Monday, January 7, 2019

பசும்புல் தரையில்

இன்றைய (8 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 6:34-44)

பசும்புல் தரையில்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிரும் நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். எல்லா நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்ற சில பகுதிகளில் ஒன்று இது. ஏறக்குறைய எல்லா நற்செய்தியாளர்களும் பதிவு செய்யும் ஒரு விடயத்தை இன்றைய நாள் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார்!' (6:39)

இந்த வார்த்தைகளை கொஞ்சம் ரிவைண்ட் செய்துகொள்வோம்.

'சீடர்கள் படகேறி பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.' (6:33)

அவர்களோடு இயேசுவும் செல்கின்றார். இவர்கள் செல்வதைக் கேட்ட மக்கள் இவர்களுக்கு முன் ஓடோடிச் செல்கிறார்கள். தாய்மார்கள், குழந்தைகளை வைத்திருப்போர், வயதானவர்கள், செருப்பு அணிந்தவர்கள், பிய்ந்துபோன செருப்புக்கு கயிறு கட்டி அணிந்திருந்தவர்கள், செருப்பே அணியாதவர்கள், சிறு குழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர், நொண்டிக் கொண்டிருப்போர் என அனைவரும் ஒருமிக்க ஓடுகின்றனர். ஓடியது எதை நோக்கி? பாலைநிலம் நோக்கி.

ஏனெனில், மாற்கு மீண்டும் இதைக் குறிப்பால் உணர்த்துகிறார்: 'இயேசு கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயனில்லா ஆடுகளைப் போல இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்கு பலவற்றைக் கற்பித்தார்' (6:34). பாலைநிலத்தில் இருக்கும் ஆடுகளுக்குத்தான் ஆயன் தேவை. பசும்புல் தரையில் இருக்கும் ஆடுகளுக்கு ஆயன் தேவையில்லை. அந்த ஆடுகளைப் பார்த்து பரிவுகொள்ளத் தேவையில்லை.

ஆனால், கொஞ்ச நேரத்தில் என்ன நடக்கிறது?

இயேசு அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். உணவும் கொடுக்க முனைகிறார்.

அப்போதுதான், அங்கே முதல் அற்புதம் நிகழ்கிறது. 'பசும்புல் தரை' அவர்கள் கண்களுக்குத் தெரிகிறது. தனிமையான பாலைநிலத்தில் எப்படி பசும்புல் தரை வந்தது?

பாலைநிலத்திலும் பசும்புல் தரையைக் கண்டுபிடிக்க இன்றைய நற்செய்தி மூன்று பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது:

அ. இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்வது. அதாவது, இயேசு நினைத்திருந்தால் கற்பித்துவிட்டு அப்படியே அவர்களை அனுப்பியிருக்கலாம். வெறும் போதனை பசி ஆற்றாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். 'போங்க! நல்லா சாப்பிடுங்க!' என்று அவர் அவர்களை அனுப்பியிருக்கலாம். அல்லது, 'சாப்பிட்டு வந்துட்டீங்களா?' என்று கேட்டு மௌனம் காத்திருக்கலாம். 'சாப்பிட்டியா?' என்ற கேள்வி ஒருபோதும் பசியாற்றுவதில்லை. மாறாக, சாப்பிடக் கொடுக்கும்போதுதான் பசி ஆறுகிறது. அதுதான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்வது.
ஆ. எதிர்மறை எனர்ஜியைக் கண்டுகொள்ளக் கூடாது. சீடர்களின் எனர்ஜி எதிர்மறையாக இருக்கிறது. 'இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே. ஏற்கனவே நெடுநேரம் ஆகிவிட்டது ... ஏதாவது உணவு வாங்கிக் கொள்ளுமாறு அவர்களை அனுப்பிவிடும்!' என்று யோசனை சொல்கின்றார்கள். முதலில், கேட்காமல் எந்த யோசனையும் கொடுக்கக் கூடாது என்ற இங்கிதம் தெரியவில்லை இவர்களுக்கும். அடுத்ததாக, யாருக்கு யோசனை கொடுக்க வேண்டும்? என்ற அறிவும் அவர்களுக்கு இல்லை. மேலும், இந்த யோசனையால் யாருக்கும் பயன் இல்லை. இயேசு இந்த யோசனையை அப்படியே கண்டுகொள்ளாமல் விடுகிறார். மற்றவர்களின் கருத்து தன் செயலைப் பாதிக்க இயேசு ஒருபோதும் விடவில்லை. இது நமக்கு ஒரு நல்ல ஆளுமைப் பாடம்.

இ. 'போய்ப் பாருங்கள்!' - 'இல்லை, இல்லை எனச் சொல்லாதீர்கள். போய் இருப்பதைப் பாருங்கள்' என அனுப்புகிறார் இயேசு. போகிறார்கள். பார்க்கிறார்கள். 'ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் காண்கிறார்கள்.' பல நேரங்களில் நாம் பார்க்கிறோம். ஆனால், காண்பதில்லை. நம் மனம் கூர்மையற்று இருப்பதாலும், பல கவனச் சிதறல்கள் இருப்பதாலும் நம்மால் காண இயல்வதில்லை.

இந்த மூன்று படிகளும் நடந்தவுடன்,

அங்கே பசும்புல் தரை தெரிகிறது.

ஆக, நம் வாழ்விலும், 'வாழ்க்கை நம்மிடம் எதிர்பார்ப்பதை விட இன்னும் கொஞ்சம் அதிகம் செய்யும்போது,' 'எதிர்மறையான எனர்ஜியைக் கண்டுகொள்ளாமல் விடும்போது,' 'கையில் இருப்பதைக் கூர்ந்து காணும்போது,' பசும்புல் தரை தெரியும்.

இந்த முதல் அறிகுறி நடந்தவுடன், நிறைவு என்ற அடுத்த அற்புதமும் நடந்தேறும்.

4 comments:

  1. எப்படி, அருட்பணி.யேசு அவர்களே!
    இத்துணை அருமையான பகிர்வு!...
    வளமாகிறோம் யாம்...
    வாழ்க நீவிர் குன்றாமல், குவலயம் பயனுற...
    நன்றி.

    ReplyDelete
  2. " அவர்கள் ஆயனில்லா ஆடுகள் போல் இருப்பது கண்டு இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டார்." " பரிவு" என்ற ஒன்று இருக்கும் இடத்தில் பாலை நிலம் பசும்புல்வெளியாக மட்டுமில்லை..பட்டுக்கம்பளம் விரித்த வெளியாகவும் மாறும்.இது சாத்தியமாக்க தந்தை கூறும் வழிகள்...1.கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்வது...அதாவது பொன் வைக்கும் இடத்தில் பூவையாவது வை என்கிறது முதுமொழி.2.எப்போதுமே பிறர் பேச்சுக்கு முக்கியத்துவம் தராமல் நாமே சுய முடிவெடுப்பது..இதைத்தான் தந்தை 'ஆளுமைப்பாடம்'என்கிறார் தந்தை.3.கவனச்சிதறல்களுக்கு இடம் தராமல் எதையும் கூர்மையாகப் பார்ப்பது.இத்தனையும் நடந்து முடியும்போது அங்கே " நிறைவு" எனும் அடுத்த அற்புதமும் நடந்தேறும் . இத்தனை விஷயங்கள் என்னில் சாத்தியமெனில் நான் " பாலைவெளி"யாக இருந்தால் கூடத் தப்பில்லை என்றே தோன்றுகிறது.துருப்பிடித்த மனத்தை... மூளையை அப்பப்போ தன் கூர்மையான வார்த்தைகளால் தூண்டிவிடும் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete
  3. Good Reflection Yesu

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete