Monday, April 20, 2015

இணைப்புக் கோடாகும் உணவு!

ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே நாள் என்னுடைய முதல் திருப்பலி ராஜபாளையத்தில் இருந்தது. வழக்கமாக எல்லாரும் செய்யும் கேட்டரிங் ஆர்டர் செய்யாமல், யாராவது முன்பின் தெரியாத ஒருவரை, ஒரு கிராமத்தான் செய்யும் சமையலை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆசை. அதன்படி எங்க ஊருக்கு அருகில் உள்ள மேலாண்மறைநாடு என்னும் கிராமத்தைச் சார்ந்த கோபாலகிருஷ்ணன் நாயக்கர் என்னும் சமையல்காரரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை அழைத்து, கொட்டேஷன் கேட்டோம். நாயக்கர் அல்லது நாயுடு என்னும் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் திருமலைநாயக்கர் காலத்தில் குடிபுகுந்து ராஜூக்கள் என்னும் குழுவினரின் ஒரு பகுதி. இவர்கள் தெலுங்கு பேசுவார்கள். ஆனால், தெலுங்கு எழுதத் தெரியாது. இவர்களின் தெலுங்கிற்கும், இன்று ஆந்திராவில் பேசப்படும் தெலுங்கிற்கும் தொடர்பே இல்லை என்று எங்கள் ஊருக்கு வந்திருந்த ஃபாத்திமா ரெட்டி சொன்னான்.

ஒரு சிலர் பார்த்த மாத்திரத்தில் நம் மனதில் ஒட்டிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் இவர். மெனு ஆர்டர் கொடுத்து இவர் தன் சகாக்களோடு வந்து சமையல் செய்து தன் கைவண்ணத்தைக் காட்ட, அன்றிலிருந்து ராஜபாளையும் முழுவதும் ஃபேமஸாகிவிட்டார். என் தங்கையின் திருமணத்திற்கும் இவர்தான் சமைத்தார். என் வீட்டைக் கடந்து இன்று செல்லும்போதெல்லாம், வண்டியைவிட்டு இறங்கி என் அம்மாவிற்கு நன்றி சொல்லிவிட்டுப் போவாரம். கடந்த வாரம் அவரது மகளுக்குத் திருமணம். என் அம்மாவும் சென்றிருந்தார்களாம்.

அவர் எங்கள் குடும்பத்தோடு இணைய ஒரு இணைப்புக் கோடாக இருந்தது உணவு.

உணவு என்று சொல்லும் போது அதில் மூன்று பண்புகள் அடங்கியிருக்கிறது: (1) தயாரிப்பு, (2) உண்ணுதல், (3) நோக்கம்.

நம் வீடுகளில் அம்மாக்கள் தான் உணவு தயாரித்தலில் முதன்மையானவர்கள். இப்போது சில வீடுகளில் வேலைக்காரர்கள் சமைக்கிறார்கள். இன்னும் சில வீடுகளில் அப்பாக்களும் சமைக்கிறார்கள். நாம் சமைக்க முடியாத நேரங்களில் உணவகம் செல்கிறோம்.

இரண்டாவது, உண்ணுதல். தயாரிப்பது உண்ணப்படும்போதுதான் நிறைவு பெறுகின்றது.

மூன்றாவது, நோக்கம். நாம் எதற்காக சாப்பிடுகிறோம்? என்று கேட்டால் 'உடல் வளர்ச்சிக்காக' என்று பதில் சொல்கிறோம். ஆனால், உடல் வளர்ச்சியையும் தாண்டி அங்கே உறவு வளர்ச்சியும் இருக்கின்றது.

நான் ரோமிற்கு வந்த புதிதில், என் பங்குத்தந்தையும், உ.ப.தயும் சாப்பிட வரும்வரை என் அறையில் காத்திருப்பேன். காலையில் யாரும் சாப்பிட வருவதாகத் தெரியவில்லை. மணி பத்தாயிற்று. நானும் சாப்பிடாமலேயே இருந்தேன். ஒரு மணிக்கு வந்தார்கள். காலை சாப்பிடலையா என்று கேட்டேன். 'நீ சாப்பிடலயா?' என்று திரும்பக் கேட்டார்கள். பின் தான் நம்ம ஜென்டில்மேன் சொன்னார்: 'மதியம் மட்டும்தான் சேர்ந்து சாப்பிடுவோம்! மற்ற நேரங்களில் உன் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்!'

நம்ம ஊருல அப்படி இல்லை. சின்ன ஃபாதர் பெரிய ஃபாதர்கூட சேர்ந்து சாப்பிடணும் என்பது எழுதப்படாத சட்டம். சில இடங்களில் சின்ன ஃபாதர் தனக்கா காத்திருக்கிறாரா என்று பார்க்க, வேண்டுமென்றே இந்த பெரிய ஃபாதர்கள் தாமதமாக வருவார்கள். ஒருவேளை அவர் சாப்பிட ஆரம்பித்தார் என்றால், 'காத்திருப்பது' குறித்த பெரிய மறையுரை நடக்கும். சில இடங்களில் இந்த சமையல்காரர்கள் பெரிய ஃபாதர் இல்லையென்றால் சமைக்கவும் மாட்டார்கள். சின்ன ஃபாதர் எல்லாம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போலவும், பெரிய ஃபாதர்கள் எல்லாம் பரம்பரை முதலாளிகள் போலவும் இருப்பதாக இவர்கள் எண்ணிக்கொள்வர். இந்தச் சமையல்காரர்களையெல்லாம் பார்த்துவிட்டுதான் நான் பங்குத்தந்தை ஆனால் சமையல்காரர் வைத்துக்கொள்வதில்லை என்று முடிவெடுத்தேன். இந்தப் பழக்கம் ரோமில் சமைக்கும் சமையல்காரர்களிடமும் இருக்கிறது. பங்குத்தந்தை இல்லாத நேரங்களில் ஃப்ரிட்ஜ் தான் நம் அடைக்கலம்.

இத்தாலியில் காலை உணவு வெறும் காஃபி (பால் கலக்காதது!) மற்றும் கொர்னெத்தோ (க்ரோஸான்) எனப்படும் ரொட்டி மட்டும்தான். சிலர் இத்தோடு சேர்த்து பிஸ்கட் அல்லது பழம் எடுத்துக் கொள்வர்.

மதிய உணவு க்ராண்டாக இருக்கும் - பாஸ்தா அல்லது ஸ்பகெத்தி (நம்ம ஊரு நூடுல்ஸ் போல இருக்கும்!), இறைச்சி, இன்சலாத்தா என்றழைக்கப்படும் மரக்கறி சேலட். மதியம் சாப்பிட்டுவிட்டு காஃபியும் குடிப்பார்கள்.

இரவு உணவு என்று எதுவும் கிடையாது. மதியம் உள்ளதில் மீதிதான் இரவு உணவு.

நம்ம ஊருல இரண்டு மணி நேரம் சமைத்து, இருபது நிமிடங்களில் சாப்பிடுகிறோம். ஆனால், இங்கு இருபது நிமிடங்கள் சமைத்து இரண்டு மணி நேரம் சாப்பிடுகிறார்கள்.

சமைக்கும் வேலையும், அதற்குப் பயன்படுத்தும் உபகரணங்களும் மிக எளிது. நானே சமைக்கப் பழகிவிட்டேன் என்றால் பாருங்களேன்!

சமையல்காரப் பெண் ஒருவர் காலை ஒன்பது மணிக்கு வந்து சமைத்துவிட்டு மதியம் ஒரு மணிக்குச் சென்றுவிடுவார். ஒரு மணி நேரம் அவர் சமைப்பதற்கு வழங்கப்படும் கூலி 10 யூரோ (அதாவது, 750 ரூபாய்). ஒரு நாள்கூலி அவருக்கு 40 யூரோ. ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் சமைக்க வரமாட்டார். நாங்களாதான் சமைத்துக் கொள்ள வேண்டும். விடுமுறை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பங்குத்தந்தையர் தங்கள் வீடுகளுக்குச் சாப்பிடச் சென்றுவிடுவர். இத்தாலியில் குருக்களை, 'அம்மாவின் சேலையைப் பிடித்துக் கொண்டு திரிபவர்கள்' என்று சொல்லக் காரணமும் இதுதான். வீட்டின் மேலும், வீட்டு உறவுகளின் மேலும் ரொம்ப அக்கறை காட்டுவார்கள். வீட்டு உறவுகளை 'நிப்போத்தி!' என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் 'நெப்போடிசம்' என்று ஒரு வார்த்தை உள்ளது - அதாவது, உறவினர்கள் மேல் அதிக பாசம் கொண்டு அவர்களுக்கு மட்டுமே நல்லவர்களாக இருப்பது. இந்த வார்த்தையின் தொடக்கமும் இவர்களின் இந்த குணம்தான்.

நம்ம ஊருல உள்ள பங்குத்தந்தையர் தங்கள் உதவிப் பங்குத்தந்தையர்களை 'கல்லிவர்ஸ் டிராவல்சில்' வரும் 'லில்லிபுட்' போல நினைத்து தங்களோடு அழைத்துக் கொண்டே செல்வார்கள். அந்தக் கதாபாத்திரத்தின் சுவராஸ்யம் என்னவென்றால், லில்லிபுட்களை பெரியவர்கள் தங்கள் கைகளில் அல்லது பைகளில் வைத்துக்கொள்ளவில்லையென்றால் அவர்கள் வேகமாக வளர்ந்துவிடுவார்கள். ஆனா, நம்ம பங்குத்தந்தையர்கள் ரொம்ப நல்லவர்கள்! உ.ப.தக்கள் வளர்வதையே அவர்கள் விரும்புவார்கள்(!). ஆனால், இங்கே அப்படி அல்ல. நான் முதல் இரண்டு ஆண்டுகள் என் பங்குத்தந்தையர் இல்லத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டதே இல்லை. நாமும் எதிர்பார்க்கக் கூடாது. அவர்களும் செய்ய மாட்டார்கள்.

சேர்ந்து உண்ணும் உணவு வந்த புதிதில் எனக்கு பெரிய பாரமாகவே இருந்தது. காரணம், அவர்களின் உணவை எப்படி சாப்பிடுவதென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இல்லாத சில நேரங்களில் நான் கையால் எடுத்து வேகமாகச் சாப்பிட்டுவிடுவதுண்டு. இரண்டாவதாக, இத்தாலியன் பேசுவதற்கு பயமாக இருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல நான் சேர்ந்து உண்பதற்குப் பழகிவிட்டேன்.

'பயம் இருக்கும் இடத்தில் வளர்ச்சி தடைபடுகிறது!' என்பது இந்த மதிய உணவில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் மூன்று:

1. பயம் நீங்க வளர்ச்சி வரும். சில குழந்தைகள் சின்ன வயதிலிருந்தே எதைக்கண்டாலும் பயப்படும். நான் அப்படிதான் வளர்ந்தேன். கீழே விழுந்துவிடுவோம் என்பதற்காக 19 வயது வரை சைக்கள் ஓட்டிப் பழகாமல் இருந்தேன். மூழ்கிவிடுவோம் என்று பயந்து 16 வயது வரை நீச்சல் கற்றுக்கொள்ளாமல் இருந்தேன். தோற்றுவிடுவோம் என்று பயந்தே பல போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தேன். ஏமாற்றப்படுவோம் என்று பயந்தே பலரை அன்பு செய்யாமல் தவிர்த்தேன். அதுபோலவே, தவறாகப் பேசிவிடுவோமோ என்று பயந்தே பல மாதங்கள் இத்தாலியன் பேசாமல் இருந்தேன். இப்படி நான் பயந்த பொழுதுகளில் என் வளர்ச்சி தடைப்பட்டது போலவே உணர்ந்தேன். கீழே கொட்டினாலும் பரவாயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லி கரண்டி பிடிக்க பழகினேன். தப்பா பேசினாலும் பரவாயில்லை என்று துணிந்து பேசத் தொடங்கினேன். என் பயம் என்னை எந்த அளவுக்கு கட்டியிருக்கிறது என்பதை நான் இந்த மதிய உணவின் போதுதான் கற்றுக்கொண்டேன்.

2. சுதந்திரம். நம் பங்குத்தளங்களில் பங்குத் தந்தையருக்கும், உதவிப் பங்குத்தந்தையருக்கும் உள்ள பிரச்சினை உருவாகக் காரணம் உணவு. உணவில் காட்டப்படும் வேற்றுமை தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் வித்திடுகிறது. இதுவே காலப்போக்கில் வளர்ந்து தனித்தனியான சாப்பாட்டு நேரங்கள் என உருவாகிவிடும். மற்றொரு பக்கம், 'சாப்பிடு! சாப்பிடு!' என்று நம்மை கட்டாயப்படுத்துவார்கள். 'இதச் சாப்பிட்டா நல்லது!' என்று தாங்கள் கற்ற அரைகுறை மருத்துவத்தையும் நம்மேல் திணிப்பார்கள். ஆனால், இங்கே கோபத்தையும், மனத்தாங்கலையும் உணவிலோ, உணவறையிலோ இவர்கள் காட்டுவதில்லை. அதே போல் 'சாப்பிடு!' என்றும் சொல்ல மாட்டார்கள். நாம் விரும்பினால் எடுத்துக்கொள்ளலாம். விரும்பாவிட்டால் வைத்துவிடலாம். 'இது வேணுமா!' அப்படின்னு நம்ம ஊருல யாரையாவது கேட்டால், முதலில் 'வேண்டாம்!' என்று சொல்வார்கள். அப்படித்தான் சொல்ல வேண்டும். பின் கொஞ்சம் கம்ப்பல் செய்தால், 'சரி! வைங்க!' என்பார்கள். இதற்கு முதலிலேயே 'வையுங்கள்' என்று சொல்லியிருக்கலாமே! கேட்டால், அப்படிச் சொன்னால் 'நாம அலையிறோம்னு' நினைப்பாங்க என்று மற்றவர்கள் நினைப்பதையும் சொல்வார்கள். நம் பேச்சு 'ஆம்' என்றால் 'ஆம்' என்றும், 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் 'கட் அன்ட் ரைட்'ஆக பேசுவதற்கு நான் கற்றுக்கொண்ட இடமும் இந்த மதிய உணவுதான்.

3. உரையாடுதல். சாப்பிடும் இடம் மற்றும் நேரம் பொழுதுபோக்கு இடம் மற்றும் நேரம் போலத்தான் இருக்கும். இங்கே அலைபேசியும், தொலைக்காட்சியும் அனுமதி இல்லை. ஒருவர் மற்றவரைப் பார்த்துப் பேச வேண்டும். சிரிக்க வேண்டும். சில நேரங்களில் சிரிக்கின்ற சிரிப்பில் சாப்பிட்டு முடித்தவுடன் பசி எடுத்துவிடும். நான் இப்படி அதிகமாகச் சிரித்து உணவருந்தியது தேனி பங்குத்தளத்தில் தான். மற்ற இரண்டு இடங்களில் கொஞ்சமாகச் சிரித்தேன் என்று அர்த்தமும் அல்ல. இன்று நம் இல்லங்களில் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடும் அல்லது பேப்பர் பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. சாப்பாடு நன்றாக இருந்தால் அதை உடனடியாக பாரட்டுவார்கள். ஆக, உணவருந்தும் போது மகிழ்ச்சியாக இருக்கவும். உடனடியாகப் பாராட்டவும் ஒரு உந்துசக்தி எங்களின் மதிய உணவு.


3 comments:

  1. இப்பொழுதெல்லாம் நம் மக்கள் வெந்துச்சா,வேகலையான்னு கூடத் தெரியாம வாயில் அள்ளிப்போட்டுக் கொள்ளும் வழக்கமாகி விட்டது நம் உணவுப்பழக்கம். இந்நேரத்தில் சேர்ந்து உண்ணுதலின் பண்புகளைத்தந்தை பட்டியலிட்டிருப்பது வரவேற்கத்தக்கது." கோழைத்தனத்தின்" தந்தை "பய உணர்வை" நம்மைவிட்டு அறவே விரட்டியடிப்பதால் எந்த அளவுக்கு நாம் வெற்றிக்கனியை சுவைக்க முடியும் என்பது இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.சேர்ந்து உணவருந்தும் பழக்கத்தையும் நேரத்தையும் புறம்பே தள்ளிவிட்டு தட்டில் என்ன உள்ளது என்பது கூடத் தெரியாமல் தொலைகாட்சிக்கும்,அலைபேசிக்கும் முன்னுரிமை கொடுக்கும் நம் மக்கள் ' சேர்ந்து உணவருந்துதலின்' மேன்மையை உணர ஆரம்பித்தால் நம் குடும்பங்களில் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.போகிற போக்கில் நாம் மிகச்சாதாரணம் என்று நினைக்கும் விஷயங்களின் மேன்மையைத்தந்தை கோடு காட்டியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது....!!!

    ReplyDelete
  2. Anonymous4/22/2015

    Good morning Yesu. How are you. Take care. Nice to your article

    ReplyDelete
  3. Anonymous4/22/2015

    Good morning Yesu. How are you. Take care. Nice to your article

    ReplyDelete