Sunday, January 13, 2019

விட்டுவிட்டுச் சென்றார்கள்

இன்றைய (14 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 1:14-20)

விட்டுவிட்டுச் சென்றார்கள்

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவிலிருந்து திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலம் தொடங்குகிறது. இந்தப் பொதுக்காலத்தின் வார நாள்களில் நாம் மாற்கு நற்செய்தியாளரோடு பயணம் செய்யவிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பணித்தொடக்கத்தையும் அவர் தன் முதற்சீடர்களை அழைத்த நிகழ்வையும் வாசிக்கின்றோம்.

இயேசுவின் முதற்சீடர்கள் அழைக்கப்படும் நிகழ்வு கலிலேயக் கடற்கரை ஓரத்தில் நடந்தேறுகிறது. ஆக, கடவுள் மனிதர்களை அழைக்கும்போது பெரும்பாலும் அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருப்பவர்களாகவே இருக்கிறார்கள். அல்லது இறைவெளிப்பாடு நாம் வேலை பார்க்கும் இடத்தில் நடந்தேறுகிறது.

'சென்றார் - கண்டார் - சொன்னார் - வந்தார்கள்'

இவ்வளவு சீக்கிரம் நடந்திருக்குமா இந்த அழைத்தல்?

இன்று துறவற அல்லது அருள்பணி அழைத்தலுக்கு அழைக்கப்பட்டவர் 'ஆம்' என்று சொல்ல ஏறக்குறைய 10 முதல் 14 ஆண்டுகள் ஆகின்றன. அப்படியே 'ஆம்' என்று சொல்லி வந்தாலும், அன்றாடம் இதை மறுஆய்வு செய்யும் சூழல்களும் உருவாகிவிடுகின்றன.

இயேசுவின் முதற்சீடர்களால் ஒரே முறை அதுவும் உடனடியாக எப்படி 'ஆம்' என்று சொல்ல முடிந்தது?

இன்று நாங்கள் 'ஆம்' என்று சொல்வதற்கு முன் நிறைய படிக்கவும், பணி அனுபவம் பெறவும் வேண்டியுள்ளது. ஆனால், இயேசு முதற் சீடர்களுக்கு எந்தவொரு பாடமும் நடத்தவில்லை, பணி அனுபவமும் தரவில்லை, நீண்ட உரை ஆற்றவில்லை. ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் கொடுக்கிறார்: 'நீங்கள் மனிதரைப் பிடிப்பவர் ஆவீர்கள்!' இந்த வாக்குறுதியை முதற்சீடர்கள் புரிந்துகொண்டார்களா என்றுகூடத் தெரியவில்லை.

'என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்று இயேசு சொன்னவுடன், சீமோனும் அந்திரேயாவும் தங்கள் 'வலைகளை விட்டுவிட்டு,' 'உடனே' அவரைப் பின்பற்றினார்கள். ஆக, இவர்கள் தங்கள் வாழ்வாதாரமான வலைகளையும், மீன்பிடித் தொழிலையும் 'உடனே' விடுகின்றனர். இரண்டாம் குழுவினரான யாக்கோபும் யோவானும் தந்தை செபுதேயு, கூலியாள்கள், படகு எனத் தங்கள் உறவு, தங்கள் அதிகாரம், தங்கள் உடைமை அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றனர்.

இது எப்படி சாத்தியம்?

ஜென் மதத்தில் ஒரு சொலவடை உண்டு: 'நீ தயாராக இருக்கும் போது உன் மாஸ்டர் தோன்றுவார்.' கலிலேயக் கடற்கரையில் அன்று எவ்வளவோ பேர் இருந்திருப்பார்கள். நிறைய சப்தம் இருந்திருக்கும். அந்தச் சப்தங்களின் நடுவில் இவர்கள் இயேசுவின் சப்தத்தைக் கேட்கக் காரணம் அவர்கள் 'தயாராக இருந்தார்கள்.' அவர்கள் தயாராக இருந்ததால் மாஸ்டர் தோன்றினார்.

நேற்று ஜே.கே. என அழைக்கப்படும் ஜித்து கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வராலாற்றை வாசிக்கத் தொடங்கினேன். தெயோசோஃபிக்கல் சொஸைட்டி எனப்படும் அமைப்பில் அவர் இருந்தபோது, இவர் அமெரிக்கா சென்று அங்கு நோய்வாய்ப்பட்ட தன் தம்பி நித்யாவுடன் இருக்கும் ஒருநாள் அந்த இரவு அவருக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. 'உண்மையைக் கண்டறியும் அவர்', 'உண்மையை ஒவ்வொருவரும்தான் கண்டுகொள்ள வேண்டும். எந்தப் புனித நூலும், எந்த குருவும் அதற்கு உதவ முடியாது' என்ற தான் கண்ட அனுபவத்தை உணர்கின்றார்.

முதல் சீடர்களின் அழைத்தல் அனுபவமும் எந்தவொரு பரிந்துரைக் கடிதமும், அல்லது நடுவில் ஒருவரும் இல்லாமல் நடந்தேறுகிறது.

நான் எப்போது தயாராக இருக்கின்றேனோ, அப்போது அவர் தோன்றுவார். அவரைக் காணும் அந்த நொடியில் நானும் என் வலைகளையும், உறவுகளையும் விட்டுவிட்டுப் பின்செல்ல முடியும்.

ஆம் என்ற பதிலை அவருக்கு ஒவ்வொருவரும் தனித்தனியே கொடுக்க வேண்டும்.

அவர் இன்றும் வருகிறார். அவருக்காகத் தயாராய் இருப்பவர்கள் 'ஆம்' என்று பின்தொடர்கின்றனர். மற்றவர்கள் தொடர்ந்து தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டும், தங்கள் வேலையாள்களை அடக்கி ஆண்டுகொண்டும், படகின்மேல் உரிமை கொண்டாடிக்கொண்டும், தங்கள் உறவுகளைப் பேணிக்காத்துக்கொண்டும் இருக்கின்றனர்.


2 comments:

  1. இயேசுவின் குரலுக்குத் தங்களையே அர்ப்பணித்த அருட்பணியாளர்க்கான பதிவு.அவர் குரலைக்கேளாமல் வலைகளைப்பழுது பார்த்துக்கொண்டும்.....தங்கள் உறவுகளைப்பேணிக்காத்துக்கொண்டும் இருப்பவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.ஆனால் சப்தங்களின் நடுவில் அவர் குரலைக்கேட்டு அவரைப்பின்தொடர்ந்த நம் அருட்பணியாளர்களுக்காக இறைவனை வேண்டுவோம்..10,14 ஆண்டுகள் என்ன, தங்களின் ஆயுட்காலம் முழுதும் தங்களை அழைத்தவருக்காக 'மனிதரைப் பிடிப்பவர்களாக' தங்களின் வாழ்க்கையைத் தொடர வேண்டுவோம்.' சென்றார்- கண்டார்- சொன்னார்- வந்தார்கள்.' உங்கள் வாழ்க்கையிலும் நிறைவேறட்டும்! தன் வார்த்தைகளின் வலுவை மெய்ப்பிக்க ஜென் மத்த்தையும்,ஜித்து கிருஷ்ணமூர்த்தியையும் உதவிக்கழைத்த தந்தைக்கு என் செபங்களும்!! வாழ்த்துக்களும்!!! இறைவன் அனைத்து அருட்பணியாளர்களையும் கரம் பிடித்து வழி நடத்துவாராக!!!

    ReplyDelete