Wednesday, January 16, 2019

இன்றே என எண்ணி

இன்றைய (17 ஜனவரி 2019) முதல் வாசகம் (எபி 3:7-14)

இன்றே என எண்ணி

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியின் (காண். மாற் 1:40-45) ஒத்த பகுதியான லூக் 5:12-16 (தொழுநோயாளரின் நோய் நீங்குதல்)-ஐ நாம் கடந்த வார நாள்களில்தான் வாசித்து சிந்தித்தோம். எனவே, இன்றைய சிந்தனைக்காக முதல் வாசகத்தை எடுத்துக்கொள்வோம்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலை எழுதியவர் பவுல் அல்லர் என்பது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பவுல் இத்திருமடலின் ஆசிரியர் இல்லை என்று சொல்லப்படுவதற்கான சில சான்றுகளில் ஒன்று, 'அறிவுரைப் பகுதி.' பவுலின் திருமடல்கள் பொதுவாக, முன்னுரை-உள்ளடக்கம்-அறிவுரை என்ற அமைப்பில் இருக்கும். ஆனால், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் இந்த அமைப்பு சற்றே மாறியிருக்கிறது. முன்னுரை, வாழ்த்து என எதுவும் இல்லாமல் தொடங்கும் மடல், ஒரு கருத்தியில் மற்றும் அதனைத் தொடர்ந்து அறிவுரைப் பகுதி என்ற அமைப்பைக் கொண்டுள்ளது.

'உள்ளத்தைக் கடினமாக்கிக் கொள்ளுதல்' என்னும் கருத்தியலும், அதைத் தொடர்ந்து வரும் அறிவுரைப் பகுதியும்தான் இன்றைய முதல் வாசகம்.

இம்மடலின் ஆசிரியர் தன் குழுமம் நம்பிக்கை கொண்டு வாழ வேண்டும் என விரும்புகிறார். பழைய ஏற்பாட்டில் தங்களின் பாலைநிலப் பயணத்தின்போது இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கும் அவரின் அடியாரான மோசேக்கும் எதிராகக் கிளர்ச்சி செய்கின்றனர் (காண். எண் 14:1-35). 'அக்கிளர்ச்சியின் போது அவர்கள் கொண்டிருந்த 'கடின இதயத்தை' நீங்கள் கொண்டிருக்காதீர்கள்' எனத் தன் குழுமத்திற்கு அறிவுறுத்துகின்றார் ஆசிரியர். அப்படி கடின உள்ளம் கொண்டிருப்பவர்கள் கடவுள் தரும் ஓய்வைக் கண்டடைய மாட்டார்கள் என்பதும் இவரின் கருத்து. 'ஓய்வு' என்பது 'இறப்பு' அல்லது 'மறுவாழ்வு' அல்லது 'மோட்சம்' ஆகியவற்றைக் குறிப்பது அல்ல. மாறாக, இவ்வுலகிலேயே நாம் அனுபவிக்கும் 'அமைதி,' 'நலம்' ஆகியவற்றைக் குறிப்பது.

இந்த ஓய்வைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

கடின உள்ளம் கொண்டிராமல் கடவுளை நம்ப வேண்டும்.

இரண்டு நாள்களுக்கு முன் பேருந்தில் ஒருவரைச் சந்தித்தேன். சந்திப்பு விடைபெறும்போது கை குலுக்க கை நீட்டினேன். அவரும் கை நீட்டினார். 'உங்க கை ரொம்ப மிருதுவாக இருக்கிறது' என்றார். 'உங்க கை மேல யார் கை பட்டாலும் மிருதுவாகத்தான் தெரியும்' என்று நான் சிரித்தேன். ஏனெனில், அவருடைய கை அவ்வளவு கடினமாக இருந்தது. அதற்கு அவர் சொன்னார், 'நான் ஒரு ஓட்டுநர். அன்றாடம் கைகள் ஸ்டியரிங் என்னும் இரும்பு வளையத்தைப் பிடிப்பதால் கை மரத்துப் போய்விட்டது' என்றார். ஆக, செடி போல மிருதுவாக இருக்க வேண்டியது நாள்பட்ட பயன்பட்டால் கடினமான மரமாகிவிடுகிறது.

நாள்தோறும் நாம் செய்கின்ற செயல் நம் கைகளையே மரத்துப்போகச் செய்கின்றது. அதே நேரம், நாள்தோறும் என நினைக்கும் நாம் கடின உள்ளம் கொண்டவராகிவிடுகிறோம்.

ஆனால், மற்றொரு வித்தியாசமான அறிவுரையை இங்கு தருகிறார் ஆசிரியர்: 'ஒவ்வொரு நாளும் இன்று என எண்ணி வாழுங்கள்!'

'நாள்தோறும்' என வாழ்வதற்கும், 'இன்று' என வாழ்வதற்கும் என்ன வித்தியாசம்?

'நாள்தோறும்' என வாழும் வாழ்க்கையில் புதுமை இருக்காது. வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கும். அது போரடிக்கும். ஆனால், 'இன்று' ஒருநாள்தான் என வாழும் வாழ்க்கையில் புதுமை இருக்கும். இனிமை இருக்கும். இளமை இருக்கும்.

பெரியவர்கள் 'நாள்தோறும்' வாழ்கின்றனர். ஆனால், குழந்தைகளே 'இன்று ஒருநாள்' என வாழ்கின்றார்கள். ஆகையால்தான், அவர்களின் உள்ளமும் உடலும் மென்மையாக இருக்கிறது.

கடின உள்ளம் கடவுளை மட்டுமல்ல, மற்றவர்களையும் நமக்குள் அனுமதிக்காது.

ஒவ்வொருவரையும் 'இவர்' எனவும், ஒவ்வொரு பொழுதையும் 'இன்று ஒருநாள்' எனவும் எண்ணி வாழ அழைக்கிறது இன்றைய முதல் வாசகம்.


2 comments:

  1. "இன்று ஒருநாள் "
    என் இனிமையாக வாழ அழைப்பு விடுத்த அன்பர் யேசு வுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  2. " ஓய்வு" என்பது நாம் அனுபவிக்கும் 'இறப்பு','மறுவாழ்வு','மோட்சம்' என நாம் நினைத்துக்கொண்டிருக்க, அப்படியல்ல...அது 'அமைதி','நலம்' ஆகியவற்றைக்குறிக்கிறது என்பது செய்தி.' ஒவ்வொரு நாளும் இன்று என எண்ணி வாழுங்கள்'. காரணம் அதில் புதுமையும்,இனிமையும்,இளமையும் நிறைந்திருக்கும் என்கிறார் தந்தை.கடவுளையும்,மற்றவரையும் அனுமதிக்காத 'கடின உள்ளம்'விடுத்துக் 'குழந்தை உள்ளத்துடன்' வாழும் வரம் கேட்போம்.' நாள் தோறும்' மற்றும் 'இன்று'...இவ்வார்த்தைகளூடே உள்ள இந்த துள்ளிய வித்தியாசத்தைக் கூட இனம் கண்டு பகிர தந்தை ஒருவரால் மட்டுமே முடியும்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete