Thursday, April 30, 2015

மெழுகுவத்தி

கடந்த வாரம் ஆனந்த விகடனில் வெளிவந்த சுப்ரபாரதிமணியன் அவர்கள் எழுதிய 'ஒரு கோடி மெழுகுவத்திகள்' எனும் சிறுகதை படித்தேன்.

வேதியியல் அசைன்மெண்ட் எழுதாததால், அந்த வகுப்பை கட் அடித்து அருகில் இருக்கும் மாலுக்குள் சென்று பொழுதைப் போக்கும் சுகன்யா என்ற கல்லூரிப்பெண்தான் கதாநாயகி.
'நமக்கு வரும் ஆபத்துகளை அல்லது எதிர்மறை நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அவற்றிலிருந்து ஓடிவிடுவதாலோ, அவற்றைத் தள்ளிப்போடுவதாலோ அவைகள் மறைந்துவிடுவதில்லை' என்பதுதான் ஆசிரியர் சொல்ல வரும் கருத்து.

மெழுகுவத்தி என்ற ஒற்றை வார்த்தையை எடுத்து அதில் சூப்பர் மார்க்கெட், கல்லூரி, காதல், ஏழ்மை, குடிகார அப்பா, டாஸ்மாக், காவல்துறை தியாகம் செய்யும் அம்மா, பாட்டி, தோழி, நிர்பயா, வேளாங்கண்ணி, நகரில் வேகமாக முளைக்கும் மால்கள் என பெரிய டூர் அடித்துவிடுகிறார். ஆசிரியர். சுகன்யாவின் பயம், கோபம், கவலை, மகிழ்ச்சி, வருத்தம் என அவருடைய உணர்வுகளையும் அழகாகப் பதிவு செய்கிறார்.

மூன்று இடங்கள் என்னை மிகவும் தொட்டன:

1. 'இரவில் எரியும் மெழுகுவத்திகள் பகலில் அணைத்து விடப்படுவது ஏன் தெரியுமா? இரவின் ரகசியங்களை அவை பகலுக்குத் தெரியப்படுத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான். நீயும் அதுபோல வாயை மூடிக்கொண்டு இரு.' ... 'அந்த வசனம் அப்படியே நின்னுருச்சு. வாழ்க்கையோட இருட்டு மாதிரி.

2. இந்த வரிசையில் குழந்தைகளுக்கான பொருட்கள், வௌ;வேறு வகையான சோப்கள், வௌ;வேறு வகையான பவுடர்கள், சிறுசிறு விளையாட்டுப் பொருட்கள் வெகு ஒழுங்கமைப்புடன் இருந்தன. தான் இதில் எதுவும் உபயோகித்து வளர்ந்தவள் அல்ல எனச் சொல்லிக்கொண்டாள் (சுகன்யா!).

3. இன்றைய பிரச்னையை நாளைக்காவது எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அது கல்லூரியாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் கல்லூரி கேண்டீனாக இருந்தாலும்... கல்லூரி மாணவியாக, அம்மாவாக, பாட்டியாக எல்லாவற்றையும் சந்தித்தே ஆக வேண்டும்.

இந்த கதை என்னில் விதைத்த ஒரு சிந்தனை இதுதான்:

நட்சத்திர விடுதி உணவகத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ஆலயத்தில் செபம் செய்ய, அல்லது நம் அன்பிற்குரியவரின் கல்லறையில், இறப்பின் இரங்கல் கூட்டத்தில் மெழுகுவத்திகள் ஏற்றுகின்றோம். இவை நன்றே!

மற்றொரு நேரம் நாம் ஏற்றுவது மின்தடையின் போது. மின்தடையின்போது நாம் உடனடியாக தேடுவது மெழுகுதிரிதான். மெழுகுதிரி இந்த இடத்தில் வெறும் சில நிமிட பாதுகாப்பை மட்டுமே தருகின்றது. மெழுகுதிரி விரைவில் எரிந்து முடிந்துவிடும். அது தரும் நிம்மதி சில நொடிகள்தாம். மெழுகுதிரி என்பது மின்தடை என்ற பெரிய பிரச்சினைக்கான மிகச் சிறிய தீர்வு. வாழ்க்கையில் சிறிய தீர்வுகள் பெரும்பாலும் பெரிய பிரச்சினைகளை இன்னும் அதிகமாக்கிவிடுகின்றன.

கெமிஸ்ட்ரி அசைன்மென்ட் என்ற பெரிய பிரச்சினைக்கு சுகன்யா தேர்ந்து கொண்ட சிறிய தீர்வுதான், சிறிய மெழுகுதிரிதான் சூப்பர் மார்க்கெட். ஆனால், எப்படி இருந்தாலும் அவர் அதை எழுதிதானே முடிக்கவேண்டும். ஆக, மெழுகுதிரியைத் தேடுவதற்குப் பதிலாக பிரச்சினைக்கு முடிவு கட்டலாம்தானே!

மேலும் சில நேரங்களில் சின்ன மெழுகுதிரிகள் அழகிய நிலவின் வெளிச்சத்தைக் கூட மறைத்துவிடுகின்றன.

2 comments:

  1. ஆலயம் சென்றாலே மெழுகுவர்த்தி ஏற்றி செபம் செய்ய வேண்டுமென்பது என் நீண்ட நாள் பழக்கம்.காரணம் மெழுகுவர்த்தியின் புகை போன்று நம் வேண்டுதல்களும் மேல் நோக்கிச்சென்று இறைவனின் கதவைத் தட்டும் என்பது எனக்குச் சொல்லப்பட்டது என் மனத்தில் ஆழமாகப்பதிந்துவிட்டதுதான்.ஆனால் தந்தை மின்தடை சமயத்தில் ஏற்றும் மெழுகுவர்த்தி பற்றிக் கூறியுள்ளது கொஞ்சம் சங்கடத்தைத் தந்தது.சுகன்யா வேண்டுமெனில் மால்செல்வதை விடுத்துத் தன் அசைன்மென்டை முடித்திருக்கலாம்.ஆனால் மின்தடையின் போது மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு மாற்று என்னவாக இருக்கமுடியும்? மெழுகுவர்த்தி வெளிச்சம் சிறிய தீர்வாக இருக்கலாம்.பல நேரங்களில் நாம் நிரந்தரம் என்று நினைப்பது நம்மைக்கவிழ்த்து விடுவதும்,நாம் நொடிப்பொழுது தீர்வு என்று நினைப்பது நம்மைக் கரை சேர்ப்பதும் நாம் அன்றாடம் சுவைக்கும் விஷயங்கள் தானே! நடப்பது எல்லாமே நம் நேரத்தையும்,காலத்தையும் பொருத்ததே!!!

    ReplyDelete
  2. அம்மா சங்கடம் வேண்டாம், தந்தை அவர்களுக்கும் மெழுகுவர்த்தி ஏற்றி செபம் செய்யம் பழக்கம் உண்டு. தந்தையே இந்த பதிவை வாசிக்கும்போது உங்கள் "மூன்று மெழுகுவர்த்திகள்" பதிவுதான் ஞாபாகம் வந்தது. நன்றி.

    ReplyDelete