Tuesday, April 21, 2015

கொஞ்சம் கொஞ்சம்

ரோமில் நான் பார்த்த அல்லது சென்ற முதலிடம் லாத்தரன் அரண்மனை. மதுரை உயர்மறைமாவட்டத்தின் தலைமையிடம் கே. புதூரில் உள்ள 'பேராயர் இல்லம்'. அதுபோல, ரோமை மறைமாவட்டத்தின் தலைமையிடம் அல்லது 'ஆயர் இல்லம்'தான் 'லாத்தரன் அரண்மனை'. ரோமை மறைமாவட்டத்தின் ஆயர்தான் கத்தோலிக்கத் திருஅவையின் திருத்தந்தையாக இருக்கிறார். திருத்தந்தையின் வசிப்பிடம் வத்திக்கான் நகரம் என்பதால், அவரின் பிரதிநிதியாக கர்தினால் ஒருவர் (இப்போது கர்தினால் அகஸ்தின் வல்லினி) லாத்தரன் அரண்மனையில் தங்கியிருந்து மறைமாவட்டத்தை வழிநடத்துகிறார்.

காலை 10 மணிக்கு ரோம் மறைமாவட்ட 'அருட்பணியாளர்கள் அலுவலகத்தில்' அப்பாய்ன்ட்மெண்ட்.

அதாவது, ரோம் நகருக்கு படிக்க வருவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன: ஒன்று, ப்ரோபகாண்டா ஃபீதே என்ற சொல்லப்படும் மறைப்பணிகளுக்கான அலுவலகம் அல்லது அவர்களின் கல்வி உதவித்தொகை பெற்று வருவது. இரண்டு, ரோம் மறைமாவட்டத்தில் பணிபுரிந்து கொண்டே படிக்கலாம் என்ற வாய்ப்பில் வருவது. நான் வந்தது இந்த இரண்டாம் வழி. இதன்படி, ஒருவர் வேலை செய்துகொண்டே அந்த வேலைக்குத் தரப்படும் சம்பளத்தை வைத்துப் படித்துக்கொள்வது. இரண்டிலும் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. உதாரணத்திற்கு, முதல் வகையில் நாம் வருவது, போவது, படிப்பது, ஜெராக்ஸ் எடுப்பது, புத்தகம் வாங்குவது, மருத்துவ வசதி என அனைத்தும் கவனித்துக்கொள்ளப்படும். ஆனால், வசிப்பிடம் ஒரு ஹாஸ்டல் அல்லது செமினரி மாதிரி இருக்கும் - சாப்பாடு, வேலை, செபம், உள்நுழை நேரம், வெளி செல்லும் நேரம், பெர்மிஷன் என இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள் இருக்கும். இரண்டாம் வகையில், எல்லாமே நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஒரு மனச்சுதந்திரம் இருக்கும். யாரிடமும் எதற்கும் அனுமதி கேட்கத் தேவையில்லை. பொறுப்புணர்வுடன் கூடிய சுதந்திரம் இந்த இரண்டாம் வகையின் சிறப்பு.

இந்த இரண்டாம் வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சியே தந்தது. இன்றும் தருகிறது. இதுல என்னவொரு சிறப்புனா, என்னுடன் படிக்கும் நம்ம ஊரு பசங்க (15பேரில்) நான் மட்டும்தான் இப்படி வெளியில் தங்கியிருக்கிறேன். 'நான் அவர்களைவிட வித்தியாசமானவன்!' என்ற உணர்வையும், பெருமிதத்தையும். 'நான் என் சம்பளத்தில் படிக்கிறேன்!' என்ற தன்மான உணர்வையும் தருகிறது.

இந்த இரண்டாம் வாய்ப்பில் வரும் அருட்பணியாளர்கள் ரோமிற்கு வந்தவுடன், ரோம் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர்கள் அலுவலகத்திற்குச் சென்று தங்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் ரோம் மறைமாவட்டத்திற்கும், அருட்பணியாளரின் மறைமாவட்டத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்படும் - அந்த ஒப்பந்தத்தில் அருட்பணியாளர் ரோம் நகரில் பணி செய்யும் ஆண்டுகள், அவர் தங்கும் இடம், அவருக்க வழங்கப்படும் சம்பளம், அவரின் உரிமைகள், கடமைகள், இந்த நாட்களில் அவர் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை என எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும். இரண்டு மறைமாவட்டங்களின் ஆயர்களும், இரண்டு அருட்பணியாளர்களும் (அதாவது, நானும், என் ரோம் பங்குத்தந்தையும்) இதில கையெழுத்திட வேண்டும். இந்த ஒப்பந்தம் மூன்று பிரதிகள் எடுக்கப்பட்டு, ஒரிஜினல் ரோம் மறைமாவட்ட அலுவலகத்திலும், பிரதிகள் மற்ற மூன்று பேருக்கும் கொடுக்கப்படும்.

ஒப்பந்தத்தின் படி நான் பணி செய்ய வேண்டிய காலம் ஜூன் 2012 முதல் டிசம்பர் 2016 வரை. ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளம் மாதம் 570 யூரோ. இதில் ஒரு சில அருட்பணியாளர்கள் தாங்கள் தங்குவதற்கு என்று 200 யூரோ பங்குத்தந்தையிடம் கொடுக்க வேண்டும். ஆனா, நம்ம ஜென்டில்மேன் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இப்படி மாதாமாதம் வழங்கப்படும் தொகையை வைத்து நான் என் படிப்புக்காக (12000 யூரோ), பயணத்திற்காக (ரோமிற்குள் - ஆண்டுக்கு 250 யூரோ, மற்ற வெளிப் பயணங்களுக்கு வேறு வேறு தொகை), மருத்துவ காப்பீடுக்காக (ஆண்டுக்கு 180 யூரோ), தங்கும் அனுமதிக்காக (இரண்டு ஆண்டுகளுக்கு 150 யூரோ), மற்ற தனிசெலவுகளுக்காக (நண்பர்களோடு விருந்து, அவட்டிங், பிக்னிக், ஃபோன், இன்டர்நெட் போன்றவவை) என அனைத்தையும் 'ப்ளான்' பண்ணி செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால், இந்த மூன்று வருடத்தில் நிதி மேலாண்மையைக் கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இருந்தது.

என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற உதவிப் பங்குத்தந்தை என்னை அலுவலகத்தில் விட்டுவிட்டு வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டார். இத்தாலியன் மொழி மட்டுமே பேசப்பட்ட அந்த அலுவலகத்தில் சொல்லப்பட்ட ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன்.

'எப்படி வீடு திரும்ப வேண்டும்?' என்று ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

எழுதப்பட்ட காகிதத்தைக் கையில் பிடித்துக் கொண்டே தலையும் புரியாமல், வாலும் புரியாமல் வெளியே வர மின்தூக்கிக்குள் நுழையும்போது அங்கே எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. என்னுடன் புனேயில் மெய்யியல் பயின்ற (ஒரு வருடம் சீனியர்) சிவகங்கை மறைமாவட்ட அருட்தந்தை ஜஸ்டின் அவர்களைப் பார்த்தேன். ரோம் வருவதற்கு முன் அவரோடு தொடர்பு கொள்ள நினைத்து முடியாமல் போய் இன்று திடீரென பார்த்தவுடன் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

உடனடியாக இரண்டு மகிழ்ச்சி. ஒன்று, இவரை வைத்து இந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொள்ளலாம். இரண்டாவது, இவரை வைத்து வீடு திரும்பும் பேருந்து அல்லது மெட்ரோவிற்கான வழியைக் கண்டுபிடிக்கலாம். இந்த இரண்டிலும் உதவி செய்யுமாறு கேட்டேன். உடனடியாக ஒப்புக் கொண்டார்.

'நீ ரோம் வந்துள்ளதை முதலில் கொண்டாடுவோம்!' என்று சொல்லிக் கொண்டே அருகிலிருந்த ஒரு பாருக்கு அழைத்துச் சென்றார். 'பார்' என்பது நம்ம ஊரு டீக்கடை மாதிரி. காஃபி, டீ, பழச்சாறு, ஐஸ்க்ரீம், ஆல்கஹால், நான்-ஆல்கஹால் என அனைத்தும் இங்கே கிடைக்கும். இத்தாலியன் ஸ்பெஷல் 'கப்புச்சினோ' குடிக்க ஆசை. 'எனக்கு கப்புச்சினோ!' என்றேன். அவர் தனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொண்டார். குடித்துக்கொண்டே புனேக்கு அப்புறம் நடந்த அனைத்தையும் இருவரும் பகிர்ந்து கொண்டோம். அவரும் மெட்ரோ எடுக்க வேண்டியிருந்ததால், என்னை அழைத்துச் சென்ற நான் செல்ல வேண்டிய வழியைக் காட்டினார்.

வீடு வந்து சேர்ந்தேன்.

'நீயாகவே வந்துவிட்டாயா! என்ன ஆச்சர்யம்! வாழ்த்துகள்!' என்று உச்சி முகர்ந்தார் நம்ம பங்குத்தந்தை ஜென்டில்மேன்.

1. லாத்தரன் அரண்மனையைப் பற்றி மறையுரையிலும், புத்தகத்திலும் கேட்டறிந்த எனக்கு அந்த அரண்மனைக்குள் நுழைவது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இங்கே வெறும் அலுவலகங்கள் மட்டும்தான் உள்ளன. இங்கு வேலை செய்யும் அருட்பணியாளர்கள் வேறிடங்களில் தனித்தனியாக தங்கியிருக்கிறார்கள். அரண்மனையின் அமைதி எனக்கு ஆச்சர்யமாகவும், பயமாகவும் இருந்தது. விசாலமான வராண்டா, உயரமான ஜன்னல்கள், கதவுகள். சில பத்தாண்டுகளுக்கு முன் இதுதான் திருத்தந்தையின் வசிப்பிடமாகவும் இருந்தது. மின்தூக்கிகள் இல்லாத காலத்தில் கட்டப்பட்டதால். நான்காவது மாடி வரைக்கும் குதிரைகளும், பல்லக்குகளும் செல்ல வசதியாக படிக்கட்டுகளும், வராண்டாக்களும் அகலமாக இருந்தன. நம் ஞானஒளிவுபுரம் கோவிலைப் போல 16 கோவில்களை இந்த அரண்மனைக்குள் அடக்கிவிட முடியும்.

2. திருத்தந்தையின் மறைமாவட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு. மதுரை உயர்மறைமாவட்டத்தின் அடையாள அட்டையை கேட்டுப் பெற்றுக் கொண்ட அலுவலக அருட்பணியாளர், என் நிழற்படம் ஒட்டிய புதிய ரோம் மறைமாவட்டத்தின் அடையாள அட்டையைக் கையில் கொடுத்து, 'பென் வெனுத்தோ அல்லா தியோசிஸி தி ரோமா!' (ரோம் மறைமாவட்டத்திற்குள் நல்வரவு!) என்று வாழ்த்தினார். 'தேங்க் யூ' என்று சொல்லி பெற்றுக்கொண்டேன். அந்த நேரத்திலும் இத்தாலியன் வர மறுத்தது. மறைமாவட்ட அருட்பணி நிலையில் இது ஒரு முக்கியமான தருணம் என்றே நான் நினைக்கிறேன்.

3. 'யாரிடம் அதிகம் கொடுக்கப்படுகிறதோ, அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்' என்கிறது பைபிள். நாம் வெளிநாட்டில் இருக்கும்போதுதான் அதிக பொறுப்புணர்வோடு இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனெனில் நான் ஒரு சிறு தவறு செய்தாலும் அது என்னைப் பாதிப்பது மட்டுமல்லாமல், என் நாடு, என் மறைமாவட்டம், என் மொழி, என் கலாச்சாரம் என அனைத்தின் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

கொஞ்சம் மகிழ்ச்சி. கொஞ்சம் தயக்கம்.

தொடங்கியது ரோம் மறைமாவட்டத்தில் என் பணி.


3 comments:

  1. "லாத்தரன் அரண்மனை".... எந்த கிறித்துவனும் பெருமையுடன் நுழையக்கூடிய இடம்.இதன் பெருமைகளை எடுத்துக்கூறி அடுத்தவரையும் பார்க்கத்தூண்டுவது பாராட்டுக்குறியது. இன்றையப் பதிவு பெருந்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகள் தன் சக அருட்பணியாளர் நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டிய யுத்திகளை எடுத்துக்கூறுவது பெருந்தன்மையின் உச்சம்.தன்னைச் சார்ந்த எதுவும் தன் மறைமாவட்டத்தைப் பாதிக்கும் என்ற தன்னடக்கத்துடன் கூடிய பொறுப்புணர்வு தங்களைப் பல உயரங்களுக்குக் கொண்டு சேர்க்கும்.இறைவன் அருள் இன்னும் தங்களை வந்தடைய வாழ்த்துகிறேன்!!!

    ReplyDelete
  2. Anonymous4/22/2015

    Yesu Bloom wherever you are planted rightly fits you in all the aspects. Take care of your health

    ReplyDelete
  3. Anonymous4/22/2015

    Yesu Bloom wherever you are planted rightly fits you in all the aspects. Take care of your health

    ReplyDelete