Friday, April 10, 2015

கொலோசியம் எங்கே இருக்கு?

இன்று மதியம் வத்திக்கான் பேதுரு ஆலயத்திலிருந்து இல்லம் திரும்பிக் கொண்டிருந்தேன். மெட்ரோ ஏறுவதற்குச் செல்லும் சாலையில் ஒரு பெண்மணி என்னை இடைமறித்தார். வயது 75 முதல் 80 இருக்கும். 'கொலோசியம் எங்கே இருக்கு?' என்றும் 'கொலோசியத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும்?' என்றும் கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனெனில் வெள்ளைக் கலர்காரங்களைத் தவிர வேறு யாரிடமும் சுற்றுலா பயணிகள் வழி கேட்க மாட்டாங்க. இது ரோமில் மட்டுமல்ல. நான் ஐரோப்பாவில் பார்த்த இடங்களிலெல்லாம் நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம். 'வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்!' என்பது இவர்களின் அபிப்பிராயம் போல. அந்தப் பெண்மணி என்னிடம் வழிகேட்டிருக்கக் காரணம் நான் இன்று அணிந்திருந்த அருட்பணியாளரின் கறுப்பு உடையும், வெள்ளை கழுத்துப்பட்டையும்தான் என நினைக்கிறேன். அவர் பெயர் கிறிஸ்டல். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். ரோமைச் சுற்றிப் பார்க்கத் தனியாக வந்திருக்கிறார்போலும். கொலோசியத்தைப் பார்த்துவிட்டு இன்று மாலையே தன் ஊர் திரும்புவதாகச் சொன்னார்.

மெட்ரோவில் செல்வது எளிது என்பதால், 'நீங்கள் விரும்பினால் என்னுடன் வரலாம்!' என்றேன். 'இல்லை. மெட்ரோ வேண்டாம். சுமைகள் அதிகம் இருக்கின்றன' என்றார். ஆம் ஒரு கைப்பையும், பெரிய பெட்டியும் வைத்திருந்தார். நடந்து போவது தூரம் என்பதால், பேருந்து எடுக்க விரும்புகிறீர்களா என்று கேட்டேன். 'சரி!' என்றார். பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்று அவருக்கு பேருந்து அட்டவணையையும் சுட்டிக் காட்டினேன்.

'ரொம்ப நன்றி!' என்று புன்முறுவல் பூத்தார்.

முன்பின் தெரியாத ஒரு நாட்டில், முன்பின் தெரியாத மனிதர்கள் நடுவில் இத்தனை வயதில் வந்து நின்று கொண்டு இவர் கஷ்டப்பட வேண்டுமா என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன்.

'உலகையே சுற்றிப் பார்க்க வேண்டும்' என்னும் ஆர்வம் ஒரு புறம் அவருக்கு.

மற்றொரு பக்கம் அவரின் வயது தரும் இயலாமை.

இந்த இரண்டிற்குமான போராட்டம் அவர் கண்களில் தெரிந்தது.

'ஆர்வம்' மற்றும் 'இயலாமை' - இந்த இரண்டிற்குமான போராட்டம்தான் வாழ்க்கை. இல்லையா?

நல்ல மார்க் எடுக்கணும் அப்படிங்கிற ஆர்வம் ஒரு பக்கம். கூடவே வருகின்ற இயலாமைகள் மறுபக்கம். இந்த இரண்டிற்குமான போராட்டம் தான் கல்வி.

நல்ல சம்பளம் வாங்கணும் அப்படிங்கிற ஆர்வம் ஒரு பக்கம். கூடவே வருகின்ற இன்னல்களும், இயலாமைகளும் மறுபக்கம். இந்த இரண்டிற்குமான போராட்டம் தான் வேலை.

எங்கேயோ இருந்து வந்து, ஒற்றைக் கேள்வியினால் வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுத்த கிறிஸ்டலுக்கு என் நன்றிகள்.

1 comment:

  1. கடுகளவு விஷயத்திலிருந்து கூட ஒரு வாழ்க்கைப் பாடத்தைத் தோண்டி எடுக்கும் வித்தை தந்தைக்கு மட்டுமே உண்டு.கண்டிப்பாக இன்றைய க்றிஸ்டல் நம்மூர் பெண்களுக்கு ஒரு 'ரோல் மாடல்' தான்.முப்பது வயது ஆனாலே எல்லாம் முடிந்து விட்டது என்று சோர்ந்துவிடும் நம் பெண்களைப் போலன்றி எண்பது வயதிலும் வாழ்க்கையை வாழ்ந்தே தீரவேண்டும் என்ற மேலை நாட்டுப் பெண்களின் 'பாசிட்டிவ் அப்ரோச்' நாம் கற்றுக்கொள்ள வேண்டியதே.எடுத்ததெற்கெல்லாம் ஒரு துணையை எதிர்பார்க்காமல் வாழ்க்கை நம்மை இட்டுச் செல்லும் திசையில் தன்னம்பிக்கயுடன் வீறு நடை போடப்பழகினால் எந்த இன்னலும்,இயலாமையும் நமக்குப் போராட்டத்திற்குப் பதில் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றையே பெற்றுத்தரும்......தந்தைக்கு நன்றிகள்!!!.....

    ReplyDelete