Sunday, August 15, 2021

நிறைவுள்ளவராதல்

இன்றைய (16 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 19:16-22)

நிறைவுள்ளவராதல்

விண்ணரசைப் பொருத்தமட்டில், நிறைவுள்ளவராதல் என்பது குறைவுள்ளவராதலில் அடங்கியுள்ளது என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

செல்வரான இளைஞர் செல்வத்தில் நிறைவாக இருக்கிறார். ஆனால், அதுவே அவருடைய குறையாகிறது. தன்னிடம் உள்ளதை குறைத்துக்கொண்டு நிறைவுள்ளவராக அவருக்கு மனம் இல்லை. பாதி வழி வந்தவர் மீதி வழி செல்ல முடியாமல் தவிக்கிறார்.

செல்வரான இளைஞரைப் பற்றிய வாசகம் வரும்போதெல்லாம், இவரைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருப்பதுண்டு. 'செல்வத்தை வைத்துக்கொண்டு நன்றாக இருக்க வேண்டியதுதானே!' ஏன் இப்படிக் கடவுளைத் தேடி நேரத்தை வீணடிக்க வேண்டும்?

'ஞானம் பொன்னைவிட மேலானது' என்றும், 'உம் திருச்சட்டம் பொன்னினும் பசும்பொன்னினும் மேலானது' என்றும் விவிலியம் சொல்லும் இடங்களில் எல்லாம் நாம் கவனமாக இருக்க வேண்டும். செல்வம் இல்லாதவர்கள் இதை எழுதியிருக்கலாம். அல்லது செல்வத்தைப் பெற இயலாதவர்கள் இதை எழுதியிருக்கலாம். இன்று பிரிவினை சகோதரர்கள், 'வளமை நற்செய்தி' பற்றி அதிகம் பேசுகின்றனர். இந்த நாள்களில் 'வளமை நற்செய்தி' நமக்குத் தேவைதான். ஏழ்மை போதும்!

ஏழ்மையும் பிரச்சினை. செல்வமும் பிரச்சினை.

ஏழ்மையும் செல்வமும் நம்மைக் கடவுளை விட்டுத் தூரமாக்கி விடுகின்றன. ஆகையால்தான், ஆகூர், 'எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம். எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். எனக்கு எல்லாம் இருந்தால், 'உம்மை எனக்குத் தெரியாது' என்று மறுதலித்து, 'ஆண்டவரைக் கண்டது யார்?' என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்' (காண். நீமொ 30:8-9).

என்னைப் பொருத்தவரையில், இந்தச் செல்வந்த இளைஞர் ஆச்சர்யமாக இருக்கக் காரணம், அவர் தன்னை அறிந்தவராக இருக்கிறார். தான் இதுவரை எதைச் செய்து வந்தேன் என்றும், தன்னால் என்ன செய்ய முடியும் என்று அவருக்குத் தெரிகிறது. தன்னால் இயலாது என்பதை இயலாது என்று ஏற்றுக்கொள்கின்றார்.

இதை ஒன்றையே நான் இவரிடம் இன்று கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

இன்றைய முதல் வாசகத்தில் இதுதான் இஸ்ரயேல் மக்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. இன்று தொடங்கி, வருகின்ற நாள்களில் நாம் நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசிக்கவிருக்கின்றோம். நீதித்தலைவர்கள் நூலில் ஒரு சக்கரம் சுற்றிக்கொண்டே வரும்: 'நிலம் அமைதியில் இருக்கும் - மக்கள் பாவம் செய்வார்கள் - கடவுள் எதிரியிடம் அவர்களை ஒப்புவிப்பார் – அவர்கள் மீண்டும் கடவுளை நோக்கி குரல் எழுப்புவார்கள் - கடவுள் நீதித்தலைவரை அனுப்பி எதிரிகளை அழிப்பார் – நிலம் மீண்டும் அமைதி பெறும்!'

'பருத்தி மூடை அந்த குடோனிலேயே இருந்திருக்கலாம்!' என்று சொல்லத் தோன்றகிறது. கடவுளுக்கு மக்கள் வேலை கொடுக்க, மக்களுக்கு கடவுள் தொல்லை கொடுக்க என்று நீதித்தலைவர்கள் நூல் நகர்கின்றது.

மக்கள் இருமனத்தவராக இருந்தனர். கடவுளும் இருமனத்தவராகவே இருக்கின்றார்.

மக்கள் கடவுளுக்குப் பணி செய்கின்றனர், பாகாலுக்கும் பணி செய்கின்றனர்.

கடவுள் மக்களுக்கு அமைதி அருள்கின்றார், எதிரிகளைக் கொண்டு அமைதியைக் குலைக்கவும் செய்கின்றார்.

மக்களோடு சேர்ந்து கடவுளும் வளர்கின்றார் பழைய ஏற்பாட்டில். மக்களின் வளர்ச்சிதானே கடவுளின் வளர்ச்சி.

ஆக, செல்வம் களைய வேண்டாம். ஏழ்மை விரும்ப வேண்டாம்.

'நான் இதுதான்! என்னால் இது இயலும்! என்னால் இது இயலாது!' என்று சொல்லும் துணிச்சலும், அந்தத் துணிவைக் காத்துக்கொள்ள பிளவுபடா மனமும் இருந்தால் நலம்.

2 comments:

  1. “ஞானம் பொன்னை விட மேலானது” என்று கேட்டுப் பழக்கப்பட்ட நமக்கு “ஏழ்மையும்,செல்வமும் நம்மைக் கடவுளை விட்டுத் தூரமாக்கி விடுகின்றன” என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.இயேசுவை நோக்கி வந்த செல்வந்தர் இயேசுவிடம் எவ்வளவோ பேசியிருக்க, “அவர் தன்னை அறிந்திருந்தார் என்பதையே தந்தை அவரிடம் கற்றுக்கொள்ள விழைகிறார்” என்பது கற்றுக்கொள்ள மனமிருந்தால் ஒரு விஷயத்தை எத்தனை கோணங்களிலும் நம்மால் பார்க்க முடியும்
    என்பதைக்காட்டுகிறது.

    “ பருத்தி மூடை அந்த குடோனிலேயே இருந்திருக்கலாம்!” “கேக் தட்டிலும் இருக்க வேண்டும்; வாயிலும் இருக்கவேண்டும்” என்று சொல்வது போல் இருக்கிறது. மக்களோடு சேர்ந்து கடவுளும் வளர்கின்றார்…அருமை!
    பிளவு படா மனத்தோடு “நான் இதுதான்! என்னால் இது இயலும்! என்னால் இது இயலாது!” என்று சொல்லும் துணிச்சல் இருந்தால் நாம் செல்வமும் களைய வேண்டாம்; ஏழ்மையையும் விரும்ப வேண்டாம்….. என்ற வாழ்க்கைப் பாடம் சொல்லும் தந்தைக்கு நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  2. தன் சொத்தை வச்சு தன் பாட்டுக்கு சந்தோசமா இருந்தான் ஒருத்தன் ... அவன் நரகத்துக்கு போனான் (செல்வந்தர் - லாசர் ) .. சொத்து இருந்தாலும் கடவுளை தேடி வந்தான் ஒருத்தன் .. அவனும் ஏமாற்றத்தோடே போனான் ... செல்வந்தர்ஸ் இன் டெலிகேட் பொசிஷன் ..

    ReplyDelete