுவே விரும்பி எடுத்தாரா, அல்லது அது விரித்து அவரிடம் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

லூக்கா 4:18-19, எசாயா 61:1 மற்றும் 58:6ன் கிரேக்க பதிப்பிலிருந்து (எழுபதின்மர் நூல்) எடுக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே எடுத்து பயன்படுத்தாமல், லூக்கா கொஞ்சம் மாற்றம் செய்கின்றார்: 'ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது. ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கவும், ('உள்ளம் உடைந்தோரை குணப்படுத்தவும்' என்னும் வாக்கியத்தை விட்டுவிடுகின்றார்), சிறைப்பட்டோருக்கு விடுதலையை பறைசாற்றவும், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என அறிக்கையிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்யவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.' மேலும், 'கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும்...' என்று தொடருமுன் இயேசு சுருளை சுருட்டிவிடுகிறார். இயேசு வாசித்த இந்த இறைவாக்குப் பகுதியில் மையமாக இருப்பது, 'பார்வையற்றோர் பார்வை பெறுவர்' என்பதுதான். இங்கே வெறும் புறக்கண் பார்வையை மற்றும் இறைவாக்கினர் குறிப்பிடவில்லை. மாறாக, 'ஆண்டவரின் ஆவியையும், ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க வந்த அருள்பொழிவு பெற்றவரான' இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளும் அகப்பார்வையைத்தான் குறிக்கிறது. ஆகையால்தான், சற்று நேரத்தில், 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று' என்று தன்னில் மறைநூல் வாக்கு நிறைவேறுவதாக அறிக்கையிடுகின்றார் இயேசு. ஆக, தெயோபில் அவர்கள் லூக்காவின் பதிவின் வழியாகவும், நாசரேத்து மக்கள் இயேசுவின் போதனை வழியாகவும் அறியாமையிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் எஸ்ராவின் திருச்சட்ட நூல் வாசிப்பு எருசலேம் மக்களுக்கும், இரண்டாம் வாசகத்தில் பவுலின் 'உடல் உருவகம்' கொரிந்து நகர மக்களுக்கும், நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தொழுகைக்கூடப் போதனை நாசரேத்து மக்களுக்கும் 'அறியாமையிலிருந்து விடுதலை' தருவதாக இருக்கின்றது. இம்மூன்றையும் இணைத்து இன்றைய பதிலுரைப் பாடல், 'ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை. அவை கண்களை ஒளிர்விக்கின்றன' (திபா 19) என்கிறது.

இன்று பல நேரங்களில் நாம் பெற வேண்டிய புற விடுதலைகள் என்று பொருளாதாரம், அரசியல், சமூகம், சமயம் போன்ற தளங்களை ஆராய்கிறோம். ஆனால், இவையெல்லாம் தொடங்க வேண்டியது 'அக விடுதலையில்தான்.' இன்று என் மனத்தில் இருக்கும் அறியாமை இருள் அழிந்தால்தான் என்னால் அடுத்தவரைச் சரியாகப் பார்க்க முடியும். இறைவார்த்தை என்னும் உண்மை நமக்கு விடுதலை தருகின்றது. நாம் பெறுகிற இந்த விடுதலை எப்படி வெளிப்பட வேண்டும்? (அ) ஆண்டவரின் மகிழ்வு நம் வலிiமாக வேண்டும். ஏனெனில், நம் மகிழ்வுகள் குறுகியவை. அவை நம் வல்லமையைக் கரைத்துவிடுபவை. ஆனால், ஆண்டவரில் கொள்ளும் மகிழ்வு நமக்கு வலுவூட்டும். (ஆ) வேற்றுமை பாரட்டாமல் ஒற்றுமையைக் கொண்டாடுவது. இப்படிக் கொண்டாடும்போது நம்மால் ஒருவர் மற்றவரின் திறன்களை மதிக்க முடிகிறது. (இ) தியோபில் போல ஏக்கமும், நாசரேத்து மக்கள் போல 'இயேசுவின்மேல் கண்களைப் பதிய வைத்தலும்' கொண்டிருப்பது. மகிழ்ச்சி, ஒற்றுமை, நம்பிக்கை - இவை மூன்றும் அறியாமையிலிருந்து விடுதலை பெறுபவர் சுவைக்கும் கனிகள்.

1 comment:

  1. ஆண்டின் பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறுக்கான மறையுரை!” இறைவார்த்தை ஒளியில் நம் பயணம்” அறியாமையிலிருந்து நம்மை எப்படி விடுதலைக்கு இட்டுச் செல்கிறது என்பதை முன் வைப்பதாக உள்ளது.
    நெகேமியா மற்றும் எஸ்ரா இருவரும் எருசலேமின் மதில்களைக் கட்டியெழுப்பி, ஏழைகளுக்கு மறுவாழ்வு கொடுக்க முன்வருகின்றனர். இதுவரை ஆலயத்திற்குள் ஆண்கள் மட்டுமே நுழையலாம் என்ற நிலையை உடைத்துப் பெண்களையும்,சிறுவர்களையைம் சேர்த்தே அனுமதிக்கின்றனர்.திருநூல் வாசிக்கப்படுகையில் நாம் பின்பற்றவேண்டிய முறைமைகள் குறித்த எஸ்ராவின் பேச்சு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அடிமைத்தளைகளிலிருந்து அறுபட்டு விடுதலைக் காற்றறை சுவாசிக்கச் செய்கிறது.இறைவார்த்தையே ஆண்டவரில் மகிழ்வு என்றும்…ஆண்டவரில் மகிழ்வே இஸ்ரவேலின் வலிமை மற்றும் அறியாமையிலிருந்து விடுதலை என்றும் கூறும் முதல் வாசகம்….
    கொரிந்து நகரத்திருஅவைக்குப் பவுலடியாரின் எழுத்துக்கள்…. ‘உடலின் உறுப்புக்கள் அனைத்தும் இயங்கினால் தான் ஒரு உயிராக இயங்க முடியும்’ எனும் உண்மையை முன்வைக்கிறார்.எல்லோரும் ஒன்றிணைந்த உடலில், அதன் அங்கத்தினர் ஒவ்வொருவரும் தனித்தனி உறுப்புக்கள் என்று கூறும் இரண்டாம் வாசகம்…..
    நசரேத்திற்கு வந்த இயேசுவிடம் ஏசாயாவின் சுருள் கொடுக்கப்பட,அதிலிருந்து “ஆண்டவரின் ஆவி என் மேல் உள்ளது………அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.” என வாசிக்கிறார்.தன்னில் மறைநூல் வாக்கு நிறைவேறுவதாகவும்,தன் போதனை மக்களுக்கு அறியாமையிலிருந்து விடுதலை தருவதாகவும் கூறும் நற்செய்தி வாசகம்….
    இன்றைய வாசகங்களைக் கூட்டிக்கழித்துப் பார்க்கையில் அவையனைத்தும் முன் வைப்பது விடுதலையே! ….”அகவிடுதலை”. இது எப்படி சாத்தியமாகும்? எனும் கேள்விக்குப் பதில் தருகின்றன தந்தையின் வரிகள்.ஆண்டவரில் கொள்ளும் மகிழ்வு மூலம் நம்மில் வலுவூட்டிக்கொள்வதும்….ஒருவர் மற்றவரின் திறன்களை மதிப்பதன் மூலம் வேற்றுமைகளைக் களையவும்….இயேசுவின் மீது கண்களைப் பதியவைப்பதுமே! மகிழ்ச்சி,நம்பிக்கை,ஒற்றுமை இவை மூன்றுமே, அறியாமையிலிருந்து விடுதலைபெறும் நாம் சுவைக்கும் கனிகள் எனக்கூறும் தந்தைக்கு நன்றிகளும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete