Wednesday, October 24, 2018

மனநெருக்கடி

நாளைய (25 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 12:49-53)

மனநெருக்கடி

'பணநெருக்கடி' கேள்விப்பட்டிருப்போம்.

அது என்னங்க 'மனநெருக்கடி'?

'ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்' என்கிறார் இயேசு.

நான்கு நாள்களுக்கு முன்னதாக பஞ்சாபின் அமிர்தசரஸில் இராவணன் வதை பார்த்துக்கொண்டிருந்த ஒரு கூட்டத்தின்மேல் இரயில் மோதி 51 பேர் இறந்தனர். இன்னும் பலர் கவலைக்கிடமாகி உள்ளனர். இறந்தவர்கள் அல்லது காயம்பட்டவர்களில் பெரும்பாலும் இரயில் மோதியபின் ஏற்பட்ட ஜனநெருக்கடியில் இறந்தவர்கள்தாம்.

இலவச வேஷ்டி சட்டை வழங்கும் விழா, திரைப்பட நடிகர்களின் வருகை, அரசியல் கூட்டம், ஆபத்து போன்ற நேரங்களில் ஏற்படும் ஜனநெருக்கடிகள் நமக்குப் பரிச்சயமானவை. ஒருவரின் மேல் ஒருவர் ஏறுவதுதான் ஜனநெருக்கடி.

அதே போல, நம் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் கூட்டமாக ஒன்றின்மேல் ஒன்று ஏறினால் அது மனநெருக்கடி. இந்த மாதிரியான நேரங்களில் நம் மனம் கலைந்துபோய் இருக்கும். மண்ணும், தூசியுமாக இருக்கும். ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க நம்மால் இயலாத ஒரு நிலை ஏற்படும்.

இயேசு தன் பணி முடிவுறும் காலத்தில் தன் இறப்ப அல்லது முடிவு நெருங்க நெருங்க பல மனக்குழப்பங்களைச் சந்தித்திருப்பார். 'எது என் உளம்?' 'எது கடவுளின் திருவுளம்?' 'ஏன் இப்படி?' 'எனக்கு மட்டும் ஏன் இப்படி?' என நிறைய குழப்பங்கள் அவரின் மனதில் எழுந்திருக்கும். இந்த நிலையைத்தான் 'அமைதியற்ற நிலை' அல்லது 'தீ' என்கிறார் இயேசு.

ஆனால், குழப்பங்களின் இறுதியில் அமைதி வரும் என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது.

'முடிவு இனிதாக இல்லையெனில் அது இன்னும் முடிவு இல்லை' என்பது ஆங்கிலப் பழமொழி.

நாளைய முதல் வாசகத்தில், 'அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!' என எபேசு நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்துகிறார் பவுல். இந்த அன்பிற்கு அடித்தளமாய் இருப்பது கிறிஸ்துவின் அன்பு. அந்த அன்பை அறியும்போது அனைத்தும் தெளிவாகிறது. அந்த அன்பை அறிதல் நமக்கு மனநெருக்கடியையும் தரலாம். ஆனால், அறிந்தபின் வரும் அமைதி நிலையானது.

3 comments:

  1. ' பண நெருக்கடி' மற்றும் ' ஜன நெருக்கடி' என ஆரம்பித்து ' மன நெருக்கடி' குறித்து ஆராய முற்படுகிறது இன்றையப்பதிவு.ஒருவர் மீது ஒருவர் ஏறுவதுவே ' ஜன நெருக்கடி' எனவும் ' நம் எண்ணங்கள் ஒன்றன் மேல் ஒன்று மோதுவதால் மனத்தில் ஏற்படும் குழப்பமான நிலையே ' மன நெருக்கடி' எனவும் விவரிக்கிறார் தந்தை."அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ?" என்பது போல் நம் முகத்தின் இறுக்கமும், குழப்புமுமே காட்டிவிடும் இந்தக்குழப்பம் நம்மனத்தில் கொட்டிவிடும் மண்ணையும்,தூசியையும்.மாபரனுக்கு மன நெருக்கடி எனில் இயலாமையின் மொத்த வடிவமான மனிதனின் நிலை? நாம் அத்தனை பேருமே அனுபவித்திருப்போம்.ஆனால் எந்த புயலுமே தன் வேலை முடிந்தவுடன் விட்டுச் செல்வது " அமைதி" யை மட்டுமே என்பதை நாம் அனைவருமே அனுபவித்திருப்போம்.அந்த அமைதியை நாம் அனுபவிக்க நமக்கு அடித்தளமாய் இருக்கும் " அன்பு" எனும் ஆணி வேரே நமக்கு அடித்தளமாய் இருக்கட்டும் என்கிறார் தந்தை.அன்பைக் கொடுப்போம்; அன்பைப் பெறுவோம். தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. நன்றாய் சொன்னீர்...நண்பரே...
    நனி நன்று.

    ReplyDelete
  3. Good reflection Yesu.

    ReplyDelete