Sunday, August 20, 2017

பத்தாம் பத்திநாதர்

நாளை தூய பத்தாம் பத்திநாதரின் திருநாள் என்று எழுதும்போதே என் மனம் 1994-1998 ஆம் ஆண்டுகள் நோக்கி பயணம் செய்கிறது.

மதுரை ஞானஒளிவுபுரம் தூய பத்தாம் பத்திநாதர் ஆயத்தக் குருமடத்தில் தங்கியிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பை தூய பிரிட்டோ மேனிலைப்பள்ளியில் தொடர்ந்தேன்.

அந்த நான்கு ஆண்டுகளும் ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு தூங்கா இரவாகத்தான் இருக்கும். இந்தத் திருநாளுக்கு முன் குருமடமே 4 டீம்களாக பிரிக்கப்பட்டு (சில ஆண்டுகளில் 2) விளையாட்டு மற்றும் திறன்வளர் போட்டிகள் நடைபெறும். 4ஆண்டு மாணவர்களோடும் பழக இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

அந்த நான்கு ஆண்டுகளில் என்மேல் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய நபர் எங்கள் குருமட அதிபர் அருள்திரு. மரிய அருள் செல்வம் அவர்கள்தாம். அவர்களும், அருள்தந்தை ஹெர்மஸ் (பேதுரு கல்லூரி, விரகனூர்) கற்றுக்கொடுத்த வாழ்க்கைப்பாடங்கள்தாம் இதுவரை என்வாழ்வில் துணைநிற்பவை. அப்பெல்லாம் வாழ்க்கையும் தெரியாது. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகளுக்கு அன்று அவர்களுடைய உடனிருப்பு தந்த பாடம் உதவுகிறது.

அந்தக் குருமடம் தாலாட்டி வளர்த்த அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 19:16-22), நிறைவுள்ளவாய் இருக்க விரும்பினால் குறைவுள்ளவனாய் இரு என ஓர் இளைஞனை அனுப்பி வைக்கிறார் இயேசு.

குறைவில்தான் நிறைவு இருக்கிறது என்பதை வாழ்ந்து காட்டியவர்கள் எம் குருமட அதிபர்கள்.

நன்றியோடு நினைக்கின்றேன்.

3 comments:

  1. தன் கால்களாகிய வேர்களின் வழியாகத் தன் வாழ்வின் முற்பகுதியில் தான் பெற்ற நீரை,இளநீராகவும்,தேங்காயாகவும் தன் வாழ்வின் பிற்பகுதியில் திருப்பித்தருவது தென்னை மரத்தின் இயல்பு. இது ' நன்றி மறவாமைக்கு' எடுத்துக்காட்டு. ஒரு மனிதனுக்கு மிக,மிகத் தேவையானது தான் பிறரிடமிருந்து பெற்ற நன்மைகளைப்பற்றி அசைபோடுவதும்,அதை இயன்றவரை மற்றவருக்குத் திருப்பித்தருவதும்.இந்த குணத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக நான், பல சமயங்களில் 'தந்தையை'ப் பார்த்திருக்கிறேன்.தனக்குப் பயிற்றுவித்த மற்றும் தன் வாழ்வின் வழிகாட்டிகளாய் நின்ற குரு மடங்கள்,அவற்றின் அதிபர்கள், தனக்குப்பயிற்றுவித்த ஆசிரியப்பெருமக்கள்,அவர்களிமிருந்து தான் பெற்ற நன்மைகள்,கற்ற பாடங்கள் .....இவைகளைப் பெருமையுடனும்,நன்றியுடனும் நினைத்துப்பார்க்கும் இவரின் குணம் ஒன்றே போதும் இவர் இறைவனின் அத்தனை 'ஆசீர்வாதங்களுக்கும்' தகுதியானவர் என்று." சிறிய விஷயங்களை ஒருவன் பொறுப்பெடுத்துக்கொண்டால்,பெரிய விஷயங்கள் தங்களைத்தாங்களே பார்த்துக்கொள்ளும்" என்ற ஆன்றோரின் வார்த்தைகளுக்கு அர்த்தம் சேர்க்கிறது " நிறைவுள்ளவனாய் இருக்க விரும்பினால் குறைவுள்ளவனாய் இரு" எனும் இயேசுவின் வார்த்தைகள். "பத்தாம் பத்திநாதரின்" நினைவு நாளான இன்று தந்தைக்கும், தந்தையுடன் சேர்ந்து ஞானொளிவுபுரம் பத்தாம் பத்திநாதர் ஆயத்த குருமடம் தாலாட்டி வளர்த்த அனைத்து குருக்களுக்கும் என் மனம் கனிந்த திருநாள் வாழ்த்துக்களும்! செபங்களும்!!!

    ReplyDelete
  2. நிறைவு பெற குறைவு... அருமை

    ReplyDelete