Saturday, August 5, 2017

வியான்னி

இன்று அருள்பணியாளர்களின் பாதுகாவலர் தூய வியான்னியின் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தோம்.

கடந்த வாரம் கனடா நாட்டில் நடந்த ஒரு திருமணத்தை முன்நின்று நடத்த உரோமையின் திருச்சடங்குகள் பேராயம் 55 வயது நிறைந்த அருள்சகோதரி ஒருவருக்கு அனுமதி கொடுத்திருந்தது.

அருள்பணியாளர் இல்லாத சூழலில் ஒரு பொதுநிலையினரும் திருமணத்திற்கு தலைமை ஏற்கலாம் என திருச்சபைச்சட்டம் அனுமதி அளிக்கிறது. இந்த அடிப்படையில்தான் அருள்சகோதரிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், இவர் திருமணத்தை ஆசீர்வதித்தாரா அல்லது ரிஜிஸ்டரில் மட்டும் கையெழுத்திட்டாரா என்ற தரவுகள் இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிகழ்வு நடந்த இரண்டாவது நாள், 'அருள்பணியாளர்கள் இனி தேவையில்லை' என்ற கட்டுரை இணையதளத்தில் வெளியானது.

'அருள்பணி நிலை' இன்று தேவையா? இல்லையா? என்ற கேள்வி கேட்கும் அளவிற்கு நாம் வளர்ந்துவிட்டோம்.

'நாம் செய்யாத எதை அருள்பணியாளர்கள் செய்துவிடுகிறார்கள்?' என்ற கேள்வியும் எழுகிறது.

நிற்க.

'அருள்பணியாளர்களும் வலுவற்றவர்களே, அவர்களும் மனிதர்களே' என்ற சிந்தனை ஓட்டத்தில் இன்று நிறைய வாட்ஸ்ஆப் செய்திகள் வலம் வந்தன. இப்படி சொல்வது ஏதோ ஒருவகையில் நம் வலுவின்மையை மேற்கொள்வதற்குப் பதிலாக, அந்த வலுவின்மையோடு சமரசம் செய்துகொள்கிறோமோ என்ற கேள்வி எழுந்தது.

நிற்க.

அருள்பணியாளர்கள் இந்த நாள்களில் நேர்மையற்றவர்களாகவும், பணம் மற்றும் பதவி விரும்பிகளாகவும், தன்னலம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று சாப்பாட்டு அறையில் வந்திருந்த இரண்டு பேர் பேசிக்கொண்டார்கள். பேசி முடித்துவிட்டு ஒருவர் சொன்னார், 'இவர்கள் விரும்பித்தானே வந்தார்கள்! அப்புறம் என்ன அதை ஏற்றுக்கொள்ள!'
'இதோ வருகிறேன்' என்று ஓர் அருள்பணியாளர் சொல்லி திருநிலைப்படுத்தும் சடங்கிற்குள் நுழையும்போது யாரும் அவரை நிர்பந்திப்பதில்லை.

அவரே விரும்பி வருகிறார்.

அப்படி விரும்பி வரும் நான், 'இல்ல இல்ல நான் அப்படி நினைத்தேன், இப்படி நினைத்தேன்' எனச் சொல்வது ஏன்?

நானே விரும்பிதான் இதை தெரிந்துகொண்டேன் என்றால் என் வாழ்வில் சமரசங்கள் எதற்கு?

இறுதியாக,

'அருள்பணியாளராக நீ என்ன பெற்றாய்?' என என்னிடம் யாராவாது கேட்டால்,

'அருள்பணியாளராக இல்லாவிட்டால் நான் நிறையவற்றை இழந்திருப்பேன்' என்று விடை சொல்வேன்.

விரும்பி வந்தார் வியான்னி.

இறுதி வரை தன் கஷ்டங்களை விரும்பி ஏற்றார்.

விரும்பிவிட்டால் எதுவும் சுமையல்ல!

3 comments:

  1. முதலில் நேற்றைய ஏமாற்றத்திற்கு ஈடு செய்த தந்தைக்கு என் நன்றிகள்! பல ஏமாற்றங்கள்,எதிர்ப்புக்கள்,ஏளனங்களுக்கு மத்தியில் தான் இறைவன் மீது வைத்த நம்பிக்கை ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்து அருட்பணியாளர்களுக்கெல்லாம் பாதுகாவலரான ஒருவரின் திருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில் " திருப்பணியாளர்கள் இனி தேவைதானா?" எனும் கேள்வி எழுவது வேதனைக்குரியது.இறுதி வரிகளில் இதயம் திறக்கும் தந்தை..."அருள் பணியாளராக நீ என்ன பெற்றாய்?" எனும் கேள்விக்கு " "அருள்பணியாளராக வந்திராவிட்டால் நான் நிறையவற்றை இழந்திருப்பேன்" எனும் பதிலைத்தருவதாக்க் கூறுகிறார்.என்னையும் கூட யாரேனும் பார்த்து "இந்த அருட்பணியாளர்கள் இருப்பதனால் யாருக்கு என்ன லாபம்?" என்று கேட்டால் "அவர்கள் இலையெனில் பலவற்றை நான் இழந்திருப்பேன்" என்பதே என் பதிலாகவும் இருக்கும்.விரும்பி வந்துவிட்டால் எதுவுமே நமக்கு சுமையல்ல என்பதை நிருபித்த புனித வியான்னி என்றென்றும் இந்த அருட்பணியாளர்களுக்குத் துணை நிற்கட்டும். வெளியேயிருந்து கல்லெறிபவர்கள் பற்றி இவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படத் தேவையில்லை! அனைத்து அருட்பணியாளர்களுக்கும் மீண்டும் என் வாழ்த்துக்களும்,செபங்களும்!!!

    ReplyDelete
  2. வியான்னி ...
    எளிமையின் எதார்த்தம்..
    தூய்மையின் சாயல்...
    பாவத்தின் எதிரி...
    பாவிகளின் நண்பர்...
    மாதாவின் பிள்ளை..
    குருக்களின் வழிகாட்டி...


    அருள்பணியாளராக இல்லாவிட்டால் நான் நிறையவற்றை இழந்திருப்பேன் என்று விடை சொல்வேன்

    இந்த இனிய விடை ஒரு மிக பெரிய சத்தியம்...

    நன்றி தந்தையே... உங்கள் மறை உரைகள் இன்றைய தமிழ் கூறும் உலகிற்கு ஒரு வரப்பிரசாதம்...

    ReplyDelete