Wednesday, January 30, 2019

விளக்குத்தண்டின் மீது

இன்றைய (31 ஜனவரி 2019) நற்செய்தி (மாற் 4:21-25)

விளக்குத்தண்டின் மீது

நேற்று மாலை மருந்தகம் சென்றேன். திருச்சியின் பிரபலமான பி.ஜி. நாயுடு ஸ்வீட்ஸின் மேலப்புதூர் கிளையைத் தாண்டி இருக்கிறது அம்மருந்தகம். அம்மருந்தகத்தை நெருங்கச் சில அடிகளே இருக்க, மூதாட்டி ஒருவர் பார்வையற்ற ஒருவரை அவர் ஊன்றி வந்த குச்சியைப் பிடித்து சாலையில் அழைத்து வந்துகொண்டிருந்தார். இம்மூதாட்டி ஸ்வீட் கடையின் வெளியில் அமர்ந்து யாசகம் செய்பவர். பார்வையற்ற நபர் இவருடைய வயதை ஒத்தவராகவும், நீட்டான பேண்ட், சர்ட் அணிந்தவராகவும் இருந்தார். இருளாகிவிட்டதாலும், அவர் குச்சியை ஊன்றி நடக்க வேண்டியிருந்ததாலும் ஒரு வேளை பார்வையற்ற நபரை இப்பெண் அழைத்துக்கொண்டு போகிறார் என நினைத்துக்கொண்டேன். மருந்தகம் சென்று திரும்பும்போது இப்பெண் திரும்பவும் தன் இடம் திரும்பிக்கொண்டிருந்தார். வழக்கமாக கூனிக் குறுகி அமர்ந்திருக்கும் இப்பெண் பெருமிதத்தோடு நடந்து வந்துகொண்டிருந்தார். 'அடுத்தவரின் கையை நம்பி இருந்த நான் இன்று ஒருவருக்கு கை கொடுத்தேன்!' என்ற எண்ணம் பெருமிதம் தந்ததா? அல்லது 'நான் இன்று ஒரு நல்லது செய்தேன்!' என்ற எண்ணம் பெருமிதம் தந்ததா? அல்லது 'என் இயல்பே நல்லது செய்வதுதானே!' என்ற எண்ணம் பெருமிதம் தந்ததா?

தன் இருப்புக்கு, தன் இயக்கத்திற்கு அடுத்தவர் இடும் யாசகத்தைச் சார்ந்திருக்கும் பெயரில்லா இந்தப் பெண் எனக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தின் உருவகமாகத் தெரிகின்றார்.

தன் விளக்கை அவர் மரக்காலின் உள்ளேயோ, கட்டிலின் கீழேயோ வைக்காமல் விளக்குத் தண்டின் மீது வைத்தார்.

தொடர்ந்து இயேசு சொல்லும் வார்த்தைகள் ஒரே நேரத்தில் ஆறுதலாகவும், நெருடலாகவும் இருக்கின்றன:

'எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும். இன்னும் கொஞ்சம் சேர்த்தும் கொடுக்கப்படும்'

- ஆக, வாழ்வில் இது செய்தால் இது கிடைக்கும் என்பதில்லை. அப்படியும் கிடைக்கலாம். அதற்கு மேலும் கிடைக்கலாம். ஏன்? கிடைக்காமல்கூடப் போகலாம்!

'உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்'

- அப்படின்னா பேங்க் லாக்கரை உடைத்து 5 கோடி மதிப்புடைய தனக்கு உரிமையில்லாத நகையை ஒருவர் உரிமையாக்கிக்கொண்டால் அவருக்கு இன்னும் 5 கோடி கொடுக்கப்படுமா? அல்லது ஒரு பெருநிறுவனம் சின்னஞ்சிறு நிறுவனங்களை எல்லாம் விழுங்குகிறது என்றால் அதன் பசிக்கும் இன்னும் பல நிறுவனங்கள் பலியாகுமா?

இல்லை.

'உள்ளவர்' என்பதையும் 'இல்லாதவர்' என்பதையும் அளவிடும் அளவுகோல் எனக்கு வெளியில் இல்லை. மாறாக, எனக்கு உள்ளேதான் இருக்கிறது.

ஒன்றும் இல்லாததாக உணர்ந்த அந்தப் பெண் தன் உதவும் குணத்தை தன்னுடைய கையிருப்பாகப் பார்த்தார். ஆக, அது அவரின் மகிழ்வைப் பெருக்கும்.

ஒன்று மட்டும் நிச்சயம்.

நம் அளவை மாறுபட்டாலும், நமக்கு அளக்கப்படும் அளவை மாறுபட்டாலும், நம்மை உள்ளவர் அல்லது இல்லாதவர் என்று மற்றவர் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், எனக்கு மிகுதியாகக் கூடினாலும் கூடவில்லை என்றாலும்,

என் விளக்கை நான் கட்டிலின் கீழ் வைத்துவிடக்கூடாது!

அப்படி வைப்பது - யாருக்கும் பயன் இல்லாமல் போவதோடல்லாமல், கட்டிலும் எரிந்துவிட, விளக்கும் அணைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

கண் தெரியாதவரைக் கரை சேர்த்த அந்த யாசகி விளக்குத் தண்டின்மீது விளக்கு.

அவர் அந்த நிலைக்கு வர முயற்சி அவசியம்.

தன் இருப்பை விட்டு எழ வேண்டும்.

தனக்கு அந்நேரம் வரும் யாசகத்தை இழக்க வேண்டும்.

தான் திரும்பி விரும்போது தன் இடம் பறிபோயிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இருந்த இடத்தில் எரிவதும், கட்டிலின் கீழ் எரிவதும், மரக்காலில் எரிவதும் பாதுகாப்பாகத் தோன்றலாம். ஆனால், அந்தப் பாதுகாப்ப எந்நேரமும் ஆபத்தாக மாறலாம்.

1 comment:

  1. " நம் அளவை மாறுபட்டாலும்,நமக்கு அளக்கப்படும் அளவை மாறுபட்டாலும்,நம்மை உள்ளவர் அல்லது இல்லாதவர் எனமற்றவர்சொன்னாலும்,சொல்லாவிட்டாலும்,எனக்கு மிகுதியாகக் கூடினாலும் கூடவில்லை என்றாலும்,என் விளக்கை நான் கட்டிலின் கீழ் வைத்துவிடக்கூடாது."பசுமரத்தாணியாய் அப்பிக்கொள்ளும் வார்த்தைகள்.எங்கேனும் ஒரு எரியும் மெழுகுவர்த்தியைப் பார்த்தால்கூட தந்தையின் வரிகள் நினைவிற்கு வரும் என்பதில் ஐயமில்லை.தந்தையின் கண்களுக்குப் பட்ட யாசகி போல் நம் வழியிலும் எத்தனையோ பேர் வரத்தான் செய்கிறார்கள்.அவர்களை ஏறெடுத்துப்பார்க்கவும், அவர்களுக்கு ஆனதைச் செய்யவும் நம் அகக்கண்களும்,புறக்கண்களும் திறந்திருந்தால் நாம் பாக்கியவான்களே! கண்கண்டகாட்சியைக் காவியமாக்கும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete