Tuesday, January 22, 2019

கை சூம்பியவர்

இன்றைய (23 ஜனவரி 2018) நற்செய்தி (மாற் 3:1-6)

கை சூம்பியவர்

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து, அதற்கு இயேசுவும் ஒத்துழைத்துப் பேச அவர் பரிசேயரின் கோபத்தைச் சந்தித்துக் கொண்டார். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் பரிசேயரின் தோள்களை உரசுகின்றார் இயேசு.

இன்றைய நற்செய்தி நடக்கும் இடம் தொழுகைக்கூடம். நாள் ஓய்வுநாள்.

முக்கியமான கதைமாந்தர்கள் கை சூம்பிய நபர், இயேசு, பரிசேயர்கள்.

அவர் ஓய்வுநாளில் அவருக்கு நலம் தருவாரா என்று அவர்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்க அந்த நிகழ்வும் நடந்தேறுகிறது. 'எழுந்து நில்லும்' என்று கை சூம்பியவரிடம் சொல்லி நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார் இயேசு.

நேரடியாக அவருக்கு நலம் தராமல். 'ஓய்வு நாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை?' என்று அவர்களிடம் கேள்வி கேட்கின்றார். அவர்கள் பேசாதிருக்கிறார்கள்.

இங்கே இயேசுவின் இரண்டு உணர்வுகளையும் பதிவு செய்கின்றார் ஆசிரியர்: (அ) அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் பார்த்தார், (ஆ) அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தினார்.

பின் நலம் தருகின்றார். அவர்களும் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை ஒழிக்க சூழ்ச்சி செய்தனர்.

பேச வேண்டிய இடத்தில் பேசாத அவர்கள், பேச வேண்டாத இடத்தில் போய்ப் பேசுகிறார்கள் பரிசேயர்கள்.

இங்கே அவர்களின் நலம்பெற முடியாத சூம்பிய உள்ளமே வாசகருக்கு வருத்தம் தருகிறது.

'சூம்பிய கை' என்பது வளர்ச்சியில்லாத அல்லது வளர்ச்சி தடைப்பட்ட அல்லது வளர்ச்சி அகற்றப்பட்ட கை. ஆக, மொத்தத்தில் அந்தக் கையில் வளர்ச்சியோ, மாற்றமோ எதுவுமே இல்லை. ஏனெனில், அங்கே இரத்த ஓட்டம் இல்லை. புதிய செல்கள் பிறப்பதில்லை.

பரிசேயர்களின் மனமும் அப்படித்தான் இருக்கின்றது.

அவர்களின் வளர்ச்சி சட்டம் என்ற ஒன்றோடு முடிந்துவிடுகிறது. அதைத்தாண்டி இரக்கம் என்ற ஒன்று நோக்கி அது வளரவில்லை.

சாலையில் செல்லும்போது 'பச்சை' விளக்கு எரிகிறது என்று வாகனத்தை முன்நோக்கி செலுத்தச் சொல்கிறது சட்டம். ஆனால், 'சற்றே பொறு! முதியவர் ஒருவர் கடக்கிறார்!' என்று தடுத்து நிறுத்துகிறது இரக்கம். மனுக்குலம் சட்டத்திலிருந்து இரக்கம் நோக்கிச் செல்ல வேண்டும். நம் எண்ணங்களை, நம் மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கத்தான் சட்டங்களே தவிர, அவற்றையும் கடந்து நாம் சென்றால்தான் வளர முடியும். இல்லை என்றால் தேக்க நிலை உருவாகும். அந்தத் தேக்கம் நாற்றத்தைத் தோற்றுவிக்கும்.

நாம் நம் தனிப்பட்ட வாழ்வில் அடுத்தவரை மதிப்பிடுவதிலும், சில நேரங்களில் 'இது இப்படித்தான்' என்ற கற்பனையான சட்டங்களை மனத்தில் வைத்துச் செயல்பட்டு அவரைத் தீர்ப்பிடுகிறோம். அங்கே நம் உள்ளம் சூம்பிவிடுகிறது. மாறாக, சரி, தவறு என்பதைத் தாண்டி நல்லது கெட்டது, வாழ்வு அழிவு என்ற கேள்விக்கு வளர்வதே சால்பு.

1 comment:

  1. பல சமயங்களில்,அதிலும் முக்கியமாக வேலைத்தளங்களில் எதன் வழி நடப்பது? நம்முன் வைக்கப்பட்ட சட்டத்திற்கா இல்லை நம்முள் சுரக்கும் இரக்கத்திற்கா? குழம்பித்தான் போகிறோம்.இக்குழப்பத்திலிருந்து நம்மை வெளிக்கொணர தந்தை சொல்வது..." மனுக்குலம் சட்டத்திலிருந்து இரக்கம் நோக்கிச் செல்ல வேண்டும்." நமது மூளையிலிருந்து வரும் சரி-தவறைத் தாண்டி,நமது மனத்திலிருந்து வரும் வாழ்வு- அழிவு என்ற கேள்விக்கு வளர்வதே சால்பு.நறுக்கென்று சொன்ன நாலு வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete