Friday, April 17, 2015

கறுப்பு-வெள்ளை

நேற்று இரவு ஒரு கனவு. வெள்ளை வேஷ்டி கட்டி, வெள்ளை அரைக்கை சட்டை போட்டு ஏதோ ஒரு விருந்துக்குச் செல்வது போல. என் ரொம்ப நாள் ஆசை வேஷ்டி கட்டுவது. நான் முதன் முதலாக லுங்கி கட்டப் பழகிய போது வயது 17. முதன்முதலாகக் கட்டிய போது எனக்கே சிரிப்பாக வந்தது. லுங்கியை 'கைலி' என்றும் 'சாரம்' என்றும்கூட அழைப்பர். பெண்களும் 'லுங்கி' கட்டுவர் என்பது என் அம்மா சொல்லிதான் எனக்குத் தெரியும். லுங்கிகளை ரவுடிகள் தான் கட்டுவார்கள் என்று சொல்லி கடைசி வரை லுங்கி கட்டாமலே அடம் பிடித்தார் என் அப்பா. ஒரு வீட்டின் கொடியில் தொங்கும் ஒரு லுங்கி அந்த வீட்டில் வசிக்கும் ஆண்மகனின் அடையாளம். இந்த லுங்கிக்கு பல உபயோகங்கள் உண்டு. ஆண்களின் ஓய்வு ஆடை இது. அவசரத்திற்கு தலைதுவட்டும் துண்டாகவும், விரிக்கும் பாயாகவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகாலை டீக்கடை, மருத்துவமனையில் படுக்கை, இறப்பு வீடு, கசாப்பு கடை, உழைப்பாளியின் வியர்வை - என அனைத்திலும் லுங்கிக்கு ஒரு இடம் உண்டு. லுங்கியிலிருந்து ஒருவர் வேஷ்டிக்கு மாறினால் அவர் ஏதோ முக்கியமான வேலையாக வெளியே புறப்படுகிறார் என அறிந்து கொள்ளலாம். கோவில், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு லுங்கி அணிந்து போகக் கூடாது என்பது எழுதாத சட்டம்.

'தாலி நம்ம கலாச்சாரத்தைச் சார்ந்தது அல்ல!' என்று தாலி அவிழ்க்கும் அல்லது தாலி மறுக்கும் போராட்டம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்களில் மதுரையில் நடைபெறும் 'மீனாட்சி-சுந்தரேசுவரர்' திருமணத்தில் தாலி கட்டுவார்களா அல்லது மாட்டார்களா என்பது கூட ஆர்வமாக இருக்கிறது. 'லுங்கியும்', 'வேஷ்டியும்' கூட நம் கலாச்சாரத்தைச் சார்ந்தது அல்ல என்று யாராவது போராடத் தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சரி! எதுக்கு இந்த வேஷ்டி, லுங்கி கதை என்று கேட்கிறீர்களா?

இன்று நாம் பேசப்போகும் தலைப்பு 'கறுப்பு சட்டையும், வெள்ளை கழுத்துப்பட்டையும்!'.

மேற்கத்திய நாடுகளில் வேலைகளை 'ஒயிட் காலர் ஜாப்', 'ப்ளு கலர் ஜாப்' என இரண்டு வகைகளாப் பிரிப்பர். அழுக்கு ஒட்டாமல், அமர்ந்து கொண்டு, வெறும் சிந்தனை ஓட்டத்தை மையமாக வைத்துச் செய்யப்படும் வேலை 'ஒயிட் காலர் ஜாப்'. மாறாக, உடல் உழைப்பை வைத்து, வியர்க்க விறுவிறுக்க செய்யப்படும் வேலை 'ப்ளு காலர் ஜாப்'.

மேற்கத்திய நாடுகளில் அருட்பணியாளர்கள் அணியும் ஆடை கறுப்புச் சட்டையும், வெள்ளை காலரும். 'ஒயிட் காலர் ஜாப்' என்ற வார்த்தை அருட்பணியாளர்களின் வாழ்விலிருந்து வந்த வார்த்தையாக இருக்க வேண்டும். அதாவது, அலுவலகத்தில் அமர்ந்து கணிணி முன்னால் செய்யப்படும் வேலையை நாம் 'கிளரிகல் ஜாப்' என்றும், இப்படி வேலை செய்பவரை 'கிளார்க்' என்றும் அழைக்கின்றோம். 'கிளரிகல்' என்றால் 'அருட்பணியாளருடைய' என்றுதான் அர்த்தம்.

'நீ கிளரிகல் சட்டை' அணிந்து வரவில்லையா? என்று கேட்டால், 'நீ கறுப்பு சட்டை மற்றும் வெள்ளை காலர்' அணிந்து வரவில்லையா? என்று பொருள்.

என் சைசுக்கு கிளரிகல் சர்ட் கிடைக்காததால் நானாகவே, நம்ம ஞானா குமார் டெய்லர்ஸிடம் சொல்லி மூன்று சட்டைகள் தைத்துக் கொண்டு போயிருந்தேன். இரண்டு ஃபுல் ஹேண்;ட். ஒரு ஆஃப் ஹேண்ட். கறுப்பு கலர் தவிர வெள்ளை மற்றும் இளநீலத்திலும் இரண்டு சட்டைகள் கொண்டு போனேன் ரோமிற்கு. ஒரிஜினல் கிளரிகல் டிரஸ் கோட் என்பது கறுப்பு மட்டும்தான். கோடைக்காலங்களில் இளநீலம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நம்ம ஊருல இருந்து வந்தவர்கள் இங்கே எல்லா கலர்லயும் கிளரிகல் சட்டை வைத்திருக்கிறார்கள்.

கறுப்பு சட்டை, கறுப்பு பேண்ட், வெள்ளை கழுத்துப்பட்டை - இதுதான் குருக்கள் அணியும் ஆடை. வெள்ளைக் கழுத்துப்பட்டையிலும் இரண்டு வகை உண்டு: ஒன்று ரோமன் வகை - இதில் வெள்ளை நிறம் கழுத்து முழுமையும் வரும், இரண்டு நார்மல் வகை - இதில் கழுத்து பட்டன் பொருத்தும் இடத்தில் மட்டும் வெள்ளை நிறம் இருக்கும். இந்தியாவில் நாம் அணிவது போல வெள்ளை அங்கி இங்கே யாரும் அணிவது கிடையாது. அப்படியே அணிந்தாலும் கறுப்பு அங்கிதான் அணிகிறார்கள். ரோமில் திருத்தந்தை மட்டும்தான் வெள்ளை அங்கி அணிய முடியும். திருத்தந்தை கூட வெள்ளை அணிவதை விட 'ஐவரி கலர்' அல்லது 'க்ரீம் கலர்' என்று சொல்லப்படும் 'யானைத் தந்த நிறத்தையே' அணிகிறார்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ரோம் நகர் நெருங்கிய போது விமானத்தின் மாற்று அறைக்குச் சென்று, நான் அணிந்திருந்த டிசர்டைக் கழற்றி விட்டு, கறுப்பு சட்டையும், கழுத்துப்பட்டையும் அணிந்து வந்து அமர்ந்தேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள் வைத்த கண் எடுக்காமல் பார்த்தார்கள். விமானத்தில் ஆடை மாற்றுவது ஒரு விநோதமான செயல் என்று நான் உணர்ந்தேன். அவங்க பார்த்தா நமக்கென்ன! நாம என்ன நினைக்கிறோமோ அத செய்யணுமுல! செய்வோம்ல!

இரண்டு மூன்று நாட்கள் புதுப் பொண்டாட்டி கட்டியது போல, கறுப்பு சட்டையை விடாமல் போட்டுக் கொண்டே இருந்தேன். வெள்ளைக் கழுத்துப்பட்டையை அணிந்து கொண்டே இருப்பது 'எந்நேரமும் தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பது போல!' இருந்தது. கலர் சட்டை அணிந்து ஒருநாள் உணவறைக்குச் சென்றபோது, எங்கள் பாஸ் பார்த்த பார்வையிலேயே புரிந்துகொண்டேன் கலர் சட்டைகளுக்கு இங்கே அனுமதி இல்லை என்று.

ரோம் வருவதற்கு முன்பே கறுப்பு சட்டையும், வெள்ளைக் கழுத்துப் பட்டையும் ஒரு முறை அணிந்திருக்கிறேன் - இஸ்ரேல் சென்றபோது! கறுப்பு சட்டை, வெள்ளை கழுத்துப் பட்டை அணிந்த சில அருட்தந்தையர்களின் ஃபோட்டோக்களைப் பார்த்தபோதும் அந்த உடையின் மேல் எனக்கு ஈர்ப்பு இருந்தது. மேலும், ஏற்கனவே கறுப்பு நிறத்தின் மேல் ஆசை இருந்ததால், ரோம் வந்த மூன்றாவது நாள் ஒரு முடிவெடுத்தேன் - இனி கறுப்பு மேல்சட்டை மட்டுமே அணிவதென்று!

'ஊருக்கு வந்தாலும் இப்படி கறுப்பை மாட்டிக்கொண்டே திரிகிறாயே!' என்று என் அம்மா அடிக்கடி புலம்பியிருக்கிறார்கள். அதுக்கா நம்ம கொள்கையை விட முடியுமா. கறுப்பு சட்டை பிடித்ததற்கு மற்றொரு காரணம் அந்த ஆண்டு மரணம் அடைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் - ஸ்டீவ் ஜாப்ஸ் தன் வாழ்வின் 30ஆம் வயதிலிருந்து இறக்கும் வரை 'ப்ளு கலர் ஜீன்ஸ் மற்றும் கறுப்பு கலர் மேல் சட்டை' மட்டும்தான் அணிந்தாரம். இப்படி ஒரே கலர் போடுவதில் உள்ள மற்றொரு அட்வான்டேஜ் என்னன்னா, டெய்லி காலையில குளிச்சிட்டு வந்து துண்ட கட்டிக்கிட்டு, அலமாரியத் திறந்து நின்னுகிட்டு, 'இன்னைக்கு என்ன போட?' என்றும், 'இதுக்கு அது மேட்ச் ஆகுமா?' என்றும் தியானம் செய்து கொண்டிருக்கத் தேவையில்லை.

கறுப்பு சட்டை, வெள்ளைக் காலர் அணிந்துதான் இருக்க வேண்டும் என்பது யாரும் நம்மிடம் இங்கே எதிர்பார்ப்பதில்லை என்றாலும், அதை அணியும் போது நம்மையறியாமல் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது.

வத்திக்கானுக்குள் செல்லும்போதும், லாத்தரன் அரண்மனைக்கு (ரோமின் பேராயர் இல்லம்) செல்லும் போது மட்டும்தான் இப்போது கிளரிகல் டிரஸ் போடுகிறேன் என்றாலும், சில வாரங்களாக தினமும் மாலைத் திருப்பலியிலும் அணிகிறேன்.

இங்கே கறுப்பு அணிவது பிடித்திருப்பதால், நாடு திரும்பியவுடனும் 'ப்ளு-கறுப்பு' டிரஸ் கோட் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அடிக்கடி நினைத்திருக்கிறேன்.

ஆனா, கொஞ்ச நாளாக வெள்ளை வேஷ்டி அணிய வேண்டும் என்று ஒரு ஆர்வம் இருக்கிறது. ஏனெனில் 'ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கத் தேவைப்படும் தண்ணீரின் அளவு தெரிந்தால் யாரும் ஜீன்ஸ் அணிய மாட்டார்களாம்!' அந்ந அளவிற்கு இயற்கையின் ஆதாரங்கள் பயன்படுத்தப்பட்டுதான் இது தயாரிக்கப்படுகிறது.

நம்ம ஊரு க்ளைமேட்டுக்கு வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டைதான் சரி!

வெள்ளையா, கறுப்பா, ரெண்டுமா?

சீக்கிரம் முடிவெடுங்க பாஸ்!


7 comments:

  1. இத்துணை '' டிக்னிஃபைடான' உடையில் ஒரு பந்தா போஸ் கொடுத்துவிட்டு லுங்கிக் கதை தேவையா ...தெரியவில்லை.அதேன்னவோ நம்மூரில்தான் இந்த நேரத்திற்கும்,நிகழ்வுகளுக்கும் தகுந்தமாதிரி ஆடையணியும் பழக்கம் நம் மக்களிடம் இன்னும் வரவில்லை.பல நேரங்களில் நம் வசதிக்காக என்பதை விட்டு நம் ஸ்டேட்டஸைக் காட்டவே உடையணிகிறோம்.தாங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஃபாதர்! ஆனால் தங்களைப் போன்றவர்களுக்கு அந்த 'வெள்ளை அங்கி' தரும் அழகே அழகு.அகத்தின் அழகை முகத்தில் காட்டும் அழகு.ஆனால் மாறி வரும் உலகில் அவரவர் தேவைக்கேற்ப,வசதிக்கேற்ப உடையணிவதும் வரவேற்கத்தக்கதே! தந்தையை விரைவில் வெள்ளை வேட்டி,சட்டையில் பார்க்க ஆசைதான்.....

    ReplyDelete
  2. Anonymous4/18/2015

    Yesu goo morning. Completely got cured from chickenpox. Nice to read your articles. Above all nice to talk to you on Sunday. All the best happy week end sago

    ReplyDelete
  3. Anonymous4/18/2015

    Hero madri irukkeenga yesu

    ReplyDelete
  4. Anonymous4/18/2015

    Hero madri irukkeenga yesu

    ReplyDelete
    Replies
    1. Dear IAS, Thanks a lot for the wishes and prayers. How are you? How did the picnic go? God bless us - now and always. Have a nice day.

      Delete