Friday, January 25, 2019

திமொத்தேயு, தீத்து

இன்றைய (26 ஜனவரி 2019) திருநாள்

திமொத்தேயு, தீத்து

நம் தாய்த்திருநாடு தனது குடியரசுப் பெருநாளைக் கொண்டாடும் இந்நாளில் நம் தாய்த்திருச்சபை புனிதர்களும், ஆயர்களுமான திமொத்தேயு மற்றும் தீத்து ஆகியோரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறது.

தொடக்கத் திருஅவையின் ஆயர்களாக இருந்தவர்கள். பவுலின் உடன் உழைப்பாளர்களாக இருந்த இவர்கள் ஆயர்நிலைக்கு உயர்த்தப்படுகின்றனர். இவர்கள் வயதில் மிகவும் சிறியவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆகையால்தான், தொடர்ந்து பவுல் இவர்களுக்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். திமொத்தேயு எபேசு நகரின் ஆயராக இருந்தவர். தீத்து கிரேத்துத் தீவின் ஆயராக இருந்தவர். கடிதம் கொண்டு செல்வது, பிரச்சினைகளைத் தீர்க்க தூதுவராக அனுப்புவது போன்ற பணிகளுக்கு பவுல் திமொத்தேயுவைத்தான் பயன்படுத்துகின்றார் (காண். திபா 19:2, 1 கொரி 4:17, 1 தெச 3:2).

பவுல், 'விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை,' 'என் அன்பார்ந்த பிள்ளை' என்று திமொத்தேயுவையும், 'அனைவருக்கும் பொதுவான அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை' என்று தீத்துவையும் அன்பொழுக அழைக்கின்றார் பவுல். இவ்விரண்டு பேரின் குடும்பப் பின்புலத்தையும் நன்றாக அறிந்திருக்கின்றார் பவுல்.

இன்றைய முதல் வாசகத்தை (காண். 2 திமொ 1:1-8) நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இந்த வாசகத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. ஆயர் நிலைக்கு உயர்த்தப்படுமுன் உள்ள திமொத்தேயு

- இவர் அடிக்கடி கண்ணீர் விடுபவராக இருக்கிறார் ('உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகிறேன்' என்கிறார் பவுல்)
- வெளிவேடமற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்
- இவரின் பாட்டி மற்றும் தாயின் தவப்புதல்வராக இருக்கிறார்

ஆ. ஆயர் நிலைக்கு உயர்த்தப்பட்ட திமொத்தேயு

- அருள்கொடை தூண்டி எழுப்பப்பட வேண்டும் (அதாவது, ஒரு திரி போல. விளக்கில் எரிந்துகொண்டிருக்கிற திரி, எண்ணெயில் மூழ்கிவிடாமல் இருக்க, அல்லது திரி எரிந்து அணைந்துபோகாமல் இருக்க, அது அடிக்கடி தூண்டி எழுப்பப்பட வேண்டும்.)
- கோழை உள்ளம் விடுத்து, வல்லமை, அன்பு, கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும்
- சான்று பகர்வதைக் குறித்து வெட்கப்படாமல் இருக்க வேண்டும்

இங்கே என்ன வியப்பு என்றால், திமொத்தேயு தன் வேர்களையும், விழுதுகளையும் ஒன்றாக ஒருங்கியக்கும் திறன் பெற்றிருக்கின்றார். சிலர் தங்கள் வேர்களில் தங்கி விடுவர். இன்னும் சிலர் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு வேர்களை மறந்துவிடுவர். ஆனால், 'தான் எங்கிருந்து வருகிறோம்' என்றும் 'தான் எங்கே செல்கிறோம்' என்றும் உணர்ந்தும், வாழ்ந்தும் உயர்ந்தார் திமொத்தேயு.

இவரின் இந்த வாழ்வு நமக்கு ஒரு பாடம்.

1 comment:

  1. திமோத்தேயு- தீத்துவுக்கு பவுலுடன் இருந்த நெருக்கமான உறவு காரணத்தாலேயே இவர்களது திருநாட்களும் அடுத்தடுத்து வருவதாக நினைக்கிறேன்,பவுல் திமோத்தேயுவுக்கு குழைந்து குழைந்து எழுதியுள்ள அன்பொழுகும் மடல்கள் யாரையுமே கவரக்கூடியவை.திமோத்தேயு தன் வேர்களையும்,விழுதுகளையும் நன்கு அறிந்தவர் என்கிறார் தந்தை.ஒருவர் தான் யார்? தன் பின்புலம் என்ன? எங்கே செல்கிறோம்? என்பதை உள்ளத்தளவில் உணர்ந்திருந்தாலே போதும்...அவர் சேருமிடம் சிறப்பாயிருக்கும் என்ற எண்ண ஓட்டத்தைத் நம்மில் பதிய வைக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete