Sunday, April 19, 2015

நீங்க கையில சாப்பிடுவீங்களா?

குருத்துவ அருட்பொழிவு நாள் இனிதே நிறைவுற்றது. எனக்காக செபித்த, வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இறைவன் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

அப்போது அவர் அவர்களிடம், 'உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?' என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். (லூக்கா 24:41ஆ-43)

இந்த இரண்டு வாசகங்களையும் இன்றைய திருப்பலியின் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம்.

உயிர்த்த இயேசு வேக வைத்த மீன் துண்டை கையால் சாப்பிட்டாரா? கரண்டி வைத்து சாப்பிட்டாரா?

'அமர்ந்து' உண்டார் என்று சொல்லிய நற்செய்தியாளர் இதைச் சொல்லாமல் விட்டுவிட்டார்.

இந்தக் கேள்விதான் இன்றைய நம் சிந்தனை.

இத்தாலிக்கு வந்த முதல் நாள் இரவு நான், பங்குத்தந்தை மற்றும் உதவிப் பங்குத்தந்தை மூன்று பேரும் சேர்ந்து சாப்பிட்டோம். மாலை 4:30 மணிக்கு அறைக்கு வந்து சேர்ந்தேன். குளித்து முடித்து கறுப்பு சட்டை போட்டு, வெள்ளைக் கழுத்துப் பட்டை மாட்டி சாப்பிடத் தயாராக இருந்தேன். 7:30க்கு என்று சொல்லிவிட்டு 8:00 மணிக்கு வந்து சேர்ந்தார்கள். உணவறையில் வைத்திருந்த எதற்கும் பெயர் தெரியவில்லை. நம்ம ஊரில் பார்த்த ஒன்று இங்கே பார்த்தேன் என்றால் அது 'டொமாடொ கெட்ச்-அப்' மட்டும்தான். செபம் சொல்லிவிட்டு சாப்பிட அமர்ந்தவுடன் தான் எனக்கு தெரிந்தது 'இங்கே ஸ்பூன்-ஃபோர்க்' வைத்து சாப்பிட வேண்டும் என்று. முகமெல்லாம் வியர்த்து விட்டது. கோழி இறைச்சியை வெட்ட வெட்கப்பட்டுக் கொண்டு 'நான் வெஜிடேரியன்' என்ற சொல்லிவிட்டு வெறும் சாலட் மட்டும் எடுத்துக் கொண்டேன். அதையும் நைஃப்-ஃபோர்க் கொண்டுதான் சாப்பிட வேண்டும் என்றார்கள்.

'இந்தியாவில் நீங்க கையில தான் சாப்பிடுவீங்களா?' என்று கேட்டார் உ.ப.த.

'ஆம். அதுதான் சுத்தமானது. இந்த ஸ்பூன் உன் வாயில் இருந்திருக்கும். அவர் வாயில் இருந்திருக்கும். ஆனால், என் கைகள் என்னோடு மட்;டும்தான் இருக்கின்றன (ஒருசில நேரங்களில் அடுத்தவரின் வாயிலும் இருந்திருக்கின்றது - நாங்களும் சாப்பாடு ஊட்டி விட்டு சாப்பிட்டுருக்கோம்ல!)' என்று விவேகானந்தார் ஒருமுறை சொன்ன வார்த்தைகளையே சொன்னேன்.

அப்படியே ஷாக் ஆகி பார்த்தார்கள்.

'உனக்கு எது வசதியோ அப்படி சாப்பிடு!' என்று சொன்னார் ஜென்டில்மேன் பங்குத்தந்தை.

நான் குருமடத்திற்கு போவதற்கு முன் (அதாவது 14 வயதுக்கு முன்) இரண்டு முறை கரண்டியில் சாப்பிட்டிருக்கிறேன் - ஒருமுறை, கதவிடுக்கில் என் விரலைக் கொடுத்து காயப்படுத்திக் கொண்டபோது, இரண்டாவது முறை, நகச்சுத்தி வந்த போது. கரண்டினா ஸ்பூன்-ஃபோர்க் அப்படின்னு நினைக்க வேண்டாம். சீனி டப்பாவில் கிடக்கும் ப்ரு காஃபிக்கு ஃப்ரீயா வந்த குட்டி ஸ்பூனைக் கழுவிவிட்டு நம் கையில் தருவார்கள். முதன்முதலாக ஸ்பூன்-ஃபோர்க் பிடித்துச் சாப்பிட்டது புனே குருமடத்தில்தான். அங்கே மதிய உணவை கண்டிப்பாக ஸ்பூன்-ஃபோர்க் கொண்டுதான் சாப்பிட வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்ததாம். எதற்காக? ஸ்பூன்-ஃபோர்க்கில் சாப்பிட்டால் பொதுவாக நாம் குறைவாக சாப்பிடுகிறோம் என்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை. நான் போன சமயம் அந்த சட்டம் எழுத்து வடிவில் இல்லையென்றாலும், கடைப்பிடிக்கப்பட்டது.

எப்படி சாப்பிடுறது நல்லது என்பது கேள்வி கிடையாது. நாம் கைகளால் சாப்பிடுகிறோம். இவர்கள் கரண்டியால் சாப்பிடுகிறார்கள். சீனர்கள் குச்சிகளால் சாப்பிடுகிறார்கள்.

உணவு என்று சொல்லும் போது சமூகவியில் ஆய்வில் 'ஃபுட் ஹேபிட்' மற்றும் 'ஈட்டிங் ஹேபிட்' என்று இரண்டு உண்டு. 'ஃபுட் ஹேபிட்' என்பது நாம் 'எதை' உண்கிறோம் என்பதையும், 'ஈட்டிங் ஹேபிட்' என்பது நாம் 'எப்படி' உண்கிறோம் என்பதையும் குறிக்கிறது. தமிழர்கள் வெள்ளை சோறு சாப்பிடுவது, மலையாளிகள் சிகப்பு சோறு சாப்பிடுவது, பஞ்சாபிகள் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவது என்று சொல்வதெல்லாம் இவர்களின் ஃபுட் ஹேபிட். தரையில் அமர்ந்து சாப்பிடுவது அல்லது டைனிங் டேபிளில் சாப்பிடுவது என்பது ஈட்டிங் ஹேபிட். ஒரு ஐஸ் க்ரீம் சாக்கோ பார் சாப்பிடுவதிலேயே பாருங்களேன்! ஒரு சிலர் சூப்பி சாப்பிடுவார்கள், வேறு சிலர் கடித்து சாப்பிடுவார்கள். கடித்து சாப்பிடுவதிலும் சிலர் மேலிருந்து கடிப்பர். மற்றும் சிலர் கீழிருந்து கடிப்பர்.

நான் என்பது என் பெயரோ, என் மொழியோ, என் படிப்போ, என் வேலையோ, என் நாடோ அல்ல. மாறாக நான் என்பது 'என் உணவு'. யு ஆர் வாட் யு ஈட் என்றும் யு பிகம் வாட் யு ஈட் என்றும் ஆங்கிலத்தில் சொலவடைகள் உண்டு. நம் உணவை வைத்து நாம் யார் என்று சொல்ல முடியும். அல்லது நாம் எந்தக் குழுவைச் சார்ந்திருக்கிறோமோ அந்தக் குழுவின் உணவையே உண்ணுகிறோம். உதாரணத்திற்கு, பிராமணர்கள் மரக்கறி உணவை மட்டுமே உண்கின்றனர். தென்னிந்திய பிராமணர்களைப் பொறுத்தவரையில் மீன் என்பது மரக்கறி கிடையாது. ஆனால், மேற்கு வங்களாத்தில் பிராமணர்கள் மீன் சாப்பிடுவார்கள். நம் உணவை 'பக்கா' ஃபுட் அல்லது 'கச்சா' ஃபுட் என்று இந்திய சமூகவியலில் பிரிப்பார்கள். 'பக்கா' உணவை உண்பவர்கள் மேலோர் என்றும், 'கச்சா' உணவை உண்பவர்கள் கீழோர் என்றும் சொல்வதுண்டு. (இது சரியா! தவறா! என்ற வாதம் இப்போது வேண்டாம்!) இன்றைய இளையோர் மத்தியில் மேக் டொனால்ட் கல்ச்சர், மேரி பிரவுன் கல்ச்சர், பானி பூரி கல்ச்சர், மேகி நூடுல்ஸ் கல்ச்சர் என்றும் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் 'பானி பூரி சாப்பிடுவோருக்கென்று!' நம் தமிழ்நாட்டில் க்ரூப் ஒன்று இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

இத்தாலியில் என்ன சாப்பிடுகிறார்கள், எந்தெந்த நேரத்தில் சாப்பிடுவார்கள் என்று மற்றொரு முறை எழுதலாம். இன்று ஸ்பூன்-ஃபோர்க் என்னும் டேபிள் கல்ச்சரோடு நிறுத்திக் கொள்வோம்.

உணவறையில் ஒவ்வொருவரின் இருக்கைக்கு முன்னும் ஐந்து தட்டுக்களும், மூன்று கண்ணாடி டம்ளர்களும், ஐந்துவகை கரண்டிகளும் இருக்கும். எல்லாருக்குமா? என்று கேட்காதீர்கள். ஒவ்வொருவருக்கும்!

தட்டுக்கள் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். முதல் தட்டு ஆண்ட்டிபாஸ்தா என்று சொல்லப்படும் 'ஸ்டார்ட்டர்' சாப்பிட. இரண்டாம் தட்டில் தான் முதல் வகை உணவு (பாஸ்தா அல்லது ஸ்பகெத்தி). மூன்றாம் தட்டு இறைச்சி சாப்பிட. நான்காம் தட்டு சாலட் சாப்பிட. ஐந்தாம் தட்டு டெசர்ட் அல்லது இனிப்பு சாப்பிட. கண்ணாடி டம்ளர்களில் மிக உயரமாக இருக்கும் டம்ளர் தண்ணீர் குடிக்க. அதைவிட கொஞ்சம் சின்ன டம்ளர் ஒயின் குடிக்க. ரொம்பக் குட்டியோண்டு டம்ளர் 'அமாரோ' என்று சொல்லப்படும் 'டிஜெஸ்டிவ்' (செரிமான டிரிங் - இதன் ஆல்கஹால் அளவு 50 முதல் 60 சதவிகம்!) குடிக்க. கரண்டிகளில், குளிக்கரண்டி பாஸ்தா நீரோடு செய்யப்பட்டால் அதை சாப்பிட. முள்கரண்டியும், கத்தியும் இறைச்சி சாப்பிட. பழம் மற்றும் வெண்ணைய் துண்டுகள் சாப்பிட மற்ற இரண்டு வகை ஒற்றைமுள் கரண்டிகள். இதைக் கற்றுக்கொள்ளவே தலைசுற்றிவிடும். கைதுடைக்க ஒரு துணி அல்லது பேப்பர்.

இந்த இத்தாலிய டேபிள் ஹேபிட் எல்லாரும் பழகியிருக்கும் ஒன்று. எந்த வீட்டிற்கு அல்லது பங்குத்தந்தை இல்லத்திற்கு அல்லது இத்தாலிய உணவகத்திற்குச் சென்றாலும் இந்த முறை பின்பற்றப்படுவதைப் பார்க்கலாம்.

இந்த டேபிள் ஹேபிட்டில் நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் மூன்று:

1. உணவறையை மூடிக் கொண்டு சாப்பிடுவது. நம்ம ஊருல இதை நாம் பின்பற்றுவது கிடையாது. பங்குத்தந்தையர் இல்லத்தில் கூட கதவுகள் திறந்துதான் வைக்கப்படுகின்றன. எதற்காக மூடி வைக்க வேண்டும்? ஒன்று, உணவின் மணம் மற்ற அறைக்குச் சென்றுவிடக் கூடாது. இரண்டு, உணவு என்பது இத்தாலியில் உடலுறவு போன்றது. உணவறையில் என்ன நடக்கிறது என்பது அங்கே உள்ளிருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரிய வேண்டும். இது ஒரு நல்ல பழக்கம். அதாவது, எங்கேயும் உட்கார்ந்து, எது கிடைத்தாலும் சாப்பிடும் ஒருசிலரைப் போல இல்லாமல், அல்லது சாலைகளில் வெட்ட வெளியில் சாப்பிடும் ஆடு, மாடுகளைப் போல இல்லாமல் நாம் வேறுபட்டிருக்கிறோம் என்பதைக் காட்டவே இது. ஆக, இது மற்றவர்களை தாழ்வாக நினைப்பது எனச் சொல்லாதீர்கள். இது ஒரு தன்மதிப்பின் அடையாளம். நீங்களும் கதவுகைள் பூட்டிச் சாப்பிட்டுப் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.

2. ஒவ்வொன்றிற்கும் ஒரு தட்டு. எதற்காக? காரம் சாப்பிட்ட தட்டில், இனிப்பு சாப்பிட்டால் எப்படி இருக்கும்? சபரீஸ் ஹோட்டலில் வத்தல் குழம்பு சாப்பிட்டுவிட்டு, பாயாசத்தை அதே தட்டில் ஊற்றி சாப்பிடுவதுபோல இருக்கும். நம்ம ஊர்ல இதெல்லாம் முடியுமா? அவன் காசுள்ளவன் சாப்பிடுறான். நாம் என்ன செய்ய? என்று கேட்காதீர்கள். அல்லது எல்லாம் ஒரே வயிற்றுக்குள்ளதான போகுது அப்படின்னு சொல்லாதீங்க. காசுள்ளவன் பீங்கான் வாங்கட்டும். காசில்லாதவன் எவர் சில்வரிலாவது வித்தியாசமாக வாங்கலாமே. ஒவ்வொன்றையும் அதன் ருசியோடு ரசிக்க வேண்டும். இது உணவிற்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும் பொருந்தும். உறவுநிலைகளுக்கும் பொருந்தும். 'ஸ்டார்ட்டர்' போல சிலரை வேகமாக சாப்பிடுவோம். 'டெசர்ட்' போல சிலரை ரசித்து சாப்பிடுவோம். எல்லாரையும் ஒரே தட்டுல போட முடியுமா மை லார்ட். அப்படி போட்டா டேஸ்டாவா இருக்கும்?

3. மேசை விரிப்பு. மேசையில் துணி விரித்து அதன் மேல் தட்டு வைத்து சாப்பிடுவார்கள். நம்ம ஊரிலும் விரிக்கிறார்கள். ஆனால், பிளாஸ்டிக் ஷீட் தான் பெரும்பாலும் விரிக்கப்படுகிறது. க்ளீனிங் எளிது என்பதற்காக. ஆனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துணி, காலத்திற்கு ஏற்றவாறு - அதாவது கிறிஸ்துமஸ் என்றால் சிவப்பு, பாஸ்கா என்றால் வெளிர்மஞ்சள். இப்படி அமர்ந்து சாப்பிடும்போது நம்மையறியாமல் ஒரு பெருமிதம் வருகிறது. என்னை முதலில் நான் மதிக்க வேண்டுமல்லவா? இயேசுகூட அழகாகச் சொல்வார்: 'யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா!' (லூக்கா 22:27). நாம் பந்தியில் அமரப் பிறந்தவர்கள். நாம் வாழவும், வெல்லவும். ஆளவும் பிறந்தவர்கள் தானே!


1 comment:

  1. நாம் எத்துணை உண்மையோ அத்துணை உண்மையானது நம் சாப்பாடும்,சாப்பிடும் பழக்கவழக்கங்களும்.அதுதான் நம் பின்புலத்தையும், பாரம்பரியத்தையும் அடுத்தவருக்கு உணர்த்தக்கூடியது.இதை யாருக்காகவும் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க ஒருவரால் இயலாது.என்னதான் சாப்பாட்டு மேசை முழுக்க தட்டுகளும்,டம்ளர்களும்,இன்னபிற உணவு வகைகள் என்று நிரம்பி வழிந்தாலும் ஆரம்ப காலத்தில் தந்தை தான் ஒரு தரையிலிட்ட மீனாகவே உணர்ந்திருக்க வேண்டும்.தன் ஆரம்பகால இத்தாலிய அனுபவங்களை சுவைபடக்கூறும் தந்தை அவைகளை விவிலியத்தோடு சம்பந்தப்படுத்துவதுதான் கொடுமுடி.ஆம் நாம் கையாலோ, கரண்டியாலோ,முள்ளாலோ....எதால்வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஏனெனில் நாம் " பந்தியில் அமரப்பிறந்தவர்கள்;நாம் வாழவும்,வெல்லவும்,ஆளவும் பிறந்தவர்கள்." பெருமைக்குரிய விஷயமல்லவா?

    ReplyDelete