Sunday, October 28, 2018

ஆபிரகாமின் மகள்

நாளைய (29 அக்டோபர் 2018) நற்செய்தி (லூக் 13:10-17)

ஆபிரகாமின் மகள்

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பதினெட்டு ஆண்டுகளாய் தீய ஆவி பிடித்திருந்த ஒரு பெண்ணுக்கு குணம் தருகின்றார்.

இயேசுவின் சமகாலத்து யூதர்களுக்கு மூன்று விடயங்கள் இங்கே இடறலாக இருக்கின்றன:

அ. ஓய்வுநாளில் இயேசு நலம் தந்தது

ஆ. ஓய்வுநாளில் பெண்ணுக்கு நலம் தந்தது

இ. அப்பெண்ணை 'ஆபிரகாமின் மகள்' என அழைத்தது

இயேசுவின் சமகாலத்து யூதர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் ஓயாமல் இருந்தனர். 'நலம் தருவது' ஓய்வுநாளில் செய்யக்கூடாது ஒரு செயலாக இருந்தது. மேலும், அவசரத்திற்காக ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதாக இருந்தாலும், அதை ஒரு பெண்ணுக்காக மீறுவது இன்னும் இடறலாகக் கருதப்பட்டது. '18 ஆண்டுகள் பொறுத்துக்கொண்டாள். இன்னும் ஒரு நாள் பொறுக்க மாட்டாளா?' என்பதுதான் மற்றவர்களின் கேள்வியாக இருக்கிறது.

ஆனால், இயேசு அவர்களின் வெளிவேடத்தைக் கடிந்துகொள்கின்றார். மாடு, கழுதை போன்றவற்றிற்கே தேவையானதை ஓய்வுநாளில் செய்வதுபோல மனிதர்களுக்குச் செய்யக்கூடாதா? எனக் கேட்கின்றார்.

இன்னும் ஒரு படி போய், அப்பெண்ணை, 'ஆபிரகாமின் மகள்' என அழைக்கிறார் இயேசு.

'ஆபிரகாமின் மகன்' என்ற சொல்லாடல் இயேசுவால் சக்கேயுவைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது: 'இவரும் ஆபிரகாமின் மகன்தானே!' (காண். லூக் 19:9). மேலும், யோவான் நற்செய்தியில் இயேசுவுக்கும் யூதர்களுக்குமான வார்த்தைப் போரில் 'ஆபிரகாமின் மக்கள் அல்லது பிள்ளைகள்' என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது: 'அவர்கள் அவரைப் பார்த்து, 'ஆபிரகாமே எங்கள் தந்தை' என்றார்கள். இயேசு அவர்களிடம், 'நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போல செயல்படுவீர்கள்' என்றார்.' (யோவா 8:39)

'ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு  ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான்' என்ற இயேசுவின் வார்த்தைகள், 'ஆபிரகாமின் பிள்ளைகள்' யாருக்கும் அடிமைகளாக இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. 'அடிமையாக' இருப்பவர்களைத்தான் கயிற்றால் அல்லது சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். மேலும், அடிமையாக இருந்த இந்தப் பெண் 'கூன் விழுந்த நிலைக்குப் போய்விடுகின்றார்.' கூன் விழுந்தால் நம் பார்வை சுருங்கிவிடும். 'இவ்வளவுதான் உலகம்' என நினைக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால், இயேசு நலம் தந்தவுடன் அனைவரையும் அனைத்தையும் நிமிர்ந்து பார்க்கிறார். மேலும், 'நிமிர்தல்' தன்மானத்தின், சுதந்திரத்தின் அடையாளமாகவும் இருக்கிறது.

இன்று, நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்: நான் யாருக்கு அல்லது எதற்கு அடிமை? என் பார்வையைச் சுருக்கும் என் அடிமை நிலை என்ன? நான் நிமிர்ந்து பார்க்கத் தயாரா?

நிற்க.

நாளைய நற்செய்தியில் வரும் தொழுகைக்கூடத் தலைவரின் வார்த்தைகளில் மிக அழகான நேர மேலாண்மை ஒளிந்திருக்கிறது.

'வேலை செய்வதற்கு ஆறு நாள்கள் உண்டே!' என்கிறார் அவர்.

அதாவது, அந்தந்த நாளுக்குரிய அந்தந்த நாளில் செய்வது.

'ஆறு நாள்களில்' வேலை என்றால் வேலை செய்துவிட்டு, ஏழாம் நாளில் ஓய்ந்திருப்பது. ஏழாம் நாளில் உழைப்பது அல்ல.

ஆக, நான் செய்யும் வேலையை, நான் எடுக்கும் ஓய்வை மறுஆய்வை செய்ய வைக்கிறது இத்தலைவரின் வார்த்தைகள்.

3 comments:

  1. Well interpreted dear Reverend Father Yesu!
    இயேசுவின் மூன்று முற்போக்கு அணுகுமுறையை முக்கியமாய் முன்வைத்துள்ளீர்...
    Marvelous approach!
    "ஆபிரகாமின் மகள்"---Girls -- we are previleged...
    Thank you..
    God bless all your good efforts..

    ReplyDelete
  2. " அபிரகாமின் மகளை 18 ஆண்டுகளாக சாத்தான் கட்டி வைத்திருந்தான்" எனவும்,"அபிரகாமின் பிள்ளைகள யாருக்கும். அடிமைகள் அல்ல" என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார் தந்தை.அவர்கூற்றுப்படி நாமும் கூட அபிரகாமின் பிள்ளைகள் எனில் நம்மை எந்த விஷயமாவது அடிமைப்படுத்தலாமா? அப்படி யாயின் நம்மை அடிப்படுத்துவது எது? நம்மை யோசிக்க வைக்கும் கேள்வி.ஒருவேளை தந்தை குறிப்பிடும் அந்த ஏழாம் நாள் நாம் கடந்து வந்த ஆறு நாட்களை அலசிப்பார்க்கவும்,எதிர்கொள்ளப்போகும் அடுத்த ஆறு நாட்களுக்கு நம்மைத் தயார் செய்யவும் இருக்கலாம்.அதனால் அந்த ஏழாம் நாளை ' ஓய்வு நாள்' என்று சொல்வது சரியா? தெரியவில்லை.அந்தந்த நாளுக்குத் தேவையானதைச் செய்வோம்; அபிரகாமின் மக்களாக வாழ்வோம். எந்த விதமான ஓய்வுமின்றி வாரத்தின் ஏழு நாட்களிலும் ஒன்றுபோல் உழைக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete