Tuesday, August 15, 2017

விடுதலைப் பெருநாள்

இன்று மாலை மதுரை நகர்வழி நடந்து சென்றேன்.

சுதந்திரப் பெருநாள் கொண்டாட்டத்தின் எச்சங்கள் நிறைய தெரிந்தன தெருக்களில்.

மூவர்ணக் கொடிகள், மூவர்ணக் கோலங்கள், கடைகளில் மூவர்ண பலூன் அலங்காரங்கள், மூவர்ண முகப் பூச்சுக்கள், காலையில் குத்தி மாலையில் தலை தொங்கி நின்ற சட்டைக் கொடிகள், சுதந்திர தின வாழ்த்து போஸ்டர்கள் நிறையவே இருந்தன.

71 ஆண்டுகளுக்கு முன் நாம் சுதந்திரம் பெற்ற அந்த நாளில் இவற்றில் ஒன்றுகூட இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், தெருக்களில் மக்கள் கூடி நின்று நிறைய பேசியிருப்பார்கள். 'இனி வெள்ளக்காரங்க நம்ம நாட்டுல இருக்க மாட்டாங்க!' என சொல்லியிருப்பார்கள். டெல்லியில் என்ன நடக்கிறது என்பதை ரேடியோ பெட்டியில் கேட்டிருப்பார்கள். விடுதலைக்காக போரிட்டவர்கள் தங்கள் போராட்டக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால், சுதந்திரம் என்பது நாமே தேர்ந்துகொண்ட ஒரு சுமையாக மாறிவிட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கோட்டையில் கொடியேற்றுபவர்கள் எல்லாம் தங்களை மீடியாக்கள் சரியாக படம் பிடிக்கின்றனவா என்று பார்க்கின்றனரே ஒழிய, யாருக்கும் யாரைப் பற்றியும் அக்கறையில்லை.

சுதந்திரம் இன்று கொண்டாட்டமாக மட்டுமே இருக்கிறதே தவிர இன்னும் நம் வாழ்வாகவில்லை.

சமயம், இனம், பொருளாதாரம் உரிமைகள் அன்றாடம் பறிபோய்க்கொண்டே இருக்கின்றன. நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுக்க வேண்டும், எவ்வளவு பணம் கையில் வைத்திருக்க வேண்டும், எதை வழிபட வேண்டும் என எல்லாமே நம் கார்பரேட் அரசியலால் வரையறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சாமானியன் இந்த சுதந்திரத்தின் வாடை அறியாமல் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான்.

சாமானியனாகவே இருந்துவிடுதல் நலம்.

2 comments:

  1. "சுதந்திரம் இன்று கொண்டாட்டமாக மட்டுமே இருக்கிறதே தவிர இன்னும் நம் வாழ்வாகவில்லை".... தந்தையின் வார்த்தைகளில் உள்ள உண்மை சுடுகிறது."என்று தணியும் இந்த சுதந்திர தாகம்; என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?" பாட்டாகவே நின்று விட்ட வரிகள்.குழந்தைகள் தொடங்கி இளைஞர் ,பெரியோர் என வேறுபாடின்றி தம் கையில் உள்ள அலைபேசிக்கும்,பெண்கள் வீட்டுத்தொலைக்காட்சிப்பெட்டிக்கும்,ஆண்கள் டாஸ்மாக் சரக்குகளுக்கும் என்றையும் விட இன்று கூட நேரம் ஒதுக்கியிருப்பார்களே தவிர ,சுதந்திர தினக்கொண்டாட்டம் என்பது தந்தை குறிப்பிட்ட எச்சங்களாகவே தெரிகின்றன. இதில் யாருடைய வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு,தன் வேலையுண்டு என்று இருக்கும் ஒரு சாமான்யனுக்கு மட்டுமே வாழ்க்கை இனிக்கிறது எனில் நாமும் ஒரு சாமான்யனாகவே இருந்து விட்டு போகலாமே! யோசிக்க வைக்கும் கருத்துக்கள்! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. விடுதலையின் சுவாசம் எந்நாளும் இனிமை...
    தன்னையும் அறியாமலே சாமானியன் சுதந்திர காற்றை சுவாசிக்கிறான்...
    காற்றில் சில நச்சும் இருப்பது வேதனையே...
    முழு விடுதலை நிச்சயம் உண்டு...
    கிறிஸ்துவே அதன் நிச்சய வழி...

    ReplyDelete