Thursday, April 16, 2015

இசை மொழி

இன்று மதியம் நான், நண்பர் ஜெகன் மற்றும் அவரது நண்பர் ஒரு இத்தாலிய இளவல் எல்லாம் இணைந்து பனிக்குலவை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். உரையாடலின் நடுவே இளவல் ஒன்றை அழகாகச் சொன்னார்: 'நாம் யாரைப் பிடிக்கிறதோ அவர்கள் மொழியை எளிதாகக் கற்றுக்கொள்வோம்!' ஆக, நாம் பேசுவதற்கு ஒரு புதிய மொழியைக் கற்க வேண்டுமென்றாலும் சரி, அல்லது நம் அன்பு உறவு பேசும் மொழியைக் கற்க வேண்டுமென்றாலும் சரி அவர்களை நமக்குப் பிடிக்க வேண்டும். படிப்பிலேயே பாருங்களேன். எந்த ஆசிரியரை நமக்குப் பிடிக்கிறதோ, அந்த ஆசிரியரின் பாடமும் நமக்குப் பிடிக்கும். ஆக, ஒரு ஆசிரியர் தன் பாடத்தை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தால் முதலில் அவர் அவர்களுக்குப் பிடித்தமானவராக நடந்து கொள்ள வேண்டும்.

உலகமெல்லாம் ஆங்கிலம் பேசுகிறார்கள் என்றும், ஆங்கிலம் தெரிந்தால் உலகையே நாம் சுற்றி வரலாம் என்றும் நம் ஆங்கில வழி பள்ளிகளில் சொல்கிறார்கள். அது சுத்தப் பொய். ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் உலகத்தின் ஒருசில நாடுகளில் வேண்டுமானால் வாழ்வை சமாளிக்கலாம். எல்லா நாடுகளிலும் அல்ல.

ஆங்கில மோகம் வேகமாக வளர்ந்தாலும், தன் இத்தாலிய வேர்களைப் பிடித்துக் கொண்டும், அதில் பெருமிதம் கொண்டிருக்கும் இத்தாலியர்களுக்கு இத்தாலியனைத் தவிர வேறு மொழி தேவை இல்லை. கடைசி வரை தங்கள் தாய்மொழியிலேயே கற்கின்றனர். தாய்மொழியையே பேசுகின்றனர்.

நமக்கும் தாய்மொழி ஆர்வம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் பாரதியார் கூட, 'பிறமொழியின் நல்ல நூல்கள் தமிழ் மொழியில் வேண்டும்!' என்றார்.

எந்த மொழியில் வெளியாகும் நல்ல இலக்கியமும் உடனடியாக இத்தாலியனிலும் கிடைக்கிறது. ஆக, இவர்களுக்கு வேறு மொழி தேவையில்லை.

இத்தாலியன் லத்தீன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி. இத்தாலியனில் எல்லா வார்த்தைகளும் (இப்போ சேர்ந்திருக்கும் சில ஆங்கில வார்த்தைகள் தவிர!) உயிரெழுத்தில்தான் முடியும். ஆக, இந்த மொழியைப் பேசும்போதே பாடுவது போல இருக்கும். நம் திராவிட மொழிகளில் இந்தப் பண்பு தெலுங்கு மொழியில் இருப்பதால் தெலுங்கு மொழியை, 'இத்தாலியன் ஆஃப் தெ ஈஸ்ட்' என்றும் அழைப்பர்.

ரோமில் கால் பதித்த நாளன்று எல்லாம் புதிதாகத் தெரிந்தது. வாயிருந்தும் ஊமையாய், காதிருந்தும் செவிடராய் நகர்ந்தது முதல் நாள். சென்னையில் நான் கற்ற இத்தாலியனுக்கும், ரோமில் பேசப்பட்ட இத்தாலியனுக்கும் உள்ள வித்தியாசம், நாகர்கோவிலைச் சார்ந்த ஒருவர் விடிந்ததும் சென்னைத் தமிழைக் கேட்பது போல இருந்தது. 'புரியுது. ஆனா புரியல!' என்ற நிலையில்தான் வாழ்க்கை முதலில் ஓடியது.

இத்தாலியன் ஒரு இசை மொழி.

இத்தாலியன் ஒரு காதல் மொழி.

இத்தாலியன் ஒரு பண்பாட்டு மொழி.

இவர்கள் பயன்படுத்தும் நிறைய வார்த்தைகள் ஆங்கில-ஜெர்மானிய குடும்பத்திலிருந்து கடன் வாங்கப்பட்டது என்றாலும், இவர்களின் இலக்கியங்களும் மொழியை செறிவாக்கியுள்ளன. தாந்தே அவர்களின் 'டிவைன் காமெடி'யை இத்தாலிய மொழியில் வாசித்தால்தான் அதை முழுமையாக ரசிக்க முடியும்.

ரோமிற்கு வந்த சில நாட்களில் போர்க்கால அடிப்படையில் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினேன். கேத்தியா என்ற இளவலும் என் உச்சரிப்பு வளர்ச்சிக்கு உதவினார்.

'க்வெஸ்தோ எ மியோ தெலஃபோனினோ!' (இது என்னுடைய செல்லிடப்பேசி!) - இதுதான் நான் முதலில் ரசித்த இத்தாலியச் சொல்லாடல்.

இன்னும் இத்தாலியன் கற்க வேண்டும்.

ஒரு புதிய மொழியைக் கற்கும்போது ஒரு புதிய உலகத்திற்குள் நாம் நுழைகிறோம்தானே!


1 comment:

  1. தமிழ் வெறி பிடித்த ஒருவர் இத்தாலி சென்ற மூன்று வருடங்களில் இத்துணை தூரம் அந்த மண்ணோடும், மொழியோடும் கலந்துவிட்டது மெச்ச வேண்டிய ஒன்றே! கண்டிப்பாக நமக்கு பிடித்த ஒரு விஷயத்திற்காக எங்கும் தங்கலாம்;எதையும் கற்கலாம்.இத்துணை விரைவில் இந்த 'இத்தாலியன்' மொழிமீது தங்களுக்குள்ள புலமையும்,ஆர்வமும் இந்த 'இசைமொழியைக்' கற்றுக்கொள்ள எம்மையும் தூண்டும்போல் தெரிகிறது. எல்லாம் சரிதான் ஃபாதர்!.... மொழிபிடிக்கிறது என்பதற்காக ஜாகையை அங்கே கிடத்திவிடாதீர்கள்.தங்களின் சேவை எம்மக்களுக்கும் தேவைப்படுகிறது.....என்பதை மறந்துவிடாதீர்கள்!!!!

    ReplyDelete