Tuesday, October 30, 2018

நெ ரு க் க ம்

நாளைய (31 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 13:22-30)

நெ ரு க் க ம்

'நான்' என்று நான் என்னைச் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு 'நீ' என்ற மற்றொரு குழு தேவைப்படுகிறது. இந்த இரண்டும் நேருக்கு நேர் நிற்கும்போது அங்கே பேசுபொருளாக 'அவர்' என்ற மூன்றாம் நபர் வருகிறார். ஆக, 'நான்' நானாக இருப்பதற்கு, 'நீ' மற்றும் 'அவர்' தேவைப்படுகின்றனர். இந்த 'நான்-நீ-அவர்' முக்கோணத்தில் நாம் சிலரோடு அருகிருக்கிறோம், சிலரிடமிருந்து அருகாமையில் இருக்கிறோம். அருகையும், அருகாமையையும் நிர்ணயம் செய்வது 'நெருக்கம்.' 'அறிமுகம்' - இதுதான் நெருக்கத்தின் முதற்படி. ஒருவர் மற்றவரோடு அறிமுகம் கிடைத்தபின் அங்கே வருவது 'அவா' அல்லது 'ஆவல்'. நாம் அறிமுகம் ஆகும் எல்லாரோடும் அல்லது எல்லார்மேலும் நமக்கு 'ஆவல்' வருவதில்லை. சிலரிடம் வரும் அந்த ஆவல், 'இணக்கமாக' மலர்கிறது. 'இணக்கம்' நெருக்கத்திற்கு அருகில் உள்ள வார்த்தை. 'இணக்கத்தில்' ஒருவர் மற்றவரின் சொல், செயல், உணர்வு ஆகியவற்றிற்கு இணங்குகின்றார்.

'அறிமுகம்' - 'ஆவல்' - 'இணக்கம்' - இந்த மூன்றும் வந்தவுடன் மனித உறவுகளில் நெருக்கம் வந்துவிடுகிறது.

ஆனால், இறை-மனித உறவில், 'அறிமுகம்,' 'ஆவல்,' 'இணக்கம்' ஆகிய மூன்றையும் தாண்டி நெருக்கத்திற்கு, மற்றொரு 'நெருக்கம்' தேவைப்படுகிறது என்பதை நாளைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்கிறது.

எப்படி?

'எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்!' என்று தன்னிடம் சொல்பவர்கள் ஆண்டவரிடம், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீர்' என்று தாங்கள் ஆண்டவரோடு கொண்டிருந்த 'அறிமுகம்,' 'ஆவல்,' 'இணக்கம்' ஆகியவற்றை முன்வைக்கின்றனர்.

ஆனால், ஆண்டவரோ, 'இடுக்கமான வாயில் வழியே உங்களையே நெருக்கி நுழையுங்கள்' என 'நெருக்கத்தை' முன்னிறுத்துகின்றார்.

இவ்வாறாக, 'நெ ரு க் க ம்' வளர 'நெருக்கம்' தேவை.

நாம் படிப்பு அல்லது வேலைக்குச் செல்லும்போது சில நேரங்களில் குறிப்பு நபர்கள் அல்லது சிபாரிசு கடிதங்களைக் கொண்டு செல்கிறோம். சில இடங்களில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பல இடங்களில் இவற்றோடு சேர்த்து நம் செயலும் திறனும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

இதையொட்டியே, வெறும் குறிப்பு நபர் அல்லது சிபாரிசு கொண்டு விண்ணகத்தை உரிமையாக்கிக்கொள்ள முடியாது என்கிறார் இயேசு. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, இறைவாக்கினர் வழிவந்தோர் தங்கள் முன்னோரின் நற்செயல்களால், அவர்கள் வழியாக மீட்பை உரிமையாக்கிக்கொள்ளலாம் என்ற 'ஆட்டோமேடிக்' மனநிலையில் இருக்கின்றனர். அதை இயேசு 'மேனுவல் மனநிலைக்கு' மாற்றுகின்றார். சிபாரிசு இல்லாத புறவினத்தார் பந்தியில் அமர, நீங்கள் புறம்பே தள்ளப்படலாம் என எச்சரிக்கின்றார்.

எனக்கும் இறைவனுக்குமான உறவில், அறிமுகம், ஆவல், இணக்கம் தாண்டி என்னால் என் செயல்களால் - ஏனெனில், செயல்கள் செய்யும்போது நம்மை நாமே நெருக்க வேண்டி இருக்கிறது. செயல்கள் இல்லாமல் ஓய்ந்திருக்கும் இடத்தில் நெருக்கம் தேவையில்லை - நெருங்க முடிகிறதா?

3 comments:

  1. நெருங்க முயற்சிக்கிறோம்...
    எம்மை செயல்களால் நெருக்கி...
    நன்றி well done.

    ReplyDelete
  2. நான்- நீ- அவர்- நெருக்கம்- ஆவல்- அறிமுகம்- இணக்கம்..... என்னே ஒரு வார்த்தை விளையாட்டு! ஒரு வார்த்தைக்கு அர்த்தத்தைத் தேடுவதற்குள் அடுத்த வார்த்தைப் பிரவாகம்! வாழ்த்துக்கள் தந்தைக்கு! "நெ ரு க் க ம் வளர நெருக்கம் தேவை."சில நிமிடங்கள் தேவைப்பட்டன இதில் பொதிந்து கிடந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ள. தங்கள் முன்னோர்களின் வழியாக மீட்பை உரிமையாக்கிக்கொள்ளலாம் என்ற 'ஆட்டோமேடிக்' மனநிலையில் இருந்த மக்களை' மேனுவேல் மனநிலைக்கு' மாற்றுகிறார் இயேசு என்கிறார் தந்தை." எனக்கும் இறைவனுக்குமான உறவில்அறிமுகம்,இணக்கம்,ஆவல் தாண்டி என் செயல்களால் மட்டுமே நான் நெருங்க முடியும்." புரிகிறது.ஆனால் " செயல்கள் இல்லாமல் ஓய்ந்திருக்கும் இடத்தில் நெருக்கம் தேவையில்ல" . செயல் இல்லாத இடத்தில் நெருக்கத்தால் எந்த பயனும் இல்லை என்கிறாரா தந்தை ? புரியவில்லை.சில இடங்களில் தந்தையின் எழுத்தைப் புரிந்து கொள்ள என் படிப்பு போதவில்லை என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  3. நெருங்க முயற்சிக்கிறோம்...
    எம்மை செயல்களால் நெருக்கி...
    நன்றி well done.

    ReplyDelete