Monday, August 7, 2017

புறணி

மனிதர்கள் சமூகமாக மாற உதவிய மிக முக்கிய காரணி என்று சமூகவியல் மற்றும் மானுடவியல் அறிஞர்கள் குறிப்பிடுவது புறணி (gossip).

புறணி பேசுவதில் இரண்டு விஷயங்கள் அடிப்படையாக இருக்கின்றன:

அ. புறணி பேசும் இருவர் அல்லது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு தங்களை அறியாமலேயே ஒரு குழு உணர்வு பிறக்கிறது. இந்தக் குழுவுணர்வே, 'நாம்' - 'அவர்கள்' என்ற பேதத்தை உருவாக்குகிறது. 'நம்மைச்' சார்ந்தவர்களுக்குள் நாம் உட்கார்ந்து கொண்டு, நம்மைச் சாராத 'அவர்களைப்' பற்றி பேசுவதே புறணி. இவ்வாறாக, புறணி நமக்கு ஒரு சார்பு உணர்வைத் தருகிறது.

ஆ. புறணி பேசும் குழுமம் தனக்கென்று 'உண்மை' என்ற ஒரு கற்பனை வட்டத்தை உருவாக்குகிறது. தன் குழு நினைப்பதுதான் உண்மை என இது ஒருவர் மற்றவருக்குச் சொல்கிறது. இந்த வட்டத்திற்குள் வராதவர்கள் பேசுவது உண்மை அல்ல எனவும் இந்தக் குழு முடிவு செய்துகொள்கிறது.


நிற்க.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எண்ணிக்கை 12:1-13) இருவர் புறணி பேசுகின்றனர். மிரியமும், ஆரோனும் இணைந்து கொண்டு தங்கள் சகோதரன் மோசே பற்றிப் பேசுகின்றனர். இவர்கள் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு மோசேயின் புறவினத்து அல்லது எத்தியோப்பிய மனைவி. சகோதர சகோதரிகளுக்குள் சண்டை சச்சரவு வர பல இடங்களில் மனைவிதான் காரணம் என்பது விவிலிய பதிவும்கூட.

மேலும், இவர்களின் புறணி மோசேயுடன் நின்றிருந்தால் பரவாயில்லை. கடவுளையும் வம்புக்கு இழுக்கிறார்கள்.

'புறவினத்துப் பெண்ணைத் திருமணம் முடித்த இவனுக்கு மட்டுமா அல்லது இவனுக்கு எப்படி கடவுள் தன்னை வெளிப்படுத்த முடியும்? யோக்கியர்களாகிய எங்களுக்குத்தான் அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்' எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டதோடல்லாமல் தாங்கள் சார்ந்தவர்களிடமும் சொல்கின்றனர்.

இதைக் கேட்டுக் கோபப்படுகின்ற கடவுள் தனக்கும் மோசேக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை அழகாகச் சொல்கின்றார்:

'ஆனால் என் அடியான் மோசேயோடு அப்படியல்ல. என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன். நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல. நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான்.'

இவ்வாறாக, எல்லா நிலைகளிலும் மிரியம் மற்றும் ஆரோனை விட மோசே உயர்ந்திருப்பதாக கடவுள் சொல்கின்றார்.

தாங்கள் பேசிய புறணிக்குப் பரிசாக மிரியம் தொழுநோயால் பீடிக்கப்படுகின்றார்.

ஆனால் ஆரோனுக்கு ஏன் தண்டனை வழங்கப்படவில்லை? என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஆரோன் ஒரு தலைமைக்குரு. அவருக்கு தொழுநோய் பீடித்தால் அவர் தீட்டுப்படுவார் என்பதற்தாக ஆசிரியர் இப்படி பதிவு செய்தாரா அல்லது பெண்ணுக்கு மட்டுமே தண்டனை என்ற ஆணாதிக்க சிந்தனையா என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

மிரியமின் தொழுநோய் நீங்கள் கடவுளிடம் மோசே பரிந்துரை செய்கின்றார்.

இந்த நிகழ்வு மூன்று பாடங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது:

அ. கடவுள் ஒன்றை அல்லது ஒருவரைத் தேர்ந்துகொண்டார் என்றால் அவரை அவருக்குப் பிடிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவற்றை நாம் ஏற்றுக்கொள்வதை விட்டு கடவுளின் தேர்வை நாம் சந்தேகிக்கவோ, கேலி செய்யவோ கூடாது.

ஆ. கடவுளின் பார்வை வேறு. மனிதர்களின் பார்வை வேறு.

இ. நாம் ஒருவர் மற்றவரைப் பற்றி புறணி பேசும்போதெல்லாம் மிரியமின் தொழுநோயை நினைத்துக்கொண்டால் புறணி குறையும். புறணி பேசும் போது நம்மை அறியாமல் நாமே நம்மை அழுக்காக்கிக் கொள்கின்றோம். புறணியில் பரிமாறப்படும் வார்;தைகள் அணுகுண்டுகளுக்குச் சமம். 'புறணி ஒரு தீவிரவாதம்' என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.


2 comments:

  1. 'விடுதலைப் பயண நூலில்' மட்டுமே கோலோச்சி வந்த மோசேயை அண்மைகாலங்களில இந்த 'எண்ணிக்கை'நூல் வழியாகவும் பார்க்கமுடிகிறது.'புறம் கூறுவது' என்பது புரையோடிப்போன நம் சமூகத்தில் அது ஆண்டவரின் பார்வையில் எத்தனை அருவருப்பான செயல் என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது. அதே சமயம் இன்றையப்பதிவில் இறைவன் கொஞ்சம் பாரபட்சமாக செயல்படுகிறாரோ எனும் எண்ணமும் கூடவே எழுகிறது.இப்பதிவின் கதாபாத்திரங்கள் மூவரில் மோசே மற்ற இருவரை விட ஆண்டவருக்கு மிக அருகாமையில் இருக்கிறார்.தந்தையின் வரிகளில் இதற்கான பதிலையும் பார்க்க முடிகிறது." கடவுள் ஒன்றை அல்லது ஒருவரைத்தேர்ந்து கொண்டார் என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.அவற்றை நாம் ஏற்றுக்கொள்வதை விட்டுக் கடவுளின் தேர்வை சந்தேகிக்கவோ,கேலி செய்யவோ கூடாது".ஆண்டவரின் நம்பிக்குரியவரான மோசே மிரியமின் தொழுநோய் நீங்க இறைவனை மன்றாடி அதைப்பெறவும் செய்கிறார்.ஆபத்து காலத்தில் ' அவரை'த் தொட்டவர்களும் சரி,'அவர்' தொட்டவர்களும் சரி குணமடைவதை நாம் பார்க்க முடிகிறது.இறைவனின் கருணையை மட்டுமின்றி அவருக்கு சிறிதும் பிடிக்காத 'புறம் கூறுதல்,' எனும், விஷயத்திலிருந்து நாம் எவ்வாறு நம்மை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறும் அழகான பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்! அண்மையில் நான் சென்று வந்த 'புனித நாட்டுப்பயணம்' மோசேயை எனக்கு நெருக்கமானவராக்கியிருப்பதை என்னால் உணரமுடிகிறது.அருமையானதொரு,மனத்தைத்தொட்ட பதிவிற்காகத் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete